ஜம்இய்யத்துல் உலமாவின் விஷேட ஊடக அறிக்கை - sonakar.com

Post Top Ad

Tuesday 6 March 2018

ஜம்இய்யத்துல் உலமாவின் விஷேட ஊடக அறிக்கை



நேற்று 05.03.2018ஆம் திகதி கண்டியை அண்மித்த திகன, தெல்தெனிய பகுதியில் நடந்த கலவரத்தால் உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் ஏற்பட்டதை யாவரும் அறிவர். இதில் பலகோடி ரூபாய் பெறுமதியான முஸ்லிம்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன.

சன்மார்க்க அறிஞர்களான உலமாக்கள் தம்மாலான முயற்சிகளை இவ்விடயமாக எடுத்து வருகின்றனர். அரசாங்கத்திற்கு விடயங்களை எடுத்துச் சொல்லி தொடர்ந்தும் இந்த கலவரம் பரவி விடாமலிருக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு பொறுப்பு வாய்ந்தவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டும் வருகின்றன. அரசியல் தலைமைகளும் ஏனைய அமைப்புகளும் அவரவர் சக்திக்கேற்ப இதுதொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகள் நேற்று பிரதமரை நேரடியாக சந்தித்து இது விடயமாக கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர். அதே போன்று ஜம்இய்யாவின் கண்டிக் கிளையினூடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கண்டி மாவட்ட முக்கியஸ்தர்களோடு கண்டி மாவட்ட ஜம்இய்யா களத்திற்கு விஜயம் செய்து மேற்குறித்த வேலைகளை செய்து வருகின்றது. அத்துடன் அரபுக்கல்லூரி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் துஆ பிராத்தனைகளில் ஈடுபடுமாறும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நிலைமையை மேலும் மோசமாக்கிக் கொள்ளும் வண்ணம் நாம் நடந்து கொள்ளலாகாது. கலவரம் ஏனைய இடங்களுக்கு பரவும் வகையில் எந்தவொரு நடவடிக்கையும் இடம்பெறாமல் நாம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று துஆ பிரார்த்தனை செய்து அல்லாஹ்வின் அருளை கேட்டது போல் தொடர்ந்தும் நாம் அதைச் செய்து வரவேண்டும். அத்துடன் பாதிப்பு தொடர்பான விடயங்களை உரிய முறையில் ஆவணப்படுத்தி, சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பாதிக்கப்பட்டோர் முன்வர வேண்டும். மேலும் முஸ்லிம்கள் சட்டத்தை கையில் எடுக்காமல் தத்தமது பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதுடன், தற்பாதுகாப்புக்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்ட விடயங்களை நடைமுறைப்;படுத்த ஊர் முக்கியஸ்தர்களும் மஸ்ஜித் நிர்வாகிகளும் ஜம்இய்யாவின் கிளைகளும் பொது மக்களும் ஒத்துழழைப்புடன் செயற்படுமாறு ஜம்இய்யா சகலரையும் கேட்டுக் கொள்கின்றது.
அசாதாரண நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் தலைமைகள் குறித்து வீண் விமர்சனங்களை முன்வைப்பதையும் பரப்புவதையும் பொதுமக்களாகிய நாம் தவிர்ந்து கொள்வதே அறிவுடமையாகும். அதே போன்று உறுதியில்லாத தகவல்களை பரிமாறிக் கொள்வதை முற்றாக தவிர்த்து ஊர்ஜிதமான தகவல்களை மாத்திரம் தேவைக்கேற்ப பரிமாறுமாறும் சகலரையும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.
பிறர் உள்ளங்களில் எம்மைப்பற்றிய நல்லெண்ணங்கள் வளர அல்லாஹ்வின் உதவியை நாம் வேண்டி நிற்க வேண்டும். மனிதனின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நாட்டப்படியே மாற்றம் கொள்ளக்கூடியன. எனவே எம்மைப் பற்றிய குரோத மனப்பான்மையை பிறரின் உள்ளங்களிலிருந்து நீக்கி, கடந்த காலங்களில் போல் பரஸ்பர ஒற்றுமையோடு வாழ நல்லருள் பாலிக்க வேண்டுமென அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு சகலரையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கிறது.
அஷ்ஷைக் எம்.எம். அஹ்மத் முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments:

Post a Comment