ஓட்டமாவடி:இம்மாதம் 268 பேருக்கு டெங்கு பாதிப்பு - sonakar.com

Post Top Ad

Friday 25 December 2020

ஓட்டமாவடி:இம்மாதம் 268 பேருக்கு டெங்கு பாதிப்பு

 


ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டிசம்பர் மாதம் மாத்திரம் 268 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார். 


ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோய் அதிகரித்து காணப்படும் வகையில் இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியாக பல்வேறு வேலைத் திட்டங்கள் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் இடம்பெற்று வருகின்றது. 


அந்தவகையில் வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்ளப்படுவதுடன், விழிப்புணர்வு ஏற்படுத்தல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இடம்பெற்றது. 


இதில் வீடு வீடாக சென்று டெங்கு பரிசோதனை நடவடிக்கையின் போது டெங்கு நோய் பரவும் வகையில் நீர் தாங்கி மற்றும் கழிவுகளை வைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், இதற்கு பிறகு இவ்வாறு சுத்தம் இல்லாமல் இருந்தால் நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டனர்.


சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் இடம் பெற்ற இவ்வேலைத்திட்டத்தில் ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், ஓட்டமாவடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் இருபத்தி நான்காம்; திகதி வரை 747 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பெண் ஒருவர் மரணித்துள்ளதாகவும், இந்த மாதம் 268 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார். 


ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோய் அதிகரிப்பினை கட்டுப்படுத்தும் நோக்கில் ஓட்டமாவடி பிரதேச செயலகம், ஓட்டமாவடி பிரதேச சபை, சமூகமட்ட அமைப்புக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


- எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments:

Post a Comment