வடகிழக்கை நிபந்தனையின்றி பிரிப்பதை எதிர்த்தவர் அஷ்ரப் - sonakar.com

Post Top Ad

Wednesday 16 September 2020

வடகிழக்கை நிபந்தனையின்றி பிரிப்பதை எதிர்த்தவர் அஷ்ரப்




மறைந்த பெரும் தலைவர் அஷ்ரப் அவாகளின் அரசியல் வரலாற்றுப் பயணம் இடைநடுவில் கருக்கப்பட்ட துயர சம்பவத்தால் துவண்டுபோய் நிலை குலைந்த முஸ்லிம் சமூகத்தின் அரசியல் களம் தன்னை சுதாரித்துக் கொண்டு எழுந்து நின்று அவரது வீறு நடையைத் தொடர முடியாமல் தட்டுத் தடுமாறிக் கொண்டுதான் இன்னும் இருக்கின்றது என்பது எனது அனுமானமாகும்.


கடந்து சென்ற இரண்டு தசாப்த காலங்களின் ஒவ்வொரு நிமிடங்களும் அந்த உண்மையை பறை சாற்றிக் கொண்டிருந்தன என்ற உணர்வை குறிப்பாக வடகிழக்கில் வாழும் மூஸ்லிம் சமூகம் நன்றாக அறிவார்கள். அந்த வெறுமை என்றுதான் தொலையுமோ என்று அவர்கள் இன்று வரை ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அவர் விட்டுச் சென்ற  உரிமைப் போராட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்றக்கூடிய எந்தவொரு நம்பிக்கையூட்டும் நகர்வுகளையும் இற்றைவரை காண முடியாமல் இருக்கின்றது.


பெரும் தலைவர் அஷ்ரபின் வாழ்க்கை வரலாற்றில் மறுமலர்ச்சிக்காக காத்துக்கொண்டிருந்த ஒரு சமூதாயத்தின் போர்க்களங்களைக் கண்டோம். இலக்கிய உலகின் பல்வேறு வளர்ச்சி நிலைகள் எதிர்காலத்திற்கும் படிக்கட்டுகளாக இருந்தன. அவரது உள்ளத்து உணர்ச்சிகள் அருவியாய் வழிந்தன. அலை கடலாய் ஆர்ப்பார்த்ததனைக் கண்டோம். மலைபோல் ஓங்கி உயர்ந்து வடிவெடுத்து வியப்பூட்டின. இருட்டில் வழி தவறிய மக்களுக்கு கலங்கரை விளக்கமாக நின்று பணிசெய்தன. இன்னும் எத்தனையோ விந்தைகளை அவர் வெளிப்படுத்தினார். 

1980 களில் ஆயுதம் ஏந்திய பல்வேறு குழுக்கள் வட கிழக்கில் அட்டகாசம் புரிந்துகொண்டிருந்த அன்றைய பின்னணியில் சில முஸ்லிம் இளைஞாகளும் அந்த ஆயுதக் கவர்ச்சிக்குள் அள்ளுண்டு சென்று ஆபத்தான நிலைமையைத் தோற்றுவித்ததனால் கிழக்கு முஸ்லிம்களுக்கிடையில் மிகப்பெரிய ஒரு பதட்டமான சூழல் வியாபித்தது. அந்த நிர்க்கதியான சூழலில் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் எந்த விதமான பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியாத வெறுமை நிலைமை தோற்றம்பெற்றது.


அவ்வாறான ஒரு பயங்கரமான சூழலில்தான் தலைவர் அஷ்ரஃபின் ஆளுமைமிக்க தலைமைத்துவம் தனியனாக உணர்ச்சிப் புயலாக வெளிக்கிளம்பியது. அவரது சிந்தனைகளாலும், அறிவு கூர்மையினாலும், அசாத்தியமான துணிச்சலினாலும்  உந்தப்பட்ட ஒரு இளைஞர் படை பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அவரை அரவணைத்து உற்சாகமூட்டியது. அஷ்ரப் அவாகளின் முதலாவது பணியாக ஆயுதம் ஏந்திய முஸ்லிம் இளைஞாகளின் மத்தியில் சிந்தனை ரீதியான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு அவாகளுக்கு மத்தியில் மனமாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. அவ்வாறு தெளிவுபெற்ற இளைஞர்களைக்கொண்டு தனது அரசியல் பயணத்திற்கான அமைதிப் படையை உருவாக்கிக் கொண்டார்.


