முஸ்லிம் இளைஞர்கள் வழி தவறிப் போகிறார்கள்: ஹலீம் - sonakar.com

Post Top Ad

Tuesday 26 February 2019

முஸ்லிம் இளைஞர்கள் வழி தவறிப் போகிறார்கள்: ஹலீம்



எமது நட்டின் வரலாற்றிலே ஆகக் கூடுதலான போதைப் பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்டவர்கள் என இரு முஸ்லிம் வாலிபர்கள் கைது செய்யபப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  அதற்கு முன்னர் பௌத்த மக்களின் புராதன புனித இடங்களுக்குச் சென்று தூபிகளில் ஏறி புகைப்படம் எடுத்தல் தொடர்பாக சில மாணவர்கள் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.   எமது இளைய சமுதாயத்தைப் பொறுத்தவரையில் நாம் எங்கே நிற்கிறோம். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பவை பற்றிய தெளிவாக செயற்பட வேண்டிய அவசரத் தேவைப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளிவாசல்களில், பாடசாலைகளில் இதன் சீரழிவு  கொடூரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே இதற்கான தீர்க்கமான பரிகாரத்தை காண முடியும் என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.



நீண்ட காலமாக கசாவத்தையில் இருந்து அக்குறணை செல்வதற்காக இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  பஸ் போக்குவரத்துச் சேவை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் அக்குறணை கசாவத்தை முஸ்லிம் பாடசாலையில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலை மைதானத்தில் அதிபர் எஸ். ஏ. பௌசான் தலைமையில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், இன்று போதைவஸ்துப் பாவனையால் இனறு; நாடே சீரழிந்து கொண்டு இருக்கும் ஒரு நிலையை காண்கின்றோம். பழைய காலங்களில் நகரப்புறப் பகுதிகளிலேயே இருந்துவந்த இந்தப் போதைவஸ்துப் பாவனை  கிராமங்கள் உள்ளிட்ட நாடு முழுவதும் மிகவும் சீக்கரமாக பரவி வருவதைக காண்க்கின்றோம். இந்தப் போதைப் பொருள் பாவனையில் இருந்தும் எமது பிள்ளைகளை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

மாகாண சபைகளில் முஸ்லிம் பாடசாலைகளின் அபிவிருத்திற்காக நிதி பகிர்ந்தளிக்கும் விடயத்தில் பெரும் பாரபட்சம் காட்டப்படுகிறது. நான் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் கால கட்டத்திற்கு முன்னர் மத்திய மாகா சபையில் முஸ்லிம் கல்வி அமைச்சராக பணியாற்றினேன். அக்கால கட்டத்தில் முஸ்லிம் பாடசலைகளை அபிவிருத்தி செய்து கொள்ள முடியாத நிலை காணப்பட்து. ஏனைய பாடசாலைகளின்  பௌதீக வளங்கள்   கட்டிட வளங்கள் மற்றும் ஆசிரியர் வளங்கள் பகிர்ந்தளிக்கும் விடயத்தில் ஓரம் கட்டும் நிலை காணப்பட்டது. அந்த நிலை தொடராக இருந்த வந்த போதிலும்  கடந்த காலங்களில் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து இந்த நியாயமற்ற தன்மைக்காக குரல் கொடுத்து வந்திருக்கின்றேன். 

2015 ஆம் ஆண்டு புதிய ஆட்சி வருகைக்கு பின்னர் கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்கின்ற வேலைத் திட்டத்தின் கீழ் மாகாண சபையின் கீழ் உள்ள பாடசாலைகளும் கவனத்திற் கொள்ளப்பட்டன. 

என்னுடைய தொடர்ச்சியான பாராளுமன்ற உரையின் மூலம் மாகாண சபைகளிலுள்ள  பாடசாலைகளும் உள்வாங்கப்பட்டு அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் முஸ்லிம் பாடசாலைகள் மட்டுமல்ல மாகாண சபையின் கீழ் உள்ள அபிவிருத்தி செய்யப்படாத அனைத்துப் பாடசாலைகளும்  இந்த திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. என்னுடைய பாராளுமன்ற உரையின் மூலமாக ஓரளவுக்கேனும் எமது இலக்குகளை வெற்றி கொள்ளக்கிடைத்துள்ளன என்பதை உறுதியாகக் கூற முடியும். 

கசாவத்தை என்ற ஊர் ஒன்று இருந்தாலும் அதற்குரிய பாதை வசதிகளையும், மின்சார வசதிகளையும், பாடசாலை, தபால் நிலையம் உள்ளிட்ட அனைத்து வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுத்தவர் மறைந்த அமைச்சர் ஏ. சீ. எஸ். ஹமீத் அவர்கள். இந்தக் கிராமம் இன்று  புதிய மாற்றத்துடன் சிறந்த பிரதேசமாக மிளிகின்றது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் சபா இல்லம் 281 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும்,  மினா இல்லம் 252 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும் மர்வா இல்லம் 217 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம். டி. முத்தலிப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

-இக்பால் அலி

No comments:

Post a Comment