ச'துறை: டிப்போ இடமாற்றத்துக்கு எதிராக போராட்டம் - sonakar.com

Post Top Ad

Tuesday 16 March 2021

ச'துறை: டிப்போ இடமாற்றத்துக்கு எதிராக போராட்டம்

 


சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளதாக அண்மையில் வெளியான தகவலையடுத்து அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த டிப்போவை அவ்விடத்திலையே நிரந்தரமாக இருக்கச் செய்ய பல கட்ட நடவடிக்கைகள் பலதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டிருந்தும் அவை வெற்றியளிக்காமையால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போவை அங்கையே நிரந்தரமாக வைக்குமாறு கோரி சம்மாந்துறை இளைஞர்கள் இன்று காலை அந்த சாலைக்கு முன்னால் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


ஜனாதிபதி, பிரதமர், போக்குவரத்து அமைச்சர், பிராந்திய தலைவர்கள் என பலரையும் விழித்து எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்திக்கொண்டு கோஷங்களை எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள் தீர்வு கிடைக்கும் வரை போராடபோவதாக  அறிவித்துள்ளனர். 


அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், மிகப்பெரிய பிரதேசமான சம்மாந்துறைக்கு அந்த டிப்போ இருப்பதன் மூலம் பல நன்மைகள் இருப்பதாகவும் இந்த இடத்திலிருந்து அந்த டிப்போ அகற்றப்படுவதனால் சம்மாந்துறை பொதுமக்கள் கடுமையான போக்குவரத்து நெருக்கடியை அனுபவிப்பதாகவும் பெண்கள், பாடசாலை மாணவர்கள் அதிலும் குறிப்பாக மாணவிகள் கடுமையான  அசௌகரியங்களை அனுபவித்துவருவதாகவும் கருத்துக்களை வெளியிட்டனர்.


இந்த விடயம் தொடர்பில் அண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷுறா அமைப்பினர் சம்பந்தப்பட்ட தரப்பினரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  


-நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம்

No comments:

Post a Comment