தாமதமாகும் நீதியும் அதிகரிக்கும் துஷ்பிரயோகங்களும் - sonakar.com

Post Top Ad

Saturday 15 May 2021

தாமதமாகும் நீதியும் அதிகரிக்கும் துஷ்பிரயோகங்களும்

 


சிறுவர்கள் பாதுகாப்பு தொடர்பில் இலங்கையின் தற்போதைய நிலையை அவதானித்தோமானால்,  நாளாந்தம் ஊடகங்களில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் செய்திகள் வெளி வராத நாளே இல்லை எனலாம்.  அதேபோன்று  சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அவசர உதவி அழைப்பு இலக்கமான 1929 இலக்கத்திற்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் தினந்தோறும் முறைப்பாடுகள்  கிடைத்து வருகின்றன.  


சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தரவுகளின்படி 2019ம் ஆண்டில் மட்டும் சிறுமிகள் மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் 294 பற்றிய முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. இதில் 288 முறைப்பாடுகள் மிக மோசமான பாலியல் வல்லுறவு சம்பவங்களாகும். சிறுமிகள் மீதான இவ்வாறான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களினால் இள வயது கர்ப்பம், கருச்சிதைவு, சிறுபராயத்திலேயே தாய்மை அடைதல் போன்ற மேலதிக பாதிப்புகளை சிறுமிகள் எதிர்கொள்கின்றனர்.  


2012 முதல் 2020 வரையிலான காலப்பகுதியில் இலங்கையில்  5891 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் 21.9 சதவீத வேகத்தில்  அதிகரித்து வருவதாக யுனிசெப் நடத்திய அண்மைய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. இந்த தரவுகள் அனைத்துமே சிறுவர்கள் தொடர்பிலும் அவர்கள் பாதுகாப்பு தொடர்பிலும்  ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தும் விடயங்களாக உள்ளன.  


இந்த அடிப்படையில் பார்க்கும் போது இலங்கையில் சிறுவர்களின் நிலை இவ்வாறு உள்ளது என்பதனை ஓரளவுக்கு ஊகித்துக் கொள்ள முடியும்.  இலங்கையில் அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன அல்லது மீறப்படுகின்றன என்பதே யதார்த்தமாகும். சிறுவர்கள் தமக்குள் எந்தவொரு வேறுபாடுகளுமின்றி உரிமைகளை அனுபவிக்கும் உரிமையைக் கொண்டிருக்கின்றனர். சர்வதேச சிறுவர்கள் அனுபவிக்கும் சகல அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளையும் இலங்கையில் உள்ள சகல சிறுவர்களும் அனுபவிக்கக் கூடியவாறான உரிமைகளும் சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாலியல் வல்லுறவுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் உரிமை, சித்திரவதை குரூரமாக நடத்துதல் மற்றும்  தண்டனைகளிலிருந்து தவிர்த்துக் கொள்ளும் உரிமை, சுதந்திரத்திற்கும் பாதுகாப்பிற்குமான உரிமை என்பன சர்வதே ரீதியில் சிறுவர்களுக்குரிய உரிமைகளாகும். இந்த உரிமைகள் அனைத்தும் இலங்கை சிறுவர்களுக்கும் உரியதாகும். ஆனால் நடைமுறையில் நோக்கும் போது இந்த உரிமைகள் பெருமளவில் மதிக்கப்படுவதில்லை என்பதனையே அவதானிக்கக் கூடியதாக உள்ளது.  


சிறுவர்களைப் பெரிதும் பாதிக்கும்  துஷ்பிரயோகங்கள்.


சிறுவர்களை உடல் ரீதியாக அல்லது உணர்வு ரீதியாக பீதியடைய செய்தல். பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல், புறக்கணித்தல், வர்த்தகம் அல்லது வேறு விடயங்களுக்காக அவர்களை சுரண்டுதல் போன்றவற்றின் மூலம் அவர்களின் ஆரோக்கியம் உயிர்வாழ்தல், வளர்ச்சி மற்றும் கௌரவம் போன்றவற்றுக்கும் பாதிப்பை ஏற்படுத்துதல் சிறுவர் துஷ்பிரயோகம் எனப்படுகின்றது. அதேபோன்று பெற்றோர் அல்லது பராமரிப்பாளரின் கவனயீனம்   அல்லது அவர்களின் அக்கறையற்ற தன்மையின் காரணமாக ஏற்படும் காயம், மரணம் உணர்ச்சி ரீதியான பாதிப்பு அல்லது ஒரு குழந்தைக்கு பாரிய தீங்கு ஏற்பட கூடிய ஆபத்தான நிலை என்பனவும்  சிறுவர் துஷ்பிரயோகம் எனப்படும்.


