முஸ்லிம் பாடசாலைகள் மீள் ஆரம்பம் - sonakar.com

Post Top Ad

Monday 10 June 2019

முஸ்லிம் பாடசாலைகள் மீள் ஆரம்பம்


கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம் பெற்ற தீவிரவாத குண்டுத்தாக்குதல்கள் காரணமாக சுமார் இரண்டு மாத காலம் மூடப்பட்டிருந்த சகல முஸ்லிம் பாடசாலைகளும் இன்று ஆரம்பமாகின.


மாணவர்களின் பாதுகாப்புக் கருதி குறித்த குண்டுத்தாக்குதலின் பின்னர் சகல பாடசாலைகளும் அரசாங்கத்தின் உத்தரவின்படி உடநடியாக மூடப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் பாடசாலைகள் உட்பட சகல இடங்களிலும் கோதனை நடவடிக்கைகள் நடாத்தி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் தமிழ், சிங்கள பாடசாலைகள் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டன. எனினும் முஸ்லிம் பாடசாலைகள் புனித நோன்பு கடந்த மே மாதம் 7ஆம் திகதி ஆரம்பமானதால் தொடர்ந்து முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று ஆரம்பமாகின.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கத்தினதும், பாதுகாப்புத் துறையினர் மற்றும் கல்வி அமைச்சின் ஆலோசனைகளுக்கு அமைவாக சகல முஸ்லிம் பாடசாலைகளிலும் அதன் அதிபர்களால் பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கங்க உறுப்பினர்கள்,  பழைய மாணவர்கள் என்போரை அழைத்து விஷேட கூட்டங்களும், கலந்துரையாடல்களும் நடாத்தப்பட்டு பாடசாலைக்கு வரும் மாணவர்களின் பாடசாலைப் பைகளும்  ஆசிரியர்களின் பைகளும் சோதைனை செய்யப்பட வேண்டும் என்ற தீர்மாணிக்கப்பட்டன. இதன்படி சகலரது ஒத்துழைப்புக்களுடனும் இன்று சோதனை நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. மாணவர்களும் கணிசமானளவு பாடசாலைக்கு வருகை தந்திருந்தனர்.

இன்று கொழும்பு-12 இல் உள்ள பாத்திமா முஸ்லிம் பெண்கள் கல்லூரி மற்றும் வாழைத்தோட்டம் அல்-ஹிக்கமா கல்லூரி ஆகிய பாடசாலைகளில் பாடசாலை அதிபர்களின் நேரடிக் கண்காணிப்பில் மாணவர்கள் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

பாத்திமா முஸ்லிம் பெண்கள் கல்லூரி அதிபர் திருமதி ஏ.எஸ்.சிஹானா, அல்-ஹிக்கமா கல்லூரி அதிபர் எம்.எம்.மஹ்சூர் ஆகியோர் எதிர் வரும் மாதம் 2ஆம் தவனை பரீட்சைகள் நடைபெறவிருப்பதால் மாணவர்கள்  அனைவரும் பாடசாலைக்கு தவறாது சமுகமளிக்குமாறும் கேட்டுக் கொள்வதுடன் தேவையற்ற பொருட்களை தங்களது பைகளில் போட்டுக் கொண்டு வரவேண்டாம் எனவும் மாணவர்கள் சோதனை நடவடிக்கைகளுக்கு உதவுவதுடன் பெற்றோரும் மாணவர்களின் பாதுகாப்பு விடயங்களில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் வேண்டுகின்றனர்.

-ஏ.எஸ்.எம்.ஜாவித்

No comments:

Post a Comment