இளைஞாகளின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்திறன், பேச்சாற்றல், வாதத்திறமை வலிமையான கொள்கைப் பற்றுதல் என்பன அஷ்ரஃப் என்ற ஆளுமையின் அணிகலன்களாக ஜொலித்ததனால் அவரின் ஈர்ப்புசக்திக்கு மிக பெரிய இளைஞர் அணிதிரட்சி குறுகிய காலத்தில் ஏற்பட்டதனைக் கண்டு அவர்மீது பொறாமைகொண்ட ஓரு கூட்டமும், கறுவிக்கொண்டு அவருக்கெதிராக களமிறங்கிய சம்பவங்களும் அந்தக்கட்டத்தில் பதிவாகத்தான் செய்தன. ஆறில் ஐந்து பெரும்பான்மையினைக் கொண்ட அரசு ஒரு புறமும், முஸ்லிம் தரப்பின் விடுதலை வேட்கையை விரும்பாத கூட்டம் மறுபுறமுமாக அவரின் வேகத்தைத் தணிப்பதற்கான பல்வேறு அச்சுறுத்தல்களை விடுத்தன. 

அவ்வாறான ஆரம்ப காலத்தில் அவருடன் இணைந்து சமூகத்திற்காக எதனையும் இளந்து மனதாலும், உடலாலும், வாக்காலும் போராடத் துணிந்த அவரது செயலணியில் நானும் ஒருவனாக இருந்த காலங்கள்தான் எனது பிற்கால அரசியல் வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்தது என்பதில் மனநிறைவடைகின்றேன். 

பொது வாழ்வு பொன் காய்க்கும் இடமுமல்ல, புன்னகை பூக்கும் பூந்தோட்டமுமல்ல. அது போலவே அது பாலைவனமுமல்ல  என்ற தத்துவம் அஷ்ரஃபின் ஆரம்பகால போராளிகளுக்கு நன்கு புரியும். அவர் ஆரம்பத்தில் ஓர் ஏற்றப்படாத விளக்காக இருந்தார். அதற்கு எண்ணெயும், திரியும் தேடி பக்குவமாய் ஒளியேற்றி அது படர்ந்து போகாமல் பாதுகாத்த பல போராளிகள் இன்று எம்மத்தியில் இல்லை. எஞ்சிய இன்னும் பலர் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டு அஞ்ஞான வாசம் இருக்கின்றனார். அவாகள் எல்லோரையும் இந்த இடத்தில் மனத்திரையில் காண விளைகின்றேன்.


1986 நவம்பார் 21ம் திகதி “பாஷா வில்லா” மண்டபத்தில் கட்சியைப் பிரகடனப்படுத்திவிட்டு அவர் ஆற்றிய உரை இன்று எத்தனை பேரின் இதயங்களில் பதிந்துள்ளதோ தெரியாது. 

முஸ்லிம் பிரதிநிதிகள் என்ற பொம்மைகள், நம்பிக்கை தளர்ந்த முஸ்லிம் அரசியல், பேரினவாத செயல்பாடுகள், தாய்மொழி, எமது நம்பிக்கை, நாங்கள் யார், எங்கள் கடனாகும், மாகாண சபைகள், இரத்தம் சிந்துவதை நாம் விரும்பவில்லை, கிழக்கலங்கை முஸ்லிம்கள், எமது கோரிக்கை, விடுதலை வெளிப்பாடு, முஸ்லிம் சமூகத்திற்குள்ள பொறுப்புணர்ச்சி என மேற்குறிப்பிட்ட முக்கியமான தலைப்புக்களில் அவர்நிகழ்த்திய அந்த உரையை ஒவ்வொரு முஸ்லிம் சகோதரரும் மீட்டிப்பார்க்க வேண்டும். அப்போதுதான் அவரது இலட்சியப் பாதையைவிட்டு இன்று எவ்வளவு தூரம் கடந்த 20 வருடங்களாக விலகிப் போய்க் கொண்டிருக்கின்றௌம் என்பது புரியும்.