இலங்கையில் சுமார் 80 சதவீதமான  சிறுவர்கள் அறியாமையினாலேயே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகின்றனர் என 'சேவ் த சில்ரன்'  என்ற அமைப்பு கூறுகின்றது. இலங்கையில் உள்ள சிறுவர்கள் பாலியல் மட்டுமல்ல குடும்ப வன்முறைகளினாலும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.  சிறுவர் துஷ்பிரயோகம் அதிகம் நம்பிக்கைக்குரிய நெருங்கிய உறவினர்களாலே பெரும்பாலும் நடைபெறுகின்றன என்று சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை குறிப்பிடுகின்றது. ‘இவரால் பிள்ளைக்கு நிச்சயம் பாதிப்பு வராது’ என்று ஒருவரை முற்று முழுதாக நம்பி பிள்ளைகளை ஒப்படைத்துவிட்டு செல்லும் போதே இவ்வாறான பரவலான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. 


இலங்கை கொவிட் தொற்றினால் நாடளாவிய ரீதியில் முடக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் சிறுவர் மீதான வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகளவில் அதிகாரசபைக்கு கிடைத்திருந்தமையும் இங்கு கவனத்திற்குரிய விடயமாகும். இந்த முறைப்பாடுகள் எந்தளவுக்கு எமது குடும்பக் கட்டமைப்புகளிலும், சுற்றுச் சூழலிலும் சிறுவர்கள் பாதுகாப்பற்று இருக்கின்றனர் என்பதற்கு கவலைக்குரிய எடுத்துக் காட்டாக அமைந்திருந்தது.  ஏனெனில் நாடு முடக்கப்பட்ட நிலையில் பிள்ளைகள் ஒன்று பெற்றோருடன் இருந்திருப்பார்கள் அல்லது பாதுகாவலர்களிடம் இருந்திருப்பார்கள்.  வேலியே பயிரை மேய்ந்த கதையாக இங்கு அறிந்தவர்களினால்,  நெருங்கியவர்களினால்  சிறுவர்களின் உரிமைகள் மீறப்பட்டிருந்தன.  


சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகமாக சிதைவுற்ற  குடும்பங்களில்  தான் அதிகம் நடை பெறுகின்றது என்பது மற்றுமொரு முக்கிய அம்சமாகும்.  அதாவது  குடும்பத்தாரால், தாய் அல்லது தந்தையால் கைவிடப்பட்ட பிள்ளைகள், குடும்ப வாழ்வாதார பிரச்சினைகளுக்காக வெளிநாடு செல்லும் பெற்றோரின் பிள்ளைகள் தான் அதிகம் பாலியல், உடலியல். உளவியல் ரீதியான கொடுமைக்கு  ஆளாகுகின்றனர் என்று சிறுவர் உரிமைகள் தொடர்பாக செயற்படும் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டகின்றனர். 


சிறுவர்களைப் பாதுகாக்கும் சட்டங்களும்  பாதுகாப்பும்


பெற்றோரின் பாதுகாப்பைப் பெறுவதற்கு சிறுவர்களுக்கு உரிமை உண்டு. அதேவேளை பெற்றோரிடமிருந்து தம்மை தனிமைப்படுத்தப்படாதிருப்பதற்கான உரிமையும் சிறுவர்களுக்கு உண்டு. ஆனால் தங்கள் உரிமைகள் மீறப்படுவதனைக் கூட அறியாத குரலற்ற நலிவுற்ற தரப்பினராகவே எமது சிறுவர்கள் உள்ளனர். இந்நிலையில் இலங்கையில் சிறுவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு உள்ளதா என்பது தொடர்பாக வினவியப் பொழுது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான  ரவூப் ஹக்கீம் அவர்கள் கூறுகையில், “சிறுவர்களின் பாதுகாப்பு சம்பந்தமாக  எமது நாட்டில் மிகவும் கவனம் செலுத்தப்படுகின்றது.  சர்வதேச  சட்டம் ஒன்றிற்கு அமைவாக குறிப்பாக ஐ.நா சபையின் தீர்மானங்களை அடியொட்டி இங்கு தனியான சிறுவர் பாதுகாப்பு  சட்டமூலம் ஒன்று அமுலில் இருக்கிறது. இதனடிப்படையில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர்களுடைய பாதுகாப்பு குறித்த பல விவகாரங்களில் மிக கடினமான ஆழமான பல சட்ட நடைமுறைகள் இன்று அமுலில் இருக்கின்றன. குறிப்பாக இதனடிப்படையில் குழந்தைகளுக்கு சிறுவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கென அவர்களுக்கென பிரத்தியேகமான நீதிமன்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன. சிறுவர் பாதுகாப்பு நீதிமன்றங்கள் என குறித்த நீதிமன்றங்களுக்கான நீதவான்களைக் கூட பிரத்தியேகமாக அவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்குக்கொள்ள கூடிய மாதிரி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. அவர்களுடைய சாட்சியங்களை பகிர்ந்து அவர்களுக்கான உரிய கவனம் செலுத்தி உள ரீதியான பாதிப்புகள் வராத அடிப்படையிலே இந்த ஏற்பாடுகளை நாங்கள் சட்டமூலமாக எம் நாட்டிலே செயற்படுத்தி வருகின்றோம்” என்று குறிப்பிட்டார். 


இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தொடர்ந்து கூறியதாவது: “சிறுவர்களுடைய செயற்பாடுகளில் அவர்களுடைய பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக பொலிஸ் நிலையங்களில் கூட பிரத்தியேகமான பயிற்றுவிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் குறிப்பாக சிறுவர்கள் பராமரிப்பு அதே போல பெண்களுடைய விவகாரங்களுக்கான  பிரத்தியேக பெண் பொலிஸ் அதிகாரிகளை ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் நியமித்து இருக்கிறார்கள். எனவே அவர்களுடைய நலன் குறித்த அவர்களுக்கெதிரான குற்றச்சாட்டுகள் குறித்த அவர்கள் மீது புரியப்படுகின்ற வன்முறைகள் குறித்த விவகாரங்களில் பொலிஸ் அதிகாரிகளை சிறப்பான தேர்ச்சியோடு அந்த விஷயங்களை அணுகுகின்ற அடிப்படையிலே பொலிஸ் நிலையங்களில் இருந்து இதற்கான பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதும் விசேடமாக கவனிக்கப்பட  வேண்டிய ஒன்றாகும்”.


சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக இலங்கையில் முன்னெடுக்கப்படும்  சட்டங்கள் போதுமானதாக இருந்தாலும் இச் சட்டங்களை சரியான முறையில் அமுல்படுத்துவதில் பிரச்சினைகள் உள்ளதாக  "சேவ் த சில்ரன்ஸ்" அமைப்பின் கொள்கை மற்றும் ஆய்வு இயக்குநர் ரன்ஞன் வெத்தசிங்க தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “சிறுவர் தொடர்பான வழக்குகளுக்கான  தீர்வினைப்  பெறுவதற்கு ஐந்து முதல் பத்து வருடங்கள் வரை காத்திருக்க நேர்கின்றது.  எனவே சிறுவர்களின் வழக்குகள் தொடர்பில்  நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு வழக்கு விசாரணைகள்  துரிதப்படுத்த வேண்டும் என்றார். 


இதே கருத்தினை வலியுறுத்திய சட்டத்தரணி நதீஹா அப்பாஸ், “சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்படுவதன் கடின தன்மை காரணமாக வழக்கு விசாரணைகள் தாமதமாவதால் தண்டனைகள் கொடுக்க போதுமான சான்றுகள் கிடைக்காமல்  போகின்றன. பாலியல் ரீதியில் பாதிக்கப்பட்ட சிறுவர்களை ஆராய்ந்து சாட்சி எடுக்கும் போது சிறுவர்கள் அச்சந்தர்பத்தில் உண்மையைக் கூறினாலும் மேலும் சில காலங்களுக்கு பின் வேறு நீதி மன்றங்களில் சாட்சியத்தை விசாரிக்கும் போது பாதிக்கப்பட்ட பிள்ளை நடந்த சம்பவத்தை மறந்து போகின்றது. எனவே இதனால் பாதிக்கப்பட்டவருக்கு சாதகமான  தீர்ப்பை வழங்க முடியாமல் போகின்றது” என்று   குறிப்பிட்டார்.

