நியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத்தாக்குதலை தூர நோக்கோடு திட்டமிட்டே நடாத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிகவும் நிதானமாக, பெருந்தொகை ஆயுதங்களுடன் பள்ளிவாசலுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்கள் மீது பயங்கரவாத தாக்குதலை நடாத்திய குறித்த நபர், தான் இறுதியில் கைதாகப் போவதை எதிர்பார்த்தே இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதோடு அதிகபட்சமாக 27 வருட சிறைத்தண்டனையை அனுபவித்து விடுதலையாகப் போவதாகவும் முன்னரே அறிவித்துள்ளதாக தற்போதைய ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவங்களின் பின்னணியில் மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை அனைவரும் தமது கைதினை எதிர்பார்த்தே செயற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. குறித்த நபர்கள் தம்மை வெள்ளையின போராளிகளாக சித்தரித்து இதற்கு முன்னரே பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதுடன் பிரன்டனினால் கைவிடப்பட்ட துப்பாக்கிகளில் உதுமானிய பேரரசு காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான குறிப்புகளும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இத்தாக்குதலை நியுசிலாந்தில் மூன்று மாதங்களாகத் தங்கியிருந்து திட்டமிட்டதாக பயங்கரவாதி பிரன்டனிடமிருந்து கைப்பற்றப்பட்ட குறிப்புகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment