தென்கிழக்கு பல்கலை உபவேந்தராக மீண்டும் பேராசிரியர் நாஜீம் - sonakar.com

Post Top Ad

Saturday 11 August 2018

தென்கிழக்கு பல்கலை உபவேந்தராக மீண்டும் பேராசிரியர் நாஜீம்

தென்கிழக்கு பலகலைக்கழகத்தின் உபவேந்தராக கடமையாற்றிய கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்களது பதவிக்காலம் கடந்த 2015-06-21ம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில் நான்காவது உபவேந்தராக தெரிவுசெய்யப்பட்டு தனது முதலாவது மூன்றாண்டுகளை பூர்த்தி செய்திருந்த நிலையில் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம்  மீண்டும் ஐந்தாவது  உபவேந்தராகவும்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.


1968ஆம் ஆண்டு பிறந்த உபவேந்தர் பேராசிரியர் நாஜிம் தனது உயர் கல்வியை பேராதனை பல்கலைக்கழககத்தில் கற்று தேறியதோடு தாய்லாந்து, மலேசியா, சீனா போன்ற பல்கலைக்கழகங்களிலும் கற்று 50ற்கும் மேற்பட்ட சர்வதேச ஆய்வரங்குகளில் தமது கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.

உலகின் தலைசிறந்த ஆய்வுகளில் 20ற்கு மேற்பட்ட கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளதோடு பல தடவைகள் தனது ஆய்வுக் கட்டுரைகளுக்கு ஜனாதிபதி விருதும் பெற்றுள்ளார். மேலும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 10 வருடங்களுக்கு மேல் சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார்.

களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவ பேராசிரியரான நாஜீம் அவர்கள் காலியை பிறப்பிடமாக கொண்டவரும் மூன்று பிள்ளைகளின் தந்தையுமாவார்.

முஸ்லிம்களில் குறிப்பிட்டுச்சொல்லும் அளவுக்கு சிறந்த கல்விமானும் நிருவாகியுமான  பேராசிரியரான நாஜீம் அவர்கள் பல்வேறு  நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்தவருமாவர்.

-எம்.வை.அமீர்

No comments:

Post a Comment