திடீரென விழித்துக்கொண்ட முஜிபுர் ரஹ்மான்: சகாவுல்லா சாடல்! - sonakar.com

Post Top Ad

Sunday 10 June 2018

திடீரென விழித்துக்கொண்ட முஜிபுர் ரஹ்மான்: சகாவுல்லா சாடல்!


அல்லாஹ்வை மிக மோசமாக இழிவு படுத்ததிய  ஞானசார தேரர் மீது நடவடிக்கை எடுக்கத்தவறிய  நல்லாட்சி அரசாங்கத்திற்கு முஜிபுர் ரகுமான் தொடர்ந்து வக்காளத்து வாங்கி பேசுவது அவரது கட்சி பற்றைக்காட்டுவதாக மேல் மாகாண சபை உறுப்பினர் சகாவுல்லாஹ் குறிப்பிட்டார்.

ஊடகங்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையில்  மேலும் குறிபிட்டுள்ளதாவது,

அன்று முஸ்லிம்கள் மீது குண்டூசி விழுந்த போதெல்லாம் பொங்கி எழுந்த முஜிபுர் ரஹ்மான் அண்மைக்காலமாக சமூகத்தின் மீது குண்டு விழுந்தாலும் மௌனத்தை கடைபிடித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில்  கோத்தாபய ராஜபக்ச தொடர்பில் கடும் விமர்சனங்களை முன்வைத்து பேசியிருந்தார்.

அல்லாஹ்வை மிக மோசமாக இழிவுபடுத்திய  ஞானசார தேரர் மீது நடவடிக்கை எடுக்கத்தவறிய  நல்லாட்சி அரசாங்கத்திற்கு முஜிபுர் ரகுமான் தொடர்ந்து வக்காளத்து வாங்கி பேசுவது அவரது கட்சி பற்றைக்காட்டுகிறது.


தன்னை பொன்னயன் என கூறிய ஒரு தேரர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத ஒரு தலைவனை கொண்ட கட்சிக்கு அவர் வக்காளத்து வாங்கி பேசுவதின் மூலம் இவரது சமூகப்பற்றையும் கட்சி பற்றையும் காட்டிவிட்டார்.

ஞானசார தேரருக்கு நோர்வே ஊடாக பணம் வழங்கி முஸ்லிம்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்தது யார் ? என்பதை இன்று முஸ்லிம்கள் நன்கு அறிந்து கொண்டுள்ளனர். 

அன்றும் இன்றும் பொதுபல சேனா உள்ளிட்ட இனவாதிகளை பாதுகாப்பதும் அவர்களுக்கு வக்காளத்து வாங்கி பேசுவதும் சம்பிக்க போன்ற அரசாங்கத்தின் பங்காளிகள் தான் என்பது இன்று  முஸ்லிம் சமூகத்திற்கு வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

அலுத்கமை கலவரத்தின் சூத்திரதாரிகள் ராஜபக்‌ஷக்கள் என்றால்  நான்கு வருடங்கள் கடந்தும் ஏன் அலுத்கமைக்கு இதுவரை ஒரு விசாரணை கமிஷனை வைக்கவில்லை என நாம் முஜிபுர் ரஹ்மானிடம் கேட்க விரும்புகிறோம்.

கோத்தபய ராஜபக்‌ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் இந்த நாட்டில் இனவாத மதவாத அமைப்புகள் உருவானதாக கூறும் முஜிபுர் ரஹ்மான் இந்த நாட்டில் மஹிந்த ஆட்சிக்கு வர முன்னர் சிங்கள உறுமய ,ஹெல உறுமய போன்ற அமைப்புகள் கட்சிகள்  உருவான வரலாறுகளையும், அவர்கள் முன்னெடுத்த முஸ்லிம் வெறுப்பு பிரசாரங்களையும்,நல்லாட்சி அரசின் பங்காளி சம்பிக ரனவக அல்ஜிஹாத் அல்கைதா என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு எதிராக புத்தகம் எழுதிய வரலாறுகளையும் தேடிப்படுக்க வேண்டும்.

ஞானசார தேரர் மட்டக்களப்பில் நீதிமன்ற உத்தரவை கிழித்து எரிந்த போது ,அவர் அல்லாஹ்வை அவமானப்படுத்தி பேசி போது , ரனிலை பொன்னயன் என கூறியது,ஞானசாரவுக்கு ஒரு மணித்தியாளத்தில் மூன்று பிணை வழங்கப்பட்ட  முஜிபுர் ரஹ்மான் நித்திரையில் இருந்தாரா என நாம் கேட்க விரும்புகிறோம்.

அலுத்கமை கலவரம் நடக்க முன்னர் அங்கு பௌத்தர்கள் கூட்டம் நடத்த ஊர்வலம் செல்ல  கோத்தாபய ராஜபக்‌ஷ அனுமதி கொடுத்ததாக கூறும் முஜிபுர் ரஹ்மான் கிந்தோட்டையில் விஷேட அதிரடிப்படை பாதுகாப்பை திடிரென நீக்கியது யார் என்பதையும், அம்பாறையில் பள்ளிவாயல்,திகனயில் முஸ்லிம்கள்  தாக்கப்பட்ட போது பொலிஸாரை வேடிக்கை பார்க்க உத்தரவிட்டது யார் என்பதையும் இலங்கை முஸ்லிம்களுக்கு தெளிபடுத்த வேண்டும் எனவும் மேல் மாகாண சபை உறுப்பினர் சகாவுல்லாஹ் குறிப்பிட்டார்.ss

No comments:

Post a Comment