72வது சுதந்திர தினம்: ACJU வாழ்த்து - sonakar.com

Post Top Ad

Monday 3 February 2020

72வது சுதந்திர தினம்: ACJU வாழ்த்து



நம் நாடு ஸ்ரீலங்காவின் 72வது சுதந்திர தினத்தை நாம் நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்றோம். வருடாந்தம் நாம் நினைவு கூர்ந்து மகிழும் சுதந்திர தினம் எமக்கு கடந்தகால நிகழ்வுகளை கண் முன்னே கொணர்ந்து நிறுத்துகிறது.



சுதந்திரத்தை பெறுவதற்காக பல்லினத்தையும் சேர்ந்த நம் மூதாதையர்கள் உழைத்தனர். இன, மத வேறுபாடின்றி சுதந்திரத்தை பெற்றுக் கொள்வதும், அதன் அடிப்படையில் ஐக்கியமாக வாழ்வதுமே அவர்களது குறிக்கோளாக காணப்பட்டது. ஆதலால் ஒவ்வொரு சமூகமும் தத்தமக்குரிய உரிமைகளைப் பெற்று நாட்டு முன்னேற்றத்திற்காக பாடுபட்டனர்.

அவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்த எல்லா அரசாங்கங்களிலும் பங்காளிகளாக இருந்து நாட்டின் கல்வி, பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் எல்லா அபிவிருத்திகளிலும் பங்கு கொண்டனர் என்பதே உண்மையான வரலாறாகும்.

சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்த தலைவர்கள் பெற்றுத் தந்த இச்சுதந்திர பூமியில் வன் செயல்கள் நிகழ்வதை, மத நிந்தனை செய்யப்படுவதை இந்நாட்டு எந்தப் பிரஜையும் அனுமதிக்க முடியாது.

அந்த வகையில் புதிய ஜனாதிபதியின் கீழ் இக்குறிக்கோள்கள் மேலும் வலுப்பெற வேண்டுமென ஆசிக்கிறோம். ஜனாதிபதியின் அக்கிராஷன உரையில் கூறியது போன்று அவர் இந்நாட்டு சகல பிரஜைகளினதும் ஜனாதிபதி என்பதை எடுத்துக்காட்ட நல்லருள் பாலிக்க வேண்டுமென பிரார்த்திக்கிறோம்.

சகல சமூகங்களும் ஒற்றுமையாக இருந்து நாட்டில் நல்லபிவிருத்தி ஏற்பட பாடுபடுவோம். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நம் நாடு சகல வளமும் பெற்று சுதந்திர இலங்கையாக மிளிரப் பிரார்த்திக்கின்றது.

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments:

Post a Comment