இன்று நம் நாட்டில் சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிராக கருக்கொண்டுள்ள வெறுப்புச் சுவாலை என்பது நமது கொள்கை மாற்றத்தாலும், உள்வீட்டு காட்டிக்கொடுப்புக்களாலும், காலை வாரிவிட்டு காசு சேர்ப்பதாலும் வந்த வினைதான் என்பது தெளிவாகும். அந்த நீண்ட  உரையின் பின் தமது முடிவுரையில் அவர் இவ்வாறு கூறுகின்றார். 

“எமது தலைமை உரையின் இறுதியாக நாம் சொல்லிக் கொள்வதெல்லாம் இது ஒன்றைத்தான்” ஒரு கட்சியின் உருவாக்கம் ஒரு தனி மனிதனாலேயே முதன் முதலில் அறிமுகப்படுத்தப்படுகின்றது என்பது உண்மைதான். ஆனால் அவ்வாறான ஒரு கட்சி ஒரு தனி மனிதனல்ல. ஒரே நோக்குள்ள பல மனிதர்கள் ஓரே சிந்தனையினராக ஒருமித்தும், ஊக்கத்தோடும், விடாமுயற்சியோடும், தியாகத்தோடும் உழைக்கும் போதுதான் அந்தக்கட்சி பல கிளைவிட்டு படர்ந்து செழிக்கின்து.


திருமறைக்கும், திருநபி மொழிக்கும் விரோதமான செயல்களை இந்த தமைப்பீடத்தை உபயோகித்து நான் அறிந்தோ, அறியாமலோ செயற்பட முனைவதை நீங்கள் காணும் போது என்னைப் பின்தொடர்வதை உடனே நீங்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று நான் உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன் அவர் கர்வம் கலைந்த பெரும்தன்மையோடு இவ்வவாறு கூறினார். அவரது கூற்றை செயலிலும் காட்டினார்.


உரிமைகளை சலுகைகளாகப் பெற்றுக்கொள்வதனை அவர் ஒரு போதும் விரும்பியதில்லை. பெரும் தேசியக் கட்சிகளுக்கு சிறுபான்மையினர் உதவி தேவைப்படும் போதெல்லாம் சமூகத்தைக் கௌரவப்படுத்தக்கூடிய பேரம்பேசும் சக்தியை வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுத்துவார். அதன்மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு மகுடம் சூட்டி மகிழ்வார்.


முதல் 6 வருடங்கள் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தும் அடுத்த 6 வருடங்கள் அரசாங்கத்தின் பங்காளியாக இருந்தும் எவ்வாறு சமூகத்தின் கௌவரத்திற்கு மெருகூட்டலாம் என செய்துகாட்டினார். எந்தவொரு சந்தர்ப்பதிலும் தான் சார்ந்த சமூகத்தின் உரிமையை அவர்விட்டுக்கொடுத்த வரலாறு கிடையாது. அவரது சாதனைகள் பல இன்று மாற்றுக்கட்சியினராலும் வியந்து நினைவு கூரப்படுகின்றன.

அவர்ஆரம்பித்துவைத்த சமூக விடுதலை சார்ந்த பல விடையங்கள் 20 வருடங்களின் கடந்த இன்றைய காலகட்டத்திலும எவ்வித கவனிப்பாரற்று தூர்ந்து போன நிலையில் இருப்பது என்பது வேதனைக்குரிய விடயமாகும். பெரும் தேசியக் கட்சியின் பங்காளியாக இருந்தபோது எவ்வாறு தன்மை மாறாமல் அரசியல் பயணத்தை எடுத்துச்செல்ல முடியும் என்பதற்கு ஒரு சான்றுகோலாக அவர் இருந்தார்.


