ஒரு நாட்டைக் கட்டியாளும் நிர்வாகத்தில் மக்கள் நேரடியாகத் தலையிடா விட்டாலும் தமக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
அனுப்பி வைக்கப்படுபவர் கட்சி பேதங்களுக்கு அப்பால், மக்களின் நலன் கருதி மக்கள் பிரச்சினைகளைப் பேசி தீர்வுகளைப் பெற்றுத்தருவார்கள் என்பதே அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் நிலவும் சாதாரண மக்களின் எதிர்பார்ப்பு.
இலங்கையைப் பொறுத்தவரை முஸ்லிம்களால் நிரப்பப்பட்டிருக்கும் 21 நாடாளுமன்ற ஆசனங்கள் ஆட்சியை நிலைப்படுத்தவும், கவிழ்க்கவும் வல்ல ஸ்தானத்தில் இருக்கிறது. இருப்பினும் பதவிகளை அடிப்படையாக வைத்தே கட்சி அரசியல் நடாத்தப்பட்டு வரும் நிலையில் இன்று சமூகமே அல்லோலகல்லோலப்பட்டும் கையாலாகாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பிரதிநிதிகள்.
அளுத்கம வன்முறையின் போது எதிர்க்கட்சியாக இருந்து கேள்வியெழுப்பி மக்கள் உணர்வுகளைத் தொட்டு, ஆதரவைப் பெற்ற பலர் இன்று ஆளுங்கட்சியின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் அனைவருமாக இன்று சமூகத்துக்காக ஒற்றுமையுடன் ஒன்று சேர்ந்து ஒரு நல்ல முடிவை எடுக்கக் கூடவா முடியாது என்பதே அங்கலாய்ப்பு!
No comments:
Post a Comment