கிழக்கில் பரவும் இனவாதத் தீயும் - சவால்களும் - sonakar.com

Post Top Ad

Sunday 13 January 2019

கிழக்கில் பரவும் இனவாதத் தீயும் - சவால்களும்


இலங்கையர் என்ற அடையாளத்தின் கீழ் வாழும் அனைவரையும் ஒன்றிணைப்பதன் மூலம் நிலையான அமைதியையும், நல்லிணக்கத்தையும். இனங்களுக்கிடையிலான பரபஸ்பர ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் அம்முயற்சிகள் சவாலுக்குட்படுத்தப்படுவதை காண முடிகிறது.

மாறாத மாற்றத்துடன் கட்சி அரசியலும், இன, மத சித்தாந்தங்களும் தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டு அவை முக்கியத்துவம் பெறுவதனால் இன ஒற்றுமை  என்பது எட்டாக்கணியாகவுள்ளது. பெரும்பான்மை என்ற மேலாதிக்க சிந்தனை இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை உருவாக்குவதோடு, அடக்குமுறைக்கும் வழிவகுப்பது மாத்திரமின்றி, பழிதீர்க்கும் படலத்தையும்  கடந்த காலங்களில் அரங்கேற்றியிருந்தது. இந்நாட்டை நான்கு நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த மேற்குல ஏகாதிபத்திவாதிகள் விதைத்து விட்டுச் சென்ற இனவாதமும், மதவாதமும்  சந்ததி வழியாகக் கடந்தப்பட்டு நாடு அழிவின்பால் நகர்ந்ததற்கு காரணமாயிற்று. 

அந்நிய ஏகாதிபத்தியவாதிகள் விதைத்துவிட்டுச் சென்ற இனவாத, மதவாதச்; சிந்தனைகொண்டோரினால் உருவான அமைப்புக்களினதும், அரசியல் கட்சிகளினதும்; செயற்பாடுகள் இன ஒற்றுமைக முயற்சிகளுக்கு தொடராக தடையாக அமைவதுடன் இனங்களுக்கிடையிலான நிம்மதிக்கு குந்தகம் விளைவித்து வருவதையும் வரலாற்று நெடுங்கிலும் அவதானிக்க முடிகிறது. 

ஒரு ஜனநாயக தேசத்தில் வாழும் பல்லின சமூகத்திலுள்ள ஒவ்வொரு இனத்திற்கும், இவ்வினம்; சார்ந்த அடிப்படை உரிமைகளையும், சுதந்திரத்தையும் ஏனைய இனங்களின் உரிமைகளைப் பாதிக்காத வகையில் அனுபவிப்பதற்கு இந்நாட்டின் அரசிலமைப்பில் இடமளி;க்கபட்டுள்ள போதிலும், இந்நாட்டின் சிறுபான்மை சமூகமான முஸ்லிம்கள் அனுபவிக்கின்ற அரசியல், பொருளாதார, சமூக, கல்வி, கலாசார, மத உரிமைகளைப்; பாதிக்கும் வகையில் இன ஒற்றுமையை விரும்பாத சிலர் போலியான குற்றச்சாட்டுக்களை அவரவர் சமூகத்தின் மத்தியில் முன்வைத்து வருவதை காண முடிகிறது.

ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் அல்லது தனி நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்படுகின்றன நடவடிக்கைகள் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அல்லது மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் செயற்பாடுகள் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் அதனை ஓர் இன ரீதியான கண்ணோட்டப் பார்வையாக மக்கள் மயப்படுத்த சமூகவலைத்தள செய்தி ஊடங்கள் உட்பட சமூக வலைத்தள எழுத்தாளர்களும் முயற்சிப்பதானது, கிழக்கில் நிம்மதியாக வாழுகின்ற தமிழ் முஸ்லிம் மக்களிடையிலான உறவுக்கு தீவூட்ட முற்படுவதாகவே உணர முடிகிறது.

