பிணையில் விடுதலையான சஹ்ரானின் சகாவுக்கு மீண்டும் தடுப்புக் காவல் - sonakar.com

Post Top Ad

Wednesday 29 January 2020

பிணையில் விடுதலையான சஹ்ரானின் சகாவுக்கு மீண்டும் தடுப்புக் காவல்



சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை மீண்டும் மே 6 ஆம் திகதி வரை  தடுப்பு காவலில் வைக்குமாறு  கல்முனை நீதிமன்று உத்தரவிட்டது.



குறித்த வழக்கு  புதன்கிழமை (29)  அன்று கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்ட போது சந்தேக நபரை மீண்டும் எதிர்வரும் மே 6 ஆம் திகதி வரை தடுப்பு காவலில்  வைக்குமாறு உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் வைத்து கடந்த வருடம்  கைதான குறித்த சந்தேக நபர் அண்மையில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

எனினும், இன்று மேலதிக விசாரணை அவசியப்படுவதாகக் கூறி பொலிசாரினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில்  மீண்டும் சந்தேகநபரை தடுப்புக் காவலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம்   உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் ஹாசீம் தலைமையில் பல்வேறு இடங்களில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்ததோடு அதனை தொடர்ந்து ஏப்ரல் 26 அன்று அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு தாக்குதல் சம்பவத்தின் பின்னர் குறித்த அமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நாட்டின் நாலாபுறமும் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment