கண்டி: நிவாரணப் பணிகளும் தற்போதைய தேவைகளும் - sonakar.com

Post Top Ad

Wednesday 21 March 2018

கண்டி: நிவாரணப் பணிகளும் தற்போதைய தேவைகளும்



கண்டி நிவாரண  அமைப்பு மையத்தின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ. எல். அப்துல் கப்பாருடனான விசேட செவ்வி.

நேர்காணல்: - .இக்பால் அலி

கண்டியினுடைய தற்போதைய  களநிலவரம் தொடர்பாக கூறுவீர்களா?

கண்டியில்   பல இடங்களில் நிலவிய அசாதாரண சூழ்நிலை மாறி தற்போது  எல்லா யின மக்களும் அமைதியாகவும் சுமூகமாகவும்  அன்றாடப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  எனினும் பாதிக்கப்பட்ட மக்கள் அந்த துயரத்திலிரிந்து இன்னும் மீளவில்லை.  எவ்வளவோ கஷ்டப்பட்டு வருடக் கணக்கில் சேகரித்துக் கட்டிய வீடுகளெல்லாம் தீக்கிரையாக்கப்பட்டும், அல்லும் பகலும் ஊண் உறக்கமின்றி தேடிய வியாபார  இஸ்தலங்கள் எல்லாம் இழந்து நிர்க்கதியான நிலையில் உள்ளனர்.   இதனால்; மனவிரக்தியுற்று சோகத்திலேயே மீளவும் முடியாத நிலையில் இந்த மக்கள் இருக்கின்றனர். 

உங்கள் அமைப்பினால் முன்னெடுக்கப்படும் இழப்பீடுகள் பற்றிக் கூறுங்கள்

கண்டி மாவட்ட அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாக் கிளையின் கீழுள்ள பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.  திகன தும்பர, கண்டி நகரம், அக்குறணை,  கலதெகரை,  யட்டிநுவர, வத்தேகெதர மடவளை, எந்துருதென்ன, உல்லந்தப்பிடிய, முறுத்தகஹமுல, உடிஸ்பத்துவ, தென்னக்கும்புர, கட்டுகஸ்தோட்டை, உகுரஸ்பிட்டிய, கெங்கல்லை. பலகொல்ல, மெதமஹநுவர என இன்னும் பல முஸ்லிம் கிராமங்கள் தாக்குதலுக்கு உ;ள்ளாகியுள்ளன.  

பொருளாதார ரீதியிலான அழிவுகளே இங்கு கூடுதலாக காணப்படுகிறது.  ஒரு வாலிபர் இறந்தது உட்பட  பலர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.  இவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்கள். இதில் கணிசமானவர்கள் சிகிச்சை பெற்று வீடு சென்று விட்டனர்.   அதிலும் இன்னும் இரண்டு  பேர் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.  அதில் ஒன்று மௌலவி சதக்கத்துல்லாஹ் அவர்களும்   மற்றையது ஹிஜ்ராபுர பள்ளிவாசலில் கடமையில் இருந்த நிஜாம்தீன் என்பவர்.  

இதில்.  மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர் தான் மௌலவி சதக்கத்துல்லாஹ.;  இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆலோசகர். இவர் கடந்த ஆறாம் திகதி அம்பத்தென்னயில் வைத்து பஸ்ஸை வழிமறித்து  பஸ்ஸுக்குள் ஏறிய இரு வன்முறையாளர்களினால் தலையில் ஒருவர்  இரும்பாலும் மற்றுமொருவர் பொல்லாலும் கடுமையான  முறையில் தாக்கியுள்ளனர். படுகாயமுற்ற இவர்  கண்டி வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டு  தலையில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு ஒரு வாரகாலமாக  ஐ சி. யூ பிரிவில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது அதிவிசேட சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார்.  

ஆரம்பக் கணிப்பீட்டின் படி 150 கோடி ரூபாவுக்கும் மேலான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த தரவுகள் இதை விடவும் அதிகரிப்பதற்கு சந்தர்ப்பம் இருக்கிறது. எனவே தரவுகளை கே. ஆர். சி. சி. ஊடாக தரவுகளைப் பெற்றுக் கொண்டு இருக்கின்றோம்.  இன்னும் சம்பூரமாணகப் பரிபூரணப்படுத்தப்பட வில்லை. அரசாங்கம் இந்த விடயத்தில் வீடுகளையும் பள்ளிவாசல்களையும் கட்டிக் கொடுப்பதற்றாகாக எங்களிடம் வாக்களித்து இருக்கின்றார்கள். எனவே அந்தப் பணியை ஆரம்பிக்கின்ற வரைக்கும்  நாங்கள் கண்டி மாவட்ட உலமா   உலமா சபையின்  கீழ் இயங்கும் கண்டி நிவாரண அமைப்பு மையம்  (கே. ஆர். சி. சி)  என்கின்ற அமைப்புடன் இணைந்து செயற்படுகின்றோம். 

நீங்கள் எத்தகைய பணிகளை முன்னெடுக்கவுள்ளீர்கள் ?

தற்போதைக்கு எமது சமூகத்தில் இருந்து வருகின்ற உதவிகளைச் சேகரித்துக் கொண்டு இருக்கின்றோம்.  இதுவரைக்கும் நாங்கள் அந்த உதவிகளை எவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வில்லை. எனினும் உலருணவுதான் ஆரம்பத்தில் தேவையாக இருந்தது. அது வந்து தாராளமாக கிடைத்துள்ளது. எமது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் எமது சகோதரர்கள்  வழங்கிய அந்த உதவியின் ஊடாக  பாதிக்கப்பட்ட எல்லாப் பிரதேச மக்களுக்கும்  வழங்குவதற்கான  போதுமானளவு உலருணவு இருக்கின்றது.  

தற்போதைக்கும் எமக்குத் தேவைப்படுவது பணமாகும்.  இவர்களுடைய வியாபார இஸ்தலங்களில் முழுமையாகப் பாதிக்கப்பட்ட இடங்கள் இருக்கின்றன.  எனவே முழுமையாகப் பாதிக்கப்பட்ட இடங்களை கட்டி யெழுப்பி அவர்களுடைய வியாபாரத்தையும் கைகொடுத்து கட்டி எழுப்ப  வேண்டி இருக்கின்றது. அதேவேளை வீட்டுத் தளபாடப் பொருட்கள் நிறையச் சேதமாக்கப்பட்டு இருக்கிறது.  அந்த தளபாடப் பொருட்களையும் பணம் கொடுத்து வாங்கிக் கொடுக்க வேண்டும்.   குறிப்பாக அரசாங்கம் புனர் நிர்மாணப் பணிகளில் முன்னெடுக்கின்ற வரையிலும்  தேவையைக் கருத்திற் கொண்டு ஏனைய மனிதாபிமான  பணிகளில் நாங்கள் ஈடுபட்டு வருகின்றோம்.

அதேபோன்று பெண்கள், சிறுவர்கள், உள ரீதியாக பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்கள்.  ஏனென்றால் அவர்கள் எதிர்பார்க்காமல் திடிரென்று ஏற்பட்ட அந்த அனர்த்தத்தின் ஊடாக மனோ நிலை பெரியளவு பாதிக்கப்பட்டுள்ளன.   இதனால் தங்களுடைய வீடுகளுக்கு பெண்கள் செல்வதற்கு அச்சப்படுகின்றார்கள். அதேபோன்று சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்ல தயங்குகின்றார்கள். எனவே கே. ஆர்.சி. சி ஊடாக   மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபையிலுள்ள அஷ்ஷெய்க் ஹிதாயத்துல்லா மற்றும் அகில இலங்கை வை. எம். எம். ஏ. தலைவர் ரிஸ்மி தலைமையில் உளவளம் ஆற்றுப்படுத்தல் வேலைத் திட்டங்களை நாங்கள் தற்போது முன்னெடுப்பதற்குத் தயாராக இருக்கின்றோம். இது எதிர் வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ளது.  

அதனுடன் இலவச மருத்துவ முகாமும் நடைபெறவுள்ளது. அதற்காக வைத்திய நிபுணர்கள் ஆயத்தமாக இருக்கின்றார்கள். இதில் விசேடமாக இன மத பேதமின்றி சிங்கள, தமிழ் முஸ்லிம் வைத்திய அதிகாரிகள் கலந்து கொண்டு சேவையில் ஈடுபடவுள்ளனர். 



முற்றாக சேதம் அடைந்தவர்கள் தங்களுடைய உறவினர்கள் வீடுகளில் இருக்கினறனர். எனினும் பாதியளவில் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் கூட தங்களுடைய வீடுகளுக்குச் செல்லத் தயங்குகின்றனர்.  இந்த வன்முறை நிகழ்வு தொடர்ந்து மனதில் பெரும் பீதியை ஏற்படுத்துவதாகக் கூறி பின்வாங்குகின்றனர். இதனை நாங்கள் உளவளம் சார்ந்த பயிற்சிகளை வழங்கி மீண்டும் அவர்களுடைய சொந்த வீடுகளில் நிரந்தரமான குடியிருப்பதற்கு வழிவகை செய்ய வேண்டி இருக்கிறது. அதற்காக நாங்கள் அவர்களுடைய மனோநிலைகளை சீராக்கி அவர்களை நிரந்தரமாக குடியமர்த்துகின்ற வேலைகளைச் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். 

முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் ஹலீம் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ள அனைத்துப் பள்ளிவாசல்களுக்கும் நிதி உதவி வழங்குவதாக உத்தரவாதம் வழங்கியுள்ளார். கடந்த திங்கட் கிழமை கண்டி மாவட்;ட செயலகத்தில் 8.8 மில்லியன் ரூபா பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்யீட்டுக் கொடுப்பனவு  132 பேருக்கு பகிர்ந்தளிகப்பட்டுள்ளது. ஆரம்ப கட்ட கொடுப்பனவையே வழங்கியுள்ளார்கள்.

கண்டி நிவாரண அமைப்பு மையத்தின் எத்தகைய நோக்கத்திற்காக  உருவாக்கினீர்கள் என்று கூறுவீர்களா?

பொதுவாக வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் சரியாகவும் முறையாகவும் ஒழுங்குப்படுத்தப்பட்ட ரீதியில் வழங்கி வைக்கப்படுதல் வேண்டும். இதில் ஒருவருடைய மனதை நோவினை செய்யாமல் சரியான முறையில் பகிர்ந்தளிப்படுதல் வேண்டும். இந்த நோக்கத்தின் அடிப்படையில்  எமது சமூகத்திலுள்ள எல்லா சமூக அமைப்புக்களையும் ஒன்றிணைத்து அவர்களுடைய ஆலோசனையின் பிரகாரம்  திட்டங்கள் வகுத்துச் செயற்படவே இந்த கண்டி நிவாரண அமைப்பு மையத்தை உருவாக்கியுள்ளோம். இதன் மூலமாகத்தான் தற்போது இங்கு கணிசமாளன மனிதாபிமானப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
  
இது தொடர்பாக  மனிதாபிமான காருண்ணிய உதவி புரிய வேண்டும் என்று எண்ணுகின்றவர்கள் உள்நாட்டவர்களாக இருந்தாலும் சரி  வெளிநாட்டவர்களாக இருந்தாலும் சரி கே. ஆர். சி. சி. ஊடாக வழங்க  முடியும். இங்கு வருகின்ற உதவிகள் யாவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான முறையில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.   பாரபட்சம் இல்லாமல் அவரவர்களுக்கு சேர வேண்டிய  அந்த உதவிகள் சரியான முறையில் சேர வேண்டும் என்ற அடிப்படையில் தான்  அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா கே. ஆர். சி. சி என்ற அமைப்பை உருவாக்கி இதில் எல்லா சமூக இயக்கங்களும்  நிவாரணப் பணிகளில் ஈடுபடுகின்ற  எல்லா நிறுவனங்களும்  ஒன்று சேர்க்கப்பட்டு  ஒரு கொடையின் கீழ் பணி செய்து கொண்டு இருக்கின்றோம் என்பதை இரு தடவை அழுத்திக் கூறுகின்றேன்.

எனவே நீங்கள் இந்த அமைப்புக்கு உங்கள் பண உதவிகள் வழங்கும் போது 100 விகிதம் உத்தரவாதப்படுத்தி  யார் யாருக்கு எந்தளவு போய் சேர வேண்டும் என்பதை சரியான முறையில் பிரித்து  வழங்கவுள்ளோம் அதற்காகத் தான் கே. ஆர். சி. சி. உடன் தொடர்பு கொள்ளுமாறும் உங்களுடன் உதவினை முன்வந்து வழங்குமாறும்  முஸ்லிம் சமூகத்திடம் வேண்டிக் கொள்கின்றோம்.

பொதுவாக  இதில் எந்த   இயக்கங்கள் இடம்பெறுகின்றது என்று  கூறுவீர்களா?

இந்த அமைப்பின் கீழ் கண்டி மாவட்;ட அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் கீழ் பல சமூக இயக்கங்கள் மற்றும் நிவாரணத் தொண்டு அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.  அகில இலங்கை வை. எம். எம். ஏ.  நகர ஜம்மிய்யதுல் உலமா சபை , கண்டி பள்ளிவாசல்கள் சம்மேளனம், கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கம்,  அளுத்தகம அபிவிருத்தி அறக்கட்டளை நிதியம் (ஏ. டி. எவ்)  யங் பிரண்ட்ஸ்,    ஜமாஅத்தே இஸ்லாம், தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு உள்ளிட்ட இன்னும் பல சமூக அமைப்புக்கள் இதில் அங்கம் வகிகன்றன.

வங்கி -   Amana Bank
பெயர் -  All Ceylon  Jamiyyathul Ulama Kandy Branch
கணக்கு இல் :- 0010198534001
தொலைபேசி இலக்கம் :-  0773422675


No comments:

Post a Comment