புதிய கிழக்கு மாகாண ஆளுனராக முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்ட விடயமும், அண்மையில் வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் மாணவர்கள் பெற்ற பெறுபேறுகளும் ஒரு சில விரல்விட்டு எண்ணக் கூடிய இன ஒற்றுமையை விரும்பாதவர்களினால் மிக மோசமாக சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுகிறது. அத்துடன், ஓட்டமாவடியிலும் ஏறாவூரிலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விரும்பத்தாக சம்பவங்களும் தமிழ் பேசும் மக்களின் உறவை எரியூட்ட எடுக்கும் செயற்பாடாகவெ தமிழ் பேசும் சமூகத்திலுள்ள இன உறவை மதிக்கின்ற மக்களால் நோக்கப்படுவதை குறிப்பிட்டாக வேண்டும்.

இவை கிழக்கில் இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் பெரும்; சவால்மிக்க விடயமாக மாறி விடுமாக என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமாத்தரிமின்றி, இத்தகையவர்களின் செயற்பாடுகள் கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் பேசும் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையை சீர்;குழைக்க மூன்றாம் சக்திகளுக்கு வழி ஏற்படுத்தி விடலாம். இந்நிலைமைகள் உருவாகாமல் தவிர்க்கப்பட வேண்டுமாயின் இனவாத, மதவாத மற்றும் பிரதேசவாத சிந்தனை கொண்டவர்களின் விமர்சனங்கள், கருத்துக்கள் என்பவற்றை உடைத்தெரிந்து இன ஒற்;றுமையை ஏற்படுத்துவதற்கு ஒன்றிணைய வேண்டி தேவை கிழக்கு வாழ் தமிழ் பேசும் சமூகங்களின் கடப்பாடகும் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. கிழக்கில் கசப்பான வரலாறுகள் மேலும் உருவாகாமல் தவிர்க்கப்படுவதற்கு இக்கடப்பாடு தமிழ் பேசம் மக்களிடையே முதன்மை பெற வேண்டும்.

தவறுகளின் வரலாறுகள்

மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர் ஜவர்தனாவினால்; 1943ஆம் இலங்கை அரசாங்க சபையில் தனிச்சிங்களம் அரச கரும மொழியாக ஆக்கப்பட வேண்டுமென முன்மொழியப்பட்டபோது, அதை எதிர்த்து வாதித்திட்ட மறைந்த முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியு,ஆர்.டி பண்டாரநாயக்க பின்னர் தனது சுய அரசியலுக்காகவும,; பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் தனக்கான செல்வாக்கை மேலோங்கச் செய்வதற்காகவும் 1956ஆம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டத்தை முன்மொழிந்து நிறைவேற்றினார். அந்நாளிலிருந்து பௌத்த சிங்கள இனவாதச் சிந்தனையாளர்களின் சிறுபான்மை இனங்களுக்கெதிரான செயற்பாடுகள் பல்வேறு தளங்களிலிருந்தும் முன்னெடுக்கப்படத்; தொடங்கியது.

பௌத்த சிந்தனைவாத்தினால் ஏற்பட்ட வரலாற்றுத் தவறின்  எதிரொலியானது வளமான இலங்கையை சுடுகாடாக மாற்றியது. அரசியல், சமூக, பொருளாதாரத்தில் இந்நாட்டை நலிவடையச் செய்ததுடன் பல்லாயிரக்காண அப்பாவிகளின் உயிர்களை காவுகொண்டும்; இந்நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யக்கூடிய பெருமதிமிக்க மனிதவளத்தை ஊனமாக்கியும், கடல் கடந்து வாழவும்; செய்திருக்கிறது. 

குறிப்பாக வடக்கு, கிழக்கு  தமிழ் பேசும் மக்களின் சமூக, பொரளாதார, அரசியல், கல்வி. கலாசாரக் கட்டமைப்புக்கள் திட்டமிட்டு சிதைக்கப்பட்டன. 30 வருட கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வலிகளுக்கு இன்னும் முறையான நிவாரணங்கள் வழங்கப்படாத நிலையில், அவ்வலிகளின் குரல்கள் தேசியத்திலும் சர்வதேசத்திலும் ஒலிக்கத் தொடங்கியது. 30 வருட வரலாற்றுத் தவறுகளின் தாக்கம் இந்நாட்டில் வாழும் மூவின மக்களையும்தான் பாதித்தது. யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்களை அண்மித்துக் கொண்டிருக்கும் நிலையிலும் இனவாத சிந்தனைகளின் வெளிப்பாடுகள் ஆங்கங்கே இடம்பெற்றுக்கொண்டு இருப்பதை அவதானிக்க முடிகிறது.

