பொருட்களை பதுக்கி வைத்திருந்த வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை - sonakar.com

Post Top Ad

Tuesday 7 April 2020

பொருட்களை பதுக்கி வைத்திருந்த வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

https://www.photojoiner.net/image/xT3WJ6T1

கிழக்கு மாகாணத்தில் திங்கட்கிழமை (6) ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் திடீர்  சுற்றிவளைப்பு சோதனையை மேற்கொண்டனர்.


இதன் போது, வியாபாரிகள் பதுக்கி வைத்திருந்த, தகரத்தில் அடைக்கப்பட்ட மீன் டின் , பருப்பு ஆகிய பொருட்களை  வியாபாரிகளிடமிருந்து  பறிமுதல் செய்யப்பட்டு, அரசின் கட்டுப்பாட்டு விலைகளில் மீன்டின் ஒன்று 100 ரூபாய்க்கும், பருப்பு 1 கி.கி. 65 ரூபாய்க்கும் பறிமுதல் செய்த அனைத்துப் பொருட்களும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்களின் மேற்பார்வையின் கீழ் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டன.

நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரியுமான ஆர்.எப். அன்வர் சதாத் தலைமையில்,  எம்.எம்.எம். றம்சீன், என்.ஏ. மாஜித், எம்.யூ.எம்.பசீர் ஆகிய புலனாய்வு உத்தியோகத்தர்களினால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

குறித்த சுற்றிவளைப்பு மட்டக்களப்பு நகரம், காத்தான்குடி, ஆரையம்பதி, செட்டிப்பாளையம், களுவாஞ்சிக்குடி, கொக்கட்டிச்சோலை மற்றும் கல்லாறு ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டன.

குறித்த சுற்றிவளைப்பின் போது மேலும் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் சட்டத்தை மீறிய பல வியாபாரிகளுக்கு எதிராக வழக்குகளும்  பதியப்பட்டன.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் காலப்பகுதில் வியாபாரிகள் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரியுமான ஆர்.எப். அன்வர் சதாத் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

ஊரடங்குச் சட்டத்தை மீறி வியாபாரத்தை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு எதிராக பொலிஸாரிடம் நுகர்வோர்கள் முறையிடுமாறு  வேண்டிக் கொள்கின்றேன்.

அத்தோடு எதிர் வரும் காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதுக்கல் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள், அதேபோன்று பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் ஆகியோர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக ஆறுமாத சிறைத்தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என்றார்.

=எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a Comment