 

சிறுவர்களுக்கான சட்டம்,  பாதுகாப்பு, உரிமைகள் என்பன இலங்கையில் இருந்தாலும் நடைமுறையில் அவை சிறப்பாக அமுலாக்கப்படல்  வேண்டும் என்று சட்டத்தரணி நதீஹா அப்பாஸ் மேலும் வலியுறுத்தினார்.  சிறுவர்களின் பராமரிப்பு சட்டத்தினை எடுத்து கொண்டால் பெற்றோர்களால் பராமரிக்கப்படாத போது அவற்றுக்கான தண்டனையும் அமுலில் உள்ளது. இவ்வாறு சிறுவர்களுக்கு சார்பான  பல சட்டங்கள் காணப்பட்டாலும் இவைகளை சரியான முறையில் அமுல்ப்படுத்தப்படாத நிலையே  பெருங்குறையாக உள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.


இதே கருத்தினை வலியுறுத்தும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை  சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களில் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு தண்டனைப்  பெற்றுக்கொடுப்பதற்கு சராசரியாக 8 வருடங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளதால் பெரிய அளவில் வழக்குகள் நீதிமன்றத்தில் தேங்கிக் கிடப்பதாகவும்  குறிப்பிட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கடந்த எட்டு வருடங்களுக்குள் சுமார் 79,259 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. அதே போன்று  அண்மைக் கால பகுதியில் அவர்களுக்கு கிடைத்த 42,073 முறைப்பாடுகளில் 53% வீதமான முறைப்பாடுகள் தீர்க்கப்படவில்லை குறிப்பாக சிறுவர் துஷ்பிரயோகம் சம்பந்தமாக வந்த முறைப்பாடுகளில் அதிகளவான முறைப்பாடுகள் கொழும்பு கம்பஹா குருநாகல் மற்றும் காலி போன்ற பிரதேசங்கள் என்பது குறிப்பிடதக்கது.


இலங்கையின் குற்றவியல் சட்டத்தின்படி யாராவது சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டால், அவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டால் குற்றவாளி உடனடியாக 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார். அதிகபட்சமாக 03 மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட பின் வழக்குத் தொடரப்படும். 03 மாதத்தின் பின் நீதிபதி விரும்பினால் அவருக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை (ஜாமின்) கொடுத்து வெளியில் அனுப்பலாம்.


பெண் அதிகாரிகளற்ற பொலிஸ் நிலையங்களும் நீதியை நாடும் சிறுவர்களும்


நிலைமை இவ்வாறு இருக்கையில், இங்கு மற்றுமொரு முக்கியமான விடயத்தினை சட்டத்தரணி நதீஹா அப்பாஸ் சுட்டிக்காட்டத் தவறவில்லை.  இலங்கையில் பொலிஸ் நிலையங்களில் காணப்படும் வளப் பற்றாக்குறைகள் மற்றும்   அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பெண் பொலிஸ் அதிகாரிகள் போதியளவு இன்மை காரணமாக   பாதிக்கப்படும் சிறுவர்களுக்கான  நீதி தாமதமடைகின்றது என்பதே அந்த முக்கியமான விடயமாகும்.    


ஏனெனில் சிறுவர்கள் பாதிக்கப்பட்ட பின்னர் அவர்களிடம் உண்மை தன்மையை அறிவதற்கும்,  உளவியல் சம்பந்தமான    விடயங்களை ஆராய்வதற்கும் பெண் பொலிஸ் அதிகாரி அவ்விடத்தில் இல்லை எனில் பிள்ளைகள் அச்சம் கொள்கின்றனர்.  அதே போன்று விசாரனணை செய்ய உரிய நேரத்தில் பெண் அதிகாரி இல்லாவிட்டால் நடந்த சம்பங்களை முறையிடுவதற்கு சாதகமான சூழ் நிலை காணப்படமாட்டாது. எனவே இக்குறைபாடு ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களிலும் காணப்படுகின்றது. சிறுவர்கள் எதிர் நோக்கும் மற்றுமொறு பிரச்சினையாக மொழிப் பிரச்சினை காணப்படுகிறது. தமிழ்ப் பிரதேசங்களைப் பொறுத்தவரை இப்பகுதிகளில் இயங்கும் பொலிஸ்  நிலையங்களில் பல பொலிஸ் அதிகாரிகள் இருந்தாலும் சில சமயங்களில் தமிழ் மொழியைப் புரிந்து கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. இதனால்  பிரச்சினையின் உண்மை தன்மையை  சொன்னாலும் அவற்றை விளங்கிக் கொள்ள முடியாத  நிலையே காணப்படுகின்றது என சட்டத்தரணி நதீஹா அப்பாஸ் குறிப்பிட்டார்.












- சில்மியா யூசுப்





No comments:

Post a Comment