பௌத்த மத எழுச்சிக்காகப் செயற்படுகின்றோம் என்று கூறிக்கொள்ளும் பலசேனாக்களும், பலகாயக்களும் பௌத்த தர்மங்களைப் பற்றிப் பேசாமல் சிறுபான்மைச் சமூகங்களின் மத, கலாசார விடயங்களுக்கு மாசு கற்பித்துக் கொண்டும், போலிக்குற்றச்சாட்டுக்களையும், வெறுப்புப் பேச்சுக்களையும் நல்லெண்ணம் கொண்ட பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் அவ்வப்போது முன்வைத்து  தொடர்ந்து வரலாற்றுத் தவறை செய்து வருகின்றனர்.

இவ்வாறு செயற்படுகின்றவர்களால் எவ்வாறு இன நல்லிணக்கம்; பாதுக்கப்படும். இவர்களால் நாட்டில் நல்லிணக்கம்; வளர்க்கப்படுவதற்குப் பதிலாக அவை சிதைக்கப்படுமென்றே கூற வேண்டும். இனவாத விஷத்தைக் கக்கும் இத்தகையவர்களின் செயற்பாடுகளில் எவ்வித உண்மைத்தன்மையுமில்லை என்பதை பல பௌத்த சிங்கள மக்கள் புரிந்திருக்கிறார்கள். அதுமாத்திரமின்றி, நல்லிணக்கத்தையும், சகவாழ்வையையும், இன ஒற்றுமையையும் விரும்புகின்ற ஏராளமான பௌத்த சிங்கள மக்களுக்கு இத்தகையவர்களின் இனவாத மற்றும் மதவாதச் செயற்பாடுகள் தலைகுனிவை ஏற்படுத்தியிந்தமையை கடந்த காலங்களில் காண முடிந்தது. 

அவ்வாறுதான் கடந்த காலங்களில் வடக்கிலும், கிழக்கிலும்  தமிழ் பேசும் சமூகங்களுக்கிமையில் பிரிவினையை ஏற்படுத்தி அதில் பல தரப்பினர் பலன் கண்டிருக்கிறார்கள். வீழ்ந்து கொண்டிருந்த அரசியல் செல்வாக்கை தூக்கி நிமிர்த்தியருக்கிறார்கள். தற்போதும் அத்தகைய இலக்குகளை அடந்து கொள்ளவும் ஏனைய பதவி, பட்டம் மற்றும் பணப் வெகுமதிகளைப் பெற்றுக்கொள்ளவும்  தமிழ் பேசும் உறவை சமூக வலைத்தளங்களினூடாகக் காணப்படுத்திக் கொண்டிருப்பதை ஜீரணிக்க முடியாமலிருப்பதாக கூறப்படுவதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

இருப்பினும். அரசியலுக்காகவும், சுயநலன்களுக்காகவும் அப்பாவி தமிழ் பேசும் மக்களுக்கிடையிலான உறவைத் துண்டாடி, தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் அச்சத்தை ஏற்படுத்தி சுய நலன்களை அடைந்து கொள்ள மேற்கொள்ளப்படுகின்ற முயற்சி;;கள் ஒருபோதும் வெறறியளிக்காது. இம்முற்சிகள் வெற்றியளிக்க இடம்வழிக்கப்படுமாயின் அவை வரலாற்றுத் தவறாகவே கருதுப்படும். இவ்வறலாற்றுத் தவறுகளிலிருந்து; தமிழ பேசும் இரு சமூகங்களும் மீள வேண்டுமாயின் இன ஒற்றுமைக்கு முக்கியத்துவம் வழங்குவது காலத்தின் அவசியமாகும்.

