ஓட்டமாவடி: வாகன விபத்தில் 57 வயது நபர் வபாத்! - sonakar.com

Post Top Ad

Sunday 20 May 2018

ஓட்டமாவடி: வாகன விபத்தில் 57 வயது நபர் வபாத்!


மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் ஓட்டமாவடி பஸார் பள்ளிவாயலுக்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

ஓட்டமாவடியில் மீன் சந்தையில் இருந்து ஏறாவூர் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், வாழைச்சேனையில் இருந்து ஓட்டமாவடிக்கு சென்ற முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


இவ்விபத்தில் வாழைச்சேனை ஹைறாத் வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான முச்சக்கரவண்டி சாரதி ஏ.எல்.எம்.ஹனீபா (வயது 57) என்பவரே உயிரிழந்துள்ளதுடன், எறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மஞ்சுள (வயது 34) என்பவர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

மரணமடைந்தவர் ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.நௌபரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

-அனா


No comments:

Post a Comment