ஜுன் 5 கிரகண தொழுகை அவசியமில்லை: ACJU - sonakar.com

Post Top Ad

Wednesday 3 June 2020

ஜுன் 5 கிரகண தொழுகை அவசியமில்லை: ACJU


இவ்வருடம் ஜூன் மாதம் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் (வெள்ளி மற்றும் சனிக்கிழமை) இன்ஷா அல்லாஹ் புறநிழல் சந்திர கிரகணம் (Penumbral Lunar Eclipse) ஏற்படவுள்ளதாக வானியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நிகழவிருக்கும் இப்புறநிழல் சந்திர கிரகணம் கொழும்பு நேரப்படி வெள்ளிக்கிழமை (05 ஆம் திகதி) இரவு 11:15 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை 02:34 மணி வரை ஏற்படவுள்ளதாகவும் அது இலங்கையில் தென்படலாம் எனவும் அவ்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

புறநிழல் சந்திர கிரகணத்தின் போது சந்திரனின் வெளிச்சத்தில் மங்கலான ஒரு நிலையே ஏற்படும். சந்திரன் பூரணமாகவோ அல்லது அதில் ஒரு பகுதியோ மறைவதில்லை. சூரியன் அல்லது சந்திரன் முழுமையாக அல்லது அவற்றில் ஒரு பகுதி மறைவதைக் காணும் போதுதான் கிரகணத் தொழுகை நிறைவேற்றப்படுவது சுன்னத்தாகும். எனவே, புறநிழல் கிரகணத்தின் போது கிரகணத் தொழுகை நிறைவேற்றப்படுவது சுன்னத்தாகமாட்டாது. இதனடிப்படையில் இதன்போது கிரகணத் தொழுகையை நிறைவேற்ற அவசியமில்லை என்பதைக் கவனத்திற் கொள்ளவும்.

“சூரியன் மற்றும் சந்திரன் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். ஒருவருடைய மரணத்திற்காகவோ அல்லது ஒருவரின் பிறப்பிற்காகவோ அவை மறைவதில்லை. ஆகவே அவ்விரண்டையும் நீங்கள் (மறையக்) கண்டால் அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள், தக்பீர் சொல்லுங்கள், தொழுகையில் ஈடுபடுங்கள், தர்மம் செய்யுங்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(ஸஹீஹுல் புகாரி - 1044)

 

அஷ்-ஷைக் எம். அப்துல் வஹ்ஹாப் 
பிறைக் குழு இணைப்பாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments:

Post a Comment