காலத்தின் தேவையில்; ஐக்கியம்

இனவாதத்துக்கெதிரான இன ஒற்றுமையில் தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமையானது காலத்தின் தேவையாகவுள்ளது. குறிப்பாக 1990களின் பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே காணப்படும் இன ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான சதித்தித்திட்டங்கள் அங்காங்கே இடம்பெறுவதைக் காண முடிகிறது.10 அத்தகையவர்களினால் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் இனவாதக் கருத்துக்கள் அவற்றைத் தெட்டத்தெளிவாகப் புலப்படுத்துகிறது. தமிழ், முஸ்லிம் சிறுபான்மை இனங்களின் இன உறவு சீர்குலைமாயின் இனவாத சிந்தனைகொண்டோரின் செயற்பாடுகளை மிக இலகுவாக முன்நகர்த்துவதற்கும் அவர்களின் இலக்குகளை அடைந்து கொள்வதற்குமான கதவுகள் இலகுவாக திறந்து கொள்ளப்படும் என்பதை இரு சிறுபான்மை இனங்களும் புரிந்;து செயற்படுவது அவசியமாகும்.

ஒன்றுமை என்பது ஓரு பேராயுதம். எந்தவொரு சமூகமோ அல்லது சமூகங்களோ ஒற்றுமையுடன் தங்கள் தங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றபோதுதான் எதையும் சாதித்திட முடியும். அந்த ஒற்றுமையின் வெளிப்பாடு கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தலிலும் 2018 ஒக்டோபரில் நிகழ்ந்த ஜனநாயக விரோத ஆட்சி மாற்றத்திலிருந்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பதிலும் வெளிப்படுத்தப்பட்டது. 

இருப்பினும் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அந்த மாற்றம் ஏமாற்றமாகி விடக் கூடாது. இன்னும் எஞ்சியுள்ள ஒன்றை வருடங்களில் இ;த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் எந்தவொரு இனத்தையும் பாதித்து விடக் கூடாது. குறிப்பாக அரசியல் அதிகாரப் பரவலாக்கத்திற்கான அரசியலமைப்பு மாற்றத்தினால் எந்தவொரு சமூகமும் இன்னுமொரு சமூகத்தின் அடக்கு முறைக்கு ஆட்கொள்ளப்படாது அமைவதே வரலாற்;றுத் தவறுகள் நிகழலாமல் பாதுகாக்கும் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாகவுள்ளது.

இலங்கையை பல நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த மேற்குல ஆட்சியாளர்களிடமிருந்து மீட்டு, இந்நாட்டு மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசித்திட செய்த இந்நாட்டுப்பட்டாளர்கள்; இன, மத, மொழி பேதமின்றி ஒற்றுமையுடன் செயற்பட்டு சுதந்திரத்துக்காகப் போராடியதன் பயனாகவே இந்நாடு சுதந்திரம் பெற்றது. சுதந்திர இலங்கை உருவாகுவதற்கும் ஒற்றுமையே பேராயுதமாக அன்று பயன்படுத்தப்பட்டது.

இந்நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகமான தமிழ் பேசும் சமூகங்கள்; தங்களது உரிமைகளை தாங்கள் சுதந்திரமாக அனுபவிக்க வேண்டும் என்று அன்று கோரியபோது, அவற்றை வழங்க மறுத்த அன்றைய சிங்கள ஆட்சியாளரின் விரும்பத்தகாத நடவடிக்கைள் ஆயுதப்போராட்டத்தை நோக்கி நகரச் செய்த வரலாறு நம்முன் உள்ளது. சிறுபான்மையினமான தமிழ் சமூகத்தின் உரிமைப் போராட்டத்துக்கு முறையான தீர்வு இன்னும் கிடைக்கப்பெறாத நிலையில், இந்நாட்டில் வாழும் இன்னுமொரு சிறுபான்மை சமூகமான முஸ்லிம் சமூகத்தின் மீதும் இனவாதத்தின் கழுகுப் பார்வைகள் திருப்பப்படாது பாதுகாக்கப்பட வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் மீது இனவாதச் சிந்தனைகள் உருவாகக் காரணமாக இருந்தவர்கள், இருப்பவர்கள் ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஒரு சில பிரச்சாரகர்களும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

