அரச பாடசாலைகளில் கல்வி கற்க மாணவர்கள் தயக்கம்: ஹக்கீம் - sonakar.com

Post Top Ad

Friday 5 April 2019

அரச பாடசாலைகளில் கல்வி கற்க மாணவர்கள் தயக்கம்: ஹக்கீம்



இன்று அரச பாடசாலைகளில் மாணவர்கள் கல்வி கற்பதற்கு பின்வாங்குகின்றனர். காரணம் சர்வதே பாடசாலைகளின் அதிகரிப்பேயாகும் என நீர் வழங்கள், வடிகாலமைப்பு மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவுப் ஹக்கீம் நேற்று (04) கொழும்பு-02 ரி.பி.ஜாயா ஸாஹிராக் கல்லூரியின் புதிய மாடிக் கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.

பாடசாலையின் அதிபர் எம்.ஆர்.எம்.மன்சில் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான், மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிஜாமுடீன், கொழும்பு வலயக் கல்விப் பணிப்பாளர் ஜி.என்.சில்வா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அமைசர் தொர்ந்து அங்கு உரையாற்றுகையில்…

இந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற பாடசாலைகள் எதிர் கொள்கின்ற சவால்கள் சாமான்யமானவையல்ல இவற்றிற்கு ஈடுகொடுப்பதும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவது என்பதும் குறைந்த ஆதாயத்துடன் இருக்கின்ற குடும்பங்களில் இருந்து வருகின்ற மாணவர்களை ஊக்குவித்து வளர்த்தெடுப்பது என்பது சம்பந்தமான விடயங்களில் நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கின்றோம்.

இதே நேரம் சிங்கள மொழி மூலம் இரண்டு வகுப்புக்களும், தமிழ் மொழி மூலம் ஒரு ஆரம்ப வகுப்புக்களும் இருப்பதாக அதிபர் கூறினார். தமிழ் மொழி மூலம் கல்வி கற்பது என்பது அத்தியாவசியமான ஒரு விடயமாகும். குறைந்தபட்சம் ஆரம்ப வகுப்பு என்பது உளவியல் ரீதியாக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஒரு அடிப்படையான அம்சம். அதனால்தான் நாங்கள் தேசிய பாடசாலைகளில் ஆரம்ப வகுப்புக்களை ஆரம்பிக்கின்றோம்.



சில பாடசாலைகளில் ஆங்கில மோகம் என்ற ஒரு பகுதி இருக்கின்றது. சாதாரணமாக வருமானம் குறைந்த குடும்பங்கள் தமது பிள்ளைகளை ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்பதற்காக சர்வதேச பாடசாலைகளில் படிக்க வைக்கின்றனர்.

கொழும்பில் மாத்திரம் முஸ்லிம் மாணவர்கள் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சர்வதேச பாடசாலைகளில் படிக்கின்றனர். கட்டாயம் என்பது ஒரு சாமான்யமான கணக்கு அல்ல கொழும்பு மாவட்டத்தில் 20 முஸ்லிம் பாடசாலைகள் இருக்கின்றன. ஆனால் 20க்கும் மேற்பட்ட சர்வதேச பாடசாலைகள் இருக்கின்றன. மூலை முடுக்குகளில் எல்லாம் இன்று சர்வதேச பாடசாலைகள் காணப்படுகின்றன. அரச பாடசாலைகளில் கல்வி கற்பதற்கு பின்வாங்கும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

றோயல், பிஷப், மெதடிஸ், சென்.பீற்றஸ் போன்ற பாடசாலைகளும் சர்வதேச பாடசாலைகளின் தகைமையில்தான் உள்ளன. ஆனால் இப்பாடசாலைகளுடன் ஒப்பிடும் போது  இந்தப் பாடசாலைகள் பெரிய சவாலாகவே உள்ளன. இவ்வாறான பாடசாலகளை எவ்வாறு உட்சேர்ப்பது என்பது போன்றவற்றிற்கு முகங்கொடுத்துத்தான் நாம் இந்தப்பாடசாலைகளை வளர்க்க வேண்டும்.

பகுதிநேர வகுப்புக்களை நடாத்தி இந்தப் பாடசாலைகளின் தரத்தை உயர்த்த வேண்டும். மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த அரசியல் வாதிகளால் மட்டும் முடியாது மாறாக பெற்றோர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்களின் ஒத்துழைப்பு வேண்டும்.

முன்னைய காலங்களில் எமக்கு ஆசிரியர்கள் இலவசமாக பாடங்களை படித்துத்தந்தார்கள் ஆனால் இன்று அவ்வாறான நிலைமைகள் இல்லை. இந்தப் பாடசாலைகளை நாம் கடந்த காலங்களை விட முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும். அதற்கா தீவிரமாக ஆராய்ந்து கல்வியில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்களின் உறவுகள் மேம்படுத்தப்படல் வேண்டும், கற்பித்தலில் நவீன உபாயங்களை வேண்டும் என்றார்.

பாடசாலைக்கான நான்கு மாடிக்கான புதிய கட்டிடம் மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிஜாமுடீன் வேண்டு கோலிற்கு இனங்க மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரியவினால் நிதி ஒதுக்கப்பட்டு முதல் இரண்டு கட்ட நிதியில் நிருமாணிக்கப்பட்ட முதலாம் மாடிக் கட்டிடமே நேற்று திறந்து வைக்கப்பட்டது.

-ஏ.எஸ்.எம்.ஜாவித்

No comments:

Post a Comment