பேரினவாத தவைகளிடம் நல்ல பிள்ளைகள் என்ற பெயர் பெறுகின்ற ஒரே இலட்சியத்துடனும் தங்கள் பதவிகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடனும் இருக்கும், பெரும் தேசிய கட்சிகளில் சங்கமமாகி போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களின் கரங்களிடம் இன்னும் நாம் எமது சந்ததிகளின் எதிர்காலத்தை அடகு வைக்கப்போகின்றௌமா என சிந்தித்துப் பாருங்கள் என்று மேடைகளில் முழங்கினார். 


முஸ்லிம்களும் சுயநிர்ணயமிக்க சம அந்தஸ்துள்ள தனித்தேசியமான ஒரு சமூகம் என்ற அடையாளத்தை கௌரவமாகப் பெற்றுக்கொள்வதற்கு தகுதியானவாகள்தான் என்ற வேண்டுகோலை முன்வைத்தார். அந்த இலக்கை நோக்கிப் பயணிப்பதற்காகத்தான் தனியான அரசியல் பயணத்தை தொடங்கினார். அவரது சமகாலத்தில் வாழ்ந்த பல அசியல் தலைவாகளுடன் அளவளாவி போதிய விளக்கங்களையும் வழங்கி அவாகளின் உள்ளங்களில் ஒரு தனிப்பெரும் தலைவராக தன்மானத்தின் சின்னமாக நேர்மையான அரசியல்வாதியாக பிரபல்யம் அடைந்தார்.


தமிழ், முஸ்லிம் உறவுகள் தழைத்தோங்க வேண்டும் என்பதில் அலாதியான கரிசனை கொண்டிருந்தார். பல தமிழ் அரசியல் தலைவர்களுடன் அடிக்கடி கூடி கலந்துரையாடல்களை நடாத்தி அவ்வப்போது எழுத்துருவில் உடன்படிக்கைகளையும் செய்துகொண்டதற்கு வலுவான ஆவணங்கள் சான்றாக உள்ளன. வடகிழக்கு மாநிலம் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய தாயகம் என்ற கோட்பாட்டில் பற்றுறுதியாக இருந்தார். அந்த மானிலத்துள் இரண்டு சமூகங்களும் அதிகார அலகுகளைப் பரஸ்பர புரிந்துணர்வுகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதே அவரது அவாவாகும். இதைப்பற்றி தமிழ் தலைவாகள் நன்கறிவார்கள்.


இந்நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகம் ஒரு தனித்தேசிய உரிமையைக் கொண்டதாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே தலைவர்அஷ்ரஃபின் அசைக்க முடியாத வேண்டுதலாகும். தேசியவாதம் என்பது மனிதகுலத்தின் நீண்ட சமூக வரலாற்று வளர்ச்சியின் வெளிப்பாடாகும். ஒரு மக்கள் கூட்டத்தின் குறித்த தனித்துவத்தின் அடிப்படையில் சமூக ஒருமைப்பாடு, சம வாய்ப்பு, சம சந்தர்ப்பம், சம நீதி, பாதுகாப்பு என்பனவற்றை உறுதிப் படுத்துவதற்கான ஒரு ஜனனாயக அரசியல் பொருளாதார சமூக பண்பாட்டுக் கட்டமைப்பாகும்.

 

பொதுவான மொழி, பொதுவான பிரதேசம், பொதுவான பொருளாதார வாழ்க்கை, பொதுக் கலாச்சாரத்தினூடாக வெளிப்படும் பொதுவான உளவியல் அமைப்பு ஆகியவற்கைக் கொண்ட ஒரு மக்கள் சமூகமானது ஒரு தனித்த தேசமாக வரையறுக்க முடியும் என்பது நியதியாகும். இவ்வாறான தகைமைகளைக் கொண்ட முஸ்லிம் சமூகம்  இலங்கையில் ஒரு தேசிய அந்தஸ்தை பெற்றுக்கொள்ள ஏன் முடியாது என்பது அவரது வாதமாகும்.


