அம்பாறை: நீதிமன்றம் விடுத்த உத்தரவுகள்; சட்டத்தரணிகள் விளக்கம் - sonakar.com

Post Top Ad

Wednesday 28 February 2018

அம்பாறை: நீதிமன்றம் விடுத்த உத்தரவுகள்; சட்டத்தரணிகள் விளக்கம்


சென்ற திங்கட்கிழமை (2018.02.27)  இரவு 9.40 மணியளவில் அம்பாரையில் இருக்கும் காசிம் ஹோட்டலுக்குள் குடிபோதையில் வந்த மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவரால் ஹோட்டல் நிர்வாகிகள் உணவுகளுக்குள் கர்ப்பத்தைத் தடை செய்யும் மாத்திரைகளை இடுவதாக பொய்யாகப் பரப்பப்பட்ட வதந்தியினால் ஒரு கலவரமே வெடித்தது.


முஸ்லிம்களுக்குச் சொந்தமான 4 வியாபார ஸ்தலங்களும்,பள்ளிவாயலும் உடைத்து நொறுக்கப்பட்டன.

சம்பவத்தைத் தொடர்ந்து களத்திற்கு குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகளான றதீப் அஹ்மட்,முஹைமின் காலித் மற்றும் ஹஸ்ஸான் றுஷ்தி ஆகியோர் விஜயம் செய்தனர்.குரல்கள் இயக்கத்தின் உறுப்பினர்கள் செல்லும் வரைக்கும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக எவரும் முன்வந்திருக்கவில்லை.

பொலிஸார் பெரும்பான்மையினத்தவர் எவரையும் இதுவரை கைது செய்யாமை, போதுமான அளவில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வாக்குமூலங்களை எடுக்காமை, பள்ளி மூடப்பட்டுள்ளமை, பாதிக்கப்பட்ட இரு முஸ்லிம் இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளமை, முஸ்லிம்கள் பயத்தினால் வெளியேறியுள்ளமை மற்றும் இச்சம்பவத்தின் மொத்தப் பின்னணி ஆகியவற்றை நீதிமன்றிற்கு விளக்கமாக எமது சட்டத்தரணிகள் எடுத்துக்கூறினர்.

மேற்படி விடயங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அடுத்த தவணைக்கிடையில் கலவரத்தில் ஈடுபட்ட அனைவரையும் இயன்றவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும்,டயலொக், மொபிடெல், எயார்டெல், ஹட்ச் மற்றும் எடிசலாட் நிறுவனங்கள் கலவர நேரத்தில் இடம்பெற்ற இடத்திலிருந்து மேற்கொள்ளப்பட் அனைத்து தொலைபேசி பரிவர்த்தனை விவரங்களை பொலிஸாருக்கு கொடுக்க வேண்டும் என்றும், அம்பாறையிலிருந்து பயத்தினால் வெளியேறியிருக்கும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதுடன் அவர்களின் இடத்திற்கு சென்றேனும் வாக்குமூலங்களை பொலிஸார் சேகரிக்க வேண்டும் என்றும்,தாக்கப்பட்ட பகுதிகளிலுள்ள அனைத்து CCTV கமராக்களின் பதிவுகள் அனைத்தும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என்றும்,முதலில் பிரச்சினையை ஏற்படுத்திய சிங்கள இளைஞரின் தொலைபேசி பரிசோதிக்கபட்டு கலவரத்திற்கான ஆதாரங்களை கைப்பற்ற முயற்சிக்க வேண்டும் என்றும் கட்டளை பிறப்பித்தது.

அதைத் தொடர்ந்து நெடும் சமர்ப்பணங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்ட இரு முஸ்லிம் இளைஞர்களைகளையும் எமது சட்டத்தரணிகளால் பிணையில் எடுக்க முடிந்தது. பின்னர் 5 மணியளவில் அம்பாறை SSP, SP, ASP, HQI மற்றும் OIC ஆகியோர் உள்ளிட்ட குழுவினருடன் கலந்துரையாடலை நடத்தினார்கள்.


கலந்துரையாடலின் பின்னர் அவர்கள் மிக விரைவில் (இன்று அல்லது நாளை) மூடப்பட்டுள்ள பள்ளவாசல் சுத்தப்படுத்தப்பட்டு தொழுகைளை மேற்கொள்ள திருப்பி தருவதாகவும்,சேதமடைந்த பள்ளியினை மீளக் கட்ட அரசாங்க அதிபரூடாக நிதி ஒதுக்க முயற்சிக்கப்படும் என்றும்,வெள்ளிக்கிழமைக்குள் விசாரணை துரிதப்படுத்தப்பட்டு கலவரத்திற்கு காரணமானவர்கள் கைது செய்யப்படுவர் என்றும் எமது சட்டத்தரணிகளுக்கு உத்தரவாதம் வழங்கினர்.

குரல்கள் இயக்கம் அம்பாரையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக தொடர்ந்தும் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும்.

-VM

No comments:

Post a Comment