
அகில இலங்கைக் கம்பன்கழகம் 2019 ஆம் ஆண்டுக்கான கொழும்புக் கம்பன் விழாவினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடாத்தவுள்ளது. இவ்விழாவை முன்னிட்டு, இலக்கிய புரவலர் அல்ஹாஜ் ஹாசீம் உமர் அவர்களின் அனுசரணையோடு கழகம் இஸ்லாமிய தமிழிலக்கியப் பேச்சுப் போட்டியை பாடசாலை மாணவர்கள் நடாத்தவுள்ளது. இப் போட்டி ஒரே பிரிவாக மட்டுமே இடம்பெறும். இதில் பாடசாலை மாணவர் எவரும் கலந்து கொள்ளலாம்.
போட்டியாளர்கள் சுயமாகத் தயாரிக்கப் பெற்ற விண்ணப்பப் படிவத்தில் தமது முழுப் பெயர், வயது, பிறந்ததிகதி, முகவரி, தொலைபேசி இலக்கம், மாணவராயின் பாடசாலையின் பெயர், ஆகியவற்றைக் குறிப்பதோடு தாம் கலந்து கொள்ளவுள்ள போட்டி விபரங்களையும் குறிப்பிட்டு, இல. 12, இராமகிருஷ்ண கார்டன், கொழும்பு -6 எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும். கடித உறையின் மேற்பக்கத்தில் போட்டியாளர் விண்ணப்பிக்கும் போட்டி விபரத்தையும் எழுதுதல் வேண்டும். 2018 டிசம்பர் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்க வேண்டும். போட்டி நடைபெறும் திகதி போட்டியாளர்களுக்குத் தனித்தனியே அறிவிக்கப்படும். பாடசாலை மாணவர்களது விண்ணப்பங்களைத் தனித்தோ, மாணவர் மன்றங்களின் ஊடாக ஒரே தொகுதியாகவோ அதிபரின் உறுதிப்படுத்தலுடன் அனுப்பி வைக்கலாம்.
இப் போட்டியில் கலந்து கொள்வோர் சீறாப்புராணம் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள பின்வரும் தலைப்புக்களில் நடுவர் குழாமினால் உடன் தரப்படும் தலைப்பு ஒன்றில் தம் ஆற்றலை வெளிப்படுத்தவேண்டும்.
1. தமிழ்க் காப்பிய மரபில் சீறாப்புராணம்.
2. உமறுப்புலவரின் கவித்துவம்.
3. சீறாப்புராணம் காட்டும் இஸ்லாமியப் பண்பாடு.
4. சீறாப்புராணம் காட்டும் அறம்
5. கம்பரும் உமறுப்புலவரும்
தரமான நடுவர் குழுவினால் தெரிவு செய்யப்பெறும் முதல் மூன்று போட்டியாளர்களுக்கும் நடைபெறவுள்ள கம்பன் விழாவில் தங்க, வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும், சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கப்படும் எனவும் போட்டிகளில் இயல்பாளுமையை வெளிப்படுத்தும் போட்டியாளர்கள் கம்பன் விழா நிகழ்ச்சிகளில் இணைத்துக் கொள்ளப்படுவர் எனவும் கொழும்புக் கம்பன் கழகம் அறிவித்துள்ளது.
-HO
No comments:
Post a Comment