தமிழ் இனத்துக்கு இன்று வரை சுதந்திரம் கிடைக்கவில்லை: சாணக்கியன் - sonakar.com

Post Top Ad

Friday 29 January 2021

தமிழ் இனத்துக்கு இன்று வரை சுதந்திரம் கிடைக்கவில்லை: சாணக்கியன்


இலங்கைக்கு சுதந்திரம் ஆங்கிலேயரினால் கிடைத்த போதிலும் இங்கு வாழும் பூர்வீக குடிகளான எம் தமிழ் இனத்துக்கு இன்று வரை சுதந்திரம் கிடைக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.


சுதந்திர தினத்தன்று முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழின எதிர்ப்புக்கு எதிராக பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையிலான போராட்டத்திற்கு ஒரு தமிழன் என்ற வகையில் எனது முழு ஆதரவினையும் தெரிவிக்கின்றேன்.


அத்துடன் இதில் நானும் பங்கு கொண்டு முன் நடாத்துவேன் என உறுதி கூறுகின்றேன். தந்தை செல்வா மற்றும் சி.மூ இராசமாணிக்கம் ஐயாவின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தமிழரின் நீதிக்கான போராட்டத்தினை இன்று வரை எமக்கான உரிமை மற்றும் நீதி கிடைக்கும் வரை தொடர்வது எமது தலையாய கடமையாகும்.


இலங்கைக்கு சுதந்திரம் ஆங்கிலேயரினால் கிடைத்த போதிலும் இங்கு வாழும் பூர்வீக குடிகளான எம் தமிழ் இனத்துக்கு இன்று வரை சுதந்திரம் கிடைக்கவில்லை. எமது போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும் தமிழர்களாகிய நாம் அனைவரும் தமிழின அழிப்புக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.


வடக்கு, கிழக்கின் பூர்வீக குடிகளாகிய நாம் எமது உரிமைக்காக 60 ஆண்டுகளுக்கு மேல் போராடி வருகின்றோம். தமிழர்களின் போராட்டங்களுக்கு செவிசாய்க்காத இலங்கை பேரினவாத அரசு தமிழர்களை அடக்குவதற்கான போராட்டங்களில் ஈடுபட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே.


வடக்கு, கிழக்கினை இராணுவ ஆட்சியாக மாற்றிக்கொண்டு வரும் இலங்கை அரசு தமிழர்களின் இருப்பினை இல்லாதொழிக்கவும், தமிழர்களின் பண்பாட்டுச் சின்னங்களை அழிப்பதற்காகவும் பல முயற்சிகளை இன்றுவரை முன்னெடுத்து வருகின்றது.


பல்வேறு திணைக்களங்கள் மூலமாகவும் பௌத்த மயமாக்கலை முன்னெடுத்துவரும் இலங்கை அரசு தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் சமய வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் தடைகளை விதிக்கின்றது.


வடக்கில் குருந்தூர் மலை ஐயனார் கோவில், வெடுக்குநாறி மலை சிவன் கோயில் மற்றும் கிழக்கில் கண்ணியா பிள்ளையார் கோயில், குசனார் முருகன் ஆலயம் போன்ற தமிழர்களின் பல்வேறு இடங்களிலும் தமிழர்கள் வழிபாடுகளை மேற்கொள்ள இடமளிக்காது பௌத்த ஆலயங்களை நிறுவுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.


தமிழர்களுக்கு மட்டுமல்லாது முஸ்லீம் சமுதாய மக்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது நீங்கள் அனைவரும் அறிந்த விடயமே.


மனித உரிமை மீறல்களுக்கெதிராக குரலெழுப்பும் ஊடகவியலாளர்கள் மீதும் பல்வேறு  உரிமை மீறல்கள்  முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் அச்சுறுத்தல் பல்வேறு வகைகளிலும் மேற்கொள்ளப்படுகின்றது. ஊடகவியலாளர் சுதந்திரம் தற்போதைய இலங்கை அரசாங்கத்தில் இல்லை என்றே கூற வேண்டும்.


தமிழர்களுக்கான உரிமையினை வென்றெடுக்க உலக நாடுகள் வரை எம் தமிழர்களின் குரல் எழ வேண்டும். மேற்கொள்ளப்படும் இந்தப் போராட்டத்தில் எனது முழு ஆதரவினையும் வழங்குகின்றேன் என மீண்டும் ஒரு முறை கூறிக்கொள்கின்றேன்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment