கிணியம: நேற்றிரவு நடந்த தாக்குதல்கள்: முழு விபரம் (படங்கள்) - sonakar.com

Post Top Ad

Monday 13 May 2019

கிணியம: நேற்றிரவு நடந்த தாக்குதல்கள்: முழு விபரம் (படங்கள்)


வடமேல் மாகாணம், குருநாகல் மாவட்டம், பிங்கிரிய தேர்தல் தொகுதி, பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, இஹல கினியமை எனும் கிராமத்தில் நேற்று இரவு (12) காடையர்களினால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலினால் மூன்று பள்ளிவாசல்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அவையாவன:



1) மஸ்ஜிதுத் தக்வா (ஜும்ஆ மஸ்ஜித்)

2) மஸ்ஜிதுல் அப்ரார் (தக்கியா)

3) மஸ்ஜிதுல் ஆயிஷா (தக்கியா)

விபரம்

மஸ்ஜிதுத் தக்வா பெரிய பள்ளிவாயலில் தொடங்கிய தாக்குதல் பின்பு படிப்படியாக தக்கியா பள்ளிகளை நோக்கி நகர்ந்தன. இதன்போது பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், பல இலட்சக்கணக்கான சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.


புனித அல் குர்ஆன் பிரதிகள் தீ வைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள்கள் பலவும் தீ வைக்கப்பட்டுள்ளதுடன், பாரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டும் உள்ளன. அத்தோடு பல தளபாடங்கள், மின் உபகரணங்கள் என்பனவும் தீ வைக்கப்பட்டுள்ளன.

பள்ளி வாயல்களின் அனைத்து கண்ணாடிகளும் உடைக்கப்பட்டுள்ளதுடன், பள்ளிவாயலில் இயங்கிவந்த கிராமத்தின் அனைத்து இனமக்களுக்கும் குடிநீர் வழங்கும் திட்டத்தின் பாரிய நீர்த்தாங்கிகள் உடைத்துச் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன.


நேற்று இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 3.30  மணிவரை இத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதுடன், இத்தாக்குதலை நடாத்த காடையர்கள் 300 க்கும் மேற்ப்பட்டோர். ஆயுதங்களுடனும் கல் வீச்சுத் தாக்குதல் நடத்துவதற்குத் தேவையான கற்கள் சிறிய ரக லொறியோன்றில் கொண்டுவரப்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்ட பலர் தெரிவித்தனர்.

கிராமத்து மக்கள் கிராமத்தைச் சூழவுள்ள மாற்று மத மக்களுடன் பல்லாண்டு காலமாக அன்னியோன்யமாக பழகும் குணமுடையவர்கள் தொழில், கொடுக்கல் வாங்கல்கள், சமய, கலாசார நிகழ்வுகளில் இரு தரப்பினரும் பரஸ்பர ஒற்றுமையுடன் சகவாழ்வுடனேயே வாழ்ந்து வருவதோடு நல்லிரவு திடீரென இடம்பெற்ற இச் சம்பவம் அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.


கிராமத்தின் பாதுகாப்புக் கருதி 24 மணிநேரம் பொலிஸ் பாதுகாப்பு கிராமத்தின் நாட்சந்தியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், போலீசார் கடமையில் இருக்கும் நேரமே இக் காடையர் கூட்டம் தாக்குதல் நடாத்த சாரை சாரையாக வந்து குவிந்துள்ளனர்.

இவ்வாறு வந்த தாக்குதல்தாரிகளை ஊர் மக்கள் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்தி திருப்பியனுப்பியபோதும் பாதுகாப்புப் பிரிவின் வருகையைத் தொடர்ந்தே இப் பாரதூரமான இத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தாக்குதலை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.


இரும்புக் குழாய்கள் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் ஊர் முஸ்லிம் மக்கள் சிலரை நிராயுதபாணிகளாக்கி அச்சமூட்டப்பட்ட நிலையில் காடையர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டது. ஊரடங்குச் சட்டத்தின் பின்பே தாக்குதல் உக்கிரம் அடைந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும், ஒரு சில வீடுகளின் கண்ணாடிகள், இரண்டு ஹோட்டல்களின் கண்ணாடிகள் பள்ளிவாயில்களில் புதிதாய் அமைத்த  வேலி, துவம்சம் செய்யப்பட்டுள்ளதுடன், அயல் கிராமங்களில் பள்ளிவாயில்கள், வியாபார நிலையங்களும் இத்தொடர் தாக்குதலில் பலத்த சேதமடைந்துள்ளன.

-Rilwan Hameed

No comments:

Post a Comment