துரதிஷ்டவசமாக இவ்வாறான ஆளமான கூறுகளை புரிந்துகொள்ள முடியாதவாகளின் கைகளில் முஸ்லிம்களின் தலைவிதி இன்று சிக்கிச் சீரழிகின்றது. எதிர்கால சந்ததியின் தனித்துவ உரிமைகளை தாரைவார்த்துக் கொடுக்கும் இந்நிலைமையை மாற்றுவதானால் முஸ்லிம் அரசியல் மீண்டும் அஷ்ரபின் சிந்தனைக்குத் திரும்பியேயாக வேண்டும். பிரிபடாத ஒரு நாட்டிற்குள் 3 தேசியம் வாழ்கின்றது என்ற உண்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதுவே தலைவர் அஷ்ரஃபின் அடிப்படைக் கோட்பாடாகும். அவரது சிந்தனைகளும், செயல்களும் இன்றும் 20ஆவது யாப்பு திருத்தத்தில் தொடர்புபட்டனவாகவுள்ளன. 12½  வெட்டுப்புள்ளி, வடக்க கிழக்கு விவகாரம், மாகாணசபை முறைமை மாற்றம் போன்ற விடையங்கள் பல்வேறு வகைகளாக இன்றைய பேசுபொருளாக மாறியுள்ளன. இவற்றிற்கெல்லாம் தெளிவான பதில்களை தலைவர்அஷ்ரஃப் 18ம் திகதி ஆகஸ்ட் மாதம் 1999ம் ஆண்டு வெளியாகிய “சரிநிகர்” பத்திரிகையில் கேள்வி பதிலாக விளக்கியுள்ளார்.


வடகிழக்கு இணைப்புக்கு எவ்வாறு அவர் தனது காத்திரமான எதிர்ப்பை வெளியிட்டாரோ அதைவிட காட்டமாக வடக்கிலிருந்து கிழக்கை நிபந்தனையின்றி பிரிப்பதையும் அவர் எதிர்த்தார். இணைக்கும் போதும் பின்னர் நீதிமன்றத்தின் உதவியுடன் பிரிக்கும்போதும் மிக மோசமான வகையில் பழிவாங்கப்பட்டது வடகிழக்கு முஸ்லிம்கள் என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். 


சிறு பான்மை சமுகங்களின் தனித் தேசிய அடையாளத்தை சிதைப்பதற்காகவே அம்பாறை மற்றும் திருக்கோணமலை மாவட்டங்களில் உள்ள தமிழ் முஸ்லிம்களின் சனப்பரம்பலில் மாற்றம் கொண்டுவரப்படுவதற்கு ஏதுவாக பெரும்பான்மை சமூகங்களை அம்மாவட்டங்களில்   திட்டமிட்டுக் குடியேற்றியதனையெல்லாம் அவர் குறிப்பிடுகின்றார்.

 

இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு இருட்டறையில் கறுப்புப் பூனையைத் தேடும் அரசியலை முஸ்லிம் அரசியல் செய்து கொண்டிருக்கின்றது. பொதுவான சமூகம் சார்ந்த அஷ்ரஃபின் சிந்தனை முத்துக்களை குப்பையில் கொட்டிவிட்டு வர்த்தகமயமான அரசியலை அதற்கு மாற்றீடாகக் கொண்டுவந்து மொத்தமாகவும், சில்லறையாகவும் அரசியல் சந்தையிலே விலை பேசிக் கொண்டிருக்கின்றனர்.


எனவே, தலைவர் அஷ்ரபின் 20ஆவது நினைவு தினமான இன்று அவரை நினைவுகூர்ந்து நேசிக்கும் உள்ளங்களும் அவரது சிந்தனைகளைச் செவிமடுத்தோரும் நமது எதிர்கால சந்ததியினர் மீது சத்தியம் செய்து வர்த்தக அரசியலிலிருந்து விலகி அஷ்ரஃபின் கனவை நிறைவேற்ற உறுதிபூணுவோமாக.


“இறைவா, எம் வேறுபாடுகளை நீக்கிவை. முஸ்லிம் சமூகத்தை ஒற்றுமைப்படுத்திவை, முஸ்லிம் சமூகம், அரசியல் சுதந்திரமும், தனித்துவமும், சுபீட்சமும் பெறுமாக.”


மு.த. ஹஸன் அலி (முன்னாள் இராசாங்க அமைச்சர்)

செயலாளர் நாயகம், ஐக்கிய சமாதான கூட்டமைப்பு


No comments:

Post a Comment