மீராவோடை வைத்தியசாலை ஆளணி வெற்றிடம்: சுகாதார பணிப்பாளருடன் சந்திப்பு - sonakar.com

Post Top Ad

Thursday 23 August 2018

மீராவோடை வைத்தியசாலை ஆளணி வெற்றிடம்: சுகாதார பணிப்பாளருடன் சந்திப்பு



கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.

வைத்தியசாலையில் நிலவும் பல்வேறுபட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி குறிப்பாக ஆளணி வெற்றிடங்கள் தொடர்பாகவும் அதற்கான தீர்வினை பெற்றுக் கொள்ளும் வகையிலும் இச்சந்திப்பு இடம்பெற்றது.  

அத்துடன், இவ்வைத்தியசாலையினை தரமுயர்த்துவது தொடர்பாக அபிவிருத்திக் குழுவினரால் வழங்கி வைக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பாகவும் அவர்களினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் குறித்தும் அதன் முன்னேற்றம் குறித்தும் ஆராயப்பட்டது.



தற்போது மிக அவசியத் தேவைப்பாடாகவுள்ள சிற்றூழியர்கள் மற்றும் வைத்தியர்களின் குறைபாடுகள் குறித்தும் இதனால் இவ்வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் பற்றியும்  அவற்றுக்கான தீர்வினை மிக விரைவில் பெற்றுத்தருமாறும் அபிவிருத்திக் குழுவினர் இச்சந்திப்பில் கேட்டுக்கொண்டனர்.

இச்சந்திப்பில் கலந்துகொண்ட முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினாலும் இவ்வைத்தியசாலையின் ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறைகள் தொடர்பாகவும், இவ்வைத்தியசாலையினால் இரு சமூகங்களைச் சார்ந்த மக்களும் பயன்பெறுவதுடன், இதில் நிலவும் ஆளணி பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய வேண்டியதன் தேவைப்பாட்டினையும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு சுட்டிக்காட்டினார்.

வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரால் ஆளணி தொடர்பான ஆறு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜரும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டது.

இவற்றினை கருத்திற்கொண்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அபிவிருத்திக் குழுவினரால் கையளிக்கப்பட்ட ஆவணங்களை மாகாண சுகாதா சேவைகள் பணிப்பாளருக்கு அனுப்பி வைப்பதாகவும், தன்னாலான அதிகாரத்தினை பயன்படுத்தி இவ்வைத்தியசாலையின் குறைபாடுகளை குறைந்தளவுக்கு தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

-எம்.ரீ. ஹைதர் அலி

No comments:

Post a Comment