பழைய பல்லவிகளின் நிறுத்தம்

முஸ்லிம் அரசியல் வாதிகளும், பிரச்சாரகர்களும் முன்னெடுக்கின்ற நடவடிக்கைள் ஏனைய சமூகத்திலுள்ள இனவாதச்சிந்தனையாளர்களின் சிந்தனைகளை ஊக்கப்படுத்துவதாக அமைந்து விடக் கூடாது. கடந்த காலங்களில் இரு சமூகங்களும் ஒரு சமூகத்தினால் மற்றுமொரு சமூகம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது நிதர்சனம். அப்பழைய பல்லவிகளை மீண்டும் மீண்டும் பாடி கிழக்கின் எதிர்கால இன ஒற்றுமையை  கேள்விக்குட்படுத்துவது நியாயமாகாது. இது, தமிழ்பேசும் சமூகங்களை பிரித்தாழ நிணைக்கும் மூன்றாம் சக்திகளுக்கு வாய்க்கால் வெட்டியதாக அமைந்து விடும்.

தேசிய அரசியலில் பெரும் தேசியக் கட்;சிகள் மேற்கொண்டு வருகின்ற செயற்பாடுகளும், முன்வைக்கின்ற கருத்துக்களும் சிறுபான்மை சமூகங்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுமாக அல்லது காலம் கடத்துமாக என்ற கேள்விக்கு முழுயான விடை காணப்படாத நிலையில் தமிழ் பேசும் சமூகங்களுக்கிடையில் விஷமத்தனமான  கருத்துக்களை முன்வைத்து இரு சமூகங்களின் ஒற்றுமையை சீர்குழைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதானது இரு சமூகங்களுக்கும் ஆரோக்கியமாக அமையாது.

இச்சூழ்நிலையில், தமிழ்பேசும் சமூகங்களுக்கிடையே ஒற்றுமையின் அவசியம் உணரப்படவேண்டியதொன்றாக நோக்கப்படுகிறது. பொதுவாக தமிழ் பேசும் சமூகத்தின் இருப்பு ஆரோக்கியமானதாக அமைய வேண்டுமாயின் இரு சமூகத்திற்கும் பொதுவான விடயங்களில் இரு சமூக அரசியல் தலைவர்களும், பிரமுகவர்களும், சிவில் அமைப்புக்களும் வேஷம் போடுவதை நிறுத்தி, வஞ்சம் தீர்ப்பதை மறந்து ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தின்  நலனை நிறைவேற்றுவதற்கும்;, இனவாதத்திற்கு எதிராகச் செயற்படுவதற்குமான மனப்பாங்கை ஏற்படுத்தி ஒற்றுமைப்படுவது அவசியமாகவுள்ளது.

தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் தமிழ்பேசும் மக்களுக்கு நன்மை கிடைக்கும் விடயத்தில் குறைக்கண்டு அவற்றை விமர்சனம் செய்து, வெற்றுக்கோஷங்கள் கொண்ட ஊடக அறிக்கைகளை விடுவதைக் கைவிட்டு  இரு இனங்களுக்கிடையிலும் சந்தேகங்களை உருவாக்கி சுயநல அரசியல் வியாபாரம் செய்யும் இரு இனத்தினதும் அரசியல்வாதிகளின் பின்னால் மக்கள் செல்வதைத் தவிர்ப்பதும் அவசியமாகவுள்ளது. இந்த அவசியத்திற்கான மாற்றம் இரு சமூகங்களிலும் ஏற்படுத்தப்பட வேண்டும். 2015 ஆட்சி மாற்றத்திற்காக வாக்குகளைப் பயன்படுத்திய தமிழ் பேசும் சமூகங்கள், இச்சமூகங்களின் ஒற்றுமையை சீர்குழைக்க எடுக்கப்படும்  முயற்சிகளுக்கு எதிராகவும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய தேவையை அவசரமாக உணர வேண்டியுள்ளது. அத்தோடு, தங்களுக்குள்ள பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ள விட்டுக்கொடுப்புடனும்;, புரிந்துணர்வுடனும் செயற்படுவதற்கும்; முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதும் சமகாலத் தேவையாகக் கருதப்படுதல் வேண்டும்.

ஒரு தேசிய இனத்தின் இனத்துவ அடையாளங்களை அழிப்பதற்கு, அல்லது அந்த இனம் தமது தனித்துவ அடையாளங்களை வெளிக்காட்டக் கூடாது என அச்சுறுத்துவதற்கு யாருக்கும் உரிமையில்லை. ஆனால், கிழக்கில் அத்தகைய உரிமைகள் ஒரு சில அதிகாரிகளினாலும், ஏனைய தரப்பினர்களினாலும் மறுக்கப்படுவதையும் காண முடிகிறது; இவை ஏற்றுக்கொள்ள முடியாதவை. 

இந்நாட்டில் இனவுறவுடன் நிம்மதியாக அனைத்து இனங்களும்; வாழ வேண்டுமாயின் இனவாதத்திற்கு எதிரான இன ஒற்றுமை அவசியமாகவுள்ளது.  அத்தோடு இனவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளவர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், குறித்த நபர்களுக்கு எதிராக சட்டம் அதன் கடமையை முறையாகச்; செய்வதற்கும்  இன ஒற்றுமையினூடாக உரிய தரப்புக்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட  வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகும். 

இவ்வாறான நிலையில், கிழக்கின் புதிய ஆளுனராக பொறுப்பேறுள்ள முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ. எம். ஹிஸ்புல்லாவின் மீதுதுள்ள பெரும்சவால்தான் கிழக்கில் இனவாதத்திற்கு எதிராக இன ஒற்றுமை ஏற்படுத்துவதாகும்.  சமூக வலைத்தளங்களில் சுட்டிக்காட்டப்படுகின்ற குற்றச்சாட்டுக்களில் எத்தனை வீதம் உண்iயிருக்கிறது என்பதை அவரது இந்த ஆளுனர் பதவிக் காலத்தில் எடுக்கின்ற நடவடிக்கைகளின் மூலமே கண்டுகொள்ள முடியும்.

இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளற்ற நடவடிக்கைள் அவரது இந்த பதவிக் காலத்தில் முன்னெடுக்கப்படுமாயின் தற்போது அவர் தொடர்பில் முன்வைக்கப்பட்டு வருகின்ற குற்றச்சாட்டுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

இச்சூழலில் கடந்த சிர தினங்களாக மூவின மக்களும் வாழும்  கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மைக்குள் சிறுபான்மையாகவும் சிறுபான்மைக்குள் பெரும்பான்மையாகவும் வாழும்  தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான கசப்பான பழைய பல்லவிகள் தொடர்ந்தும் பாடப்பட்டுக் கொண்டிருப்பதை சமூகவலைத்தளங்களில் அவதானிக்க முடிகிறது. 

இவை தமிழ் பேசும் சமூக உறவில் கீறலை ஏற்படுத்தும் செயற்பாடாக அமைந்துவிடாது தவிர்க்கப்பம வேண்டுமாயின் கிழக்கு அரசியல்வாதிகள் மற்றும் கிழக்கின் புதிய ஆளுனர்  அடங்களாக  இன ஒற்றுமையை நேசிக்கின்ற  அனைத்துத் தரப்புக்களும் ஒன்றிணைந்து தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான இன ஒற்றுமையை சீர்குழைக்கும் இக்கருத்துவாதங்களுக்கு எதிராகவும் இன ஒற்றுமையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்தியும்; செயற்பட  முன்வர வேண்டுமென்பதே தமிழ் பேசும் நல்லுள்ளங்களின் அவாவாகும்.

-எம்.எம்.ஏ.ஸமட்

No comments:

Post a Comment