மூன்று தினங்களாக இழுத்தடிக்கப்படும் ஒரு ஜனாஸா: துயரத்தில் குடும்பம்! - sonakar.com

Post Top Ad

Friday 8 May 2020

மூன்று தினங்களாக இழுத்தடிக்கப்படும் ஒரு ஜனாஸா: துயரத்தில் குடும்பம்!


கொரோனா சூழ்நிலையில், பெரும்பாலும் அனைத்து மரணங்களும் சந்தேகத்துடன் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக கொழும்பு 10 ஐ இருப்பிடமாகக் கொண்ட, சென்ட்ரல் ரோட் பகுதியில் தற்காலிகமாகத் தங்கியிருந்த  M. பிர்தௌஸ் என அறியப்பட்டு வந்த, 28 வயது நபர் கடந்த 5ம் திகதி இரவு திடீரென மரணித்திருந்தார்.



அவரது உடலை பிரேத பரிசோதனையும் செய்திருந்த நிலையில் அவருக்கு கொரோனா இருப்பதாகவும் உடலம் எரிக்கப்பட வேண்டும் எனவும் வற்புறுத்தப்பட்டுள்ளது. எனினும், அதற்கு உடன்படாத குடும்பத்தினர் கொரோனா தொற்றிருப்பதற்கான உறுதிப்படுத்தல் சான்றிதழைத் தருமாறு எதிர்ப்பு வெளியிடவே கடந்த மூன்று தினங்களாக உடலத்தைக் கையளிக்காமல் இழுத்தடிப்பு இடம்பெற்று வருகிறது.

ஈற்றில், பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட வேறு ஒரு உடலமே குறித்த நபர் என தவறாக அடையாளங் காட்டப்பட்டுள்ள குழறுபடியும் கண்டறியப்பட்டுள்ளது.

உடலத்தை எரிக்க மாத்திரமே அனுமதிக்க முடியும் என அடம் பிடிக்கும் JMO, உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்றிருப்பதை உறுதி செய்வதையும் தவிர்த்து மூன்று நாட்களாக இழுத்தடிப்பு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

'கொரோனா' தொற்று என சந்தேகமிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், மூன்று தினங்களாக இன்னும் பரிசோதனை 'அறிக்கை' வரவில்லையென காரணம் தெரிவிக்கப்பட்டு வருவதாக சோனகர்.கொம்முக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்கவின் தலையீடு ஒன்றே தீர்வைத் தரும் என விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமூகப் பிரமுகர்களிடம் இத்தகவல் எத்தி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment