முஸ்லிம் க.தி. பணிப்பாளருக்கொரு திறந்த மடல்! - sonakar.com

Post Top Ad

Tuesday 16 June 2020

முஸ்லிம் க.தி. பணிப்பாளருக்கொரு திறந்த மடல்!


பதவி பட்டம் செல்வம் என்பவை நிரந்தர சொத்துக்கள் அல்ல. இன்று இருக்கும் நாளை சென்று விடும். இதனை நாம் எமக்கு முன்னர் தோன்றிய காரூன், ஹாமான், பிர்அவ்ன் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறுகளில் இருந்து படித்துள்ளோம். அல்லாஹ் நாடியவர்களுக்கு ஆட்சி அதிகாரங்களை வழங்குகிறான். அவன் நாடியவர்களிடமிருந்து அவற்றை களைந்து  எடுத்துவிடுகின்றான். இது குர்ஆனின் விளக்கமாகும். 

குறித்த இத்திணைக்களத்தில் இதுவரை எத்தனையோ பட்டதாரிகள் பணிப்பாளர்களாக கடமை புரிந்துள்ளார்கள். அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொள்வானாக! அவர்கள் எவரும் பொதுமக்களுக்கு கர்வத்தனமாக ஆணையிடக் கூடியவர்களாகவோ! எச்சரிக்கக் கூடியவர்களாகவோ  வார்த்தைகளை அமைத்துக் கொள்ளவில்லை. அவர்களிடம் ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும் கூட நல்ல பண்புடனும் கனிவுடனும் இரக்க சுபாவத்துடனும் நடந்து கொண்டுள்ளார்கள். 

கடந்த நாட்களில் பள்ளிவாசல் விடயங்கள் தொடர்பாக கருத்துக் கூறும் போது நீங்கள்   பள்ளி நிர்வாகிகளை விலக்குவோம், நீக்குவோம் என்றெல்லாம் கூறி அப்படிச் செய்ய வேண்டாம் இப்படிச் செய்ய வேண்டும் என்றெல்லாம் அதிகாரத் தொனியில் நிர்வாகங்களை ஏழனமாக கருதி, கர்வம் பிடித்தவர்களைப் போல ஆணையிடக்கூடியவராக நடந்து கொண்டதை வீடியோக்களில் காணக்கிடைத்தது.

பள்ளிவாசலை நிருவகிக்கும் பெரும்பாலான நிர்வாகங்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தமது சொந்த கால நேரங்களை ஒதுக்கிக் கொண்டு பள்ளிவாசல்களையும், அதில் கடைமைபுரியக் கூடியவர்களையும் பரிபாலித்துக் கொண்டு ஜமாஅத்தினரின் தேவைகளையும் இயன்றளவு நிறைவு செய்து கொடுத்த வண்ணம் பொறுப்பைச் சீராகச் செய்து வருகின்றனர். அவர்களை நீங்கள் நீக்க வேண்டிய தேவையில்லை. உங்களுடைய இவ்வாறான முறைகெட்ட வார்த்தைப் பிரயோகங்களை விரும்பாத அவர்களே விலகிக் கொள்வார்கள். அவ்வேளைகளில் நீங்கள்தான் அப்படியான பள்ளிகளின் நிருவாகத்தைச் செய்ய வேண்டிய நிலைமை உருவாகும். நிருவாகிகள் எந்தவிமான ஊதியமும் பெற்று வேலை செய்பவர்கள் அல்ல என்பதை நீங்கள் அறியவில்லை போலும். பெரும்பாலான பள்ளிவாசல்களில் ஊர்மக்கள் நிருவாகத்தை சிலர்மீது பலவந்தமாக ஒப்படைக்கிறார்கள். 

அவர்கள் தானாக விரும்பி பொறுப்பெடுப்பது மிகவும் அரிதாகும். இப்படியான இடங்களை உங்கள் கவனத்தில் எடுத்து உங்கள் போக்கை மாற்றிக் கொண்டு சமூகத்துக்கு நல்லதைச் செய்ய முன்வாருங்கள்.

ஈத்தம் பழத்தினை கூட பூர்த்தியாக எடுத்து வழங்கமுடியாமல் இருக்கும் இத் திணைகளத்தின் வள்ளல் அப்பொழுது புரியவரும். கடந்த ஒரு சில மாதங்கள் பள்ளிவாயல்களில் கடைமை புரிவோர்களின் மாதாந்த ஊதியங்களை வழங்கமுடியாமல் தனவந்தர்களிடம் நிர்வாகிககள் கையேந்திக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது கூட இத் திணைக்களத்தால் ஒரு பங்களிப்பையும் செய்யாமல் இவ்வாறு கர்வப் பேச்சுக்களை பேசுவதை கவனிக்கும் போது மனதுக்கு வேதனையாக இருக்கின்றது. ஆனால் பள்ளிவாயலில் கடமைபுரிவேர்களின் ஊதியங்களை பூர்தியாக வழங்குங்கள் என ஆணையை மட்டும் சத்தமாக சொன்னீர்கள். 

மார்க்க சட்ட திட்டங்களை கற்ற நீங்கள் அல்லாஹ்வை முறையாக பயந்து நபிகளாரை உள்ளத்தால் நேசித்து தனது கடமையை பணிவுடன் மேற்கொள்ளுங்கள். அல்லாஹ் அருள் புரிவான். பள்ளிவாயல் நிர்வாகங்களை தெரிவு செய்யும் போது பல விடயங்களை கவனிக்கும் எமக்கு பள்ளிவாயல்களின் மேற்பார்வைக்கும் அதனது சொத்துக்களுக்கு பொறுப்பாக வரும் வக்பு சபைகளுக்கும் பொறுப்பாக வரும் பொறுப்புதாரிகளை தேர்ந்தெடுப்பதில் எதனையும் கவனிக்க முடியாமல் இருப்தையிட்டு கைசேதப்படுகிறோம். 

வல்லவவன் அல்லாஹ் நமக்கு விடிவைத்தருவானாக! 

-புத்தளம் தாஹிர்  

No comments:

Post a Comment