கடந்த ஞாயிறு நடாத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பிரதானியாக அடையாளங்காணப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பை உருவாக்கி நடாத்தி வந்த சஹ்ரான் ஹாஷிமின் பெற்றோர், இரு சகோதரர்கள் மற்றும் சகோதரியொருவர் ஏப்ரல் 18ம் திகதி முதல் ஊரில் இல்லையென தொடர்ந்தும் அங்கு வாழும் மேலும் ஒரு சகோதரியூடாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சஹ்ரானின் போக்கு 2017ம் ஆண்டு முதல் மாற்றம் பெற்றதாகவும் அதன் பின் தனது கணவரும் தானும் அவரது பேச்சுக்களை கேட்பதைத் தவிர்த்துக் கொள்ள ஆரம்பித்ததாகவும் விளக்கமளித்துள்ளார் யசீரா ரிசாத் என அறியப்படும் சஹ்ரானின் மேலும் ஒரு தங்கை.
ஐந்து பேர் கொண்ட குடும்பத்தில் சஹ்ரானே முதலாமவர் எனவும் ஆறு வாரங்களுக்கு முன் ஒரு தடவை குறித்த நபர் வீட்டுக்கு வந்து சென்றுள்ளதாகவும் அது தொடர்பிலும் காவற்துறைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன் போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் பெயரில் தொடர்ந்தும் இயங்கி வரும் அமைப்புக்கு தௌபீக் என்பவர் தற்சமயம் தலைமை தாங்குவதோடு சஹ்ரானைத் தமது பள்ளிவாசலிலிருந்தும் விலக்கி வைத்ததாகவும் தெரிவிக்கிறார்.
எவ்வாறாயினும், காத்தான்குடியிலிருந்தும் , நாட்டின் ஏனைய பகுதிகள் மற்றும் வெளிநாட்டிலிருந்தும் சஹ்ரான் தொடர்பில் கிடைக்கப்பெற்றிருந்த அனைத்து முறைப்பாடுகள் மற்றும் உளவுத்தகவல்கள் அலட்சியப்படுத்தப்பட்டு வந்துள்ளமை தற்போது உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment