மூன்று வருடங்களாக மகளைத் தேடும் பெற்றோர் - sonakar.com

Post Top Ad

Tuesday 22 September 2020

மூன்று வருடங்களாக மகளைத் தேடும் பெற்றோர்




வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜெயந்தியாய பகுதியில் வசிக்கும் சரீப்தீன் ஜென்னத்து வீவீ என்பவர் கடந்த மூன்று வருடமாக காணாமல் போன நிலையில் பல்வேறு இடங்களில் தேடியும், பொலிஸில் முறைப்பாடு செய்தும் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என அவரது தாயார் வெள்ளத்தம்பி கசீனாஉம்மா (வயது 55) தெரிவித்தார்.


வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜெயந்தியாய பகுதியில் வசிக்கும் சரீப்தீன் ஜென்னத்து வீவீ (வயது 23) என்பவர் கடந்த 2017.12.29ம் திகதி வீட்டில் இருந்து காணாமல் போனதாக தாயார் தெரிவித்தார். 


குறித்த பெண் 18 வயதில் திருமணம் செய்து கணவருடன் மூன்று மாதம் வாழ்ந்து வந்த நிலையில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு கணவன் வேறு திருமணம் செய்தமையால் பிரிந்து தங்களுடன் வாழ்ந்து வந்தார். அதன் பிற்பாடு கடந்த 2017.12.29ம் திகதி அதிகாலை 4 மணியளவில் எழும்பி பார்க்கும் போது உறங்கிய மகளை காணவில்லை. 


மகள் வீட்டில் இருந்து அவரது உடைகள் மற்றும் ஆபரங்களை எடுக்காமல் உடம்பில் போடப்பட்ட ஆபரணங்களுடனும், கையடக்க தொலைபேசியுடனும் வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார். அதன்பிற்பாடு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் 2017.12.30ம் திகதி முறைப்பாடு செய்ததுடன், இவரது தொலைபேசி இலக்கத்தினையும் வழங்கினோம். ஆனால் இதுவரை எந்த தகவலும் இல்லை. 


வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் சென்று முறைப்பாடு தொடர்பில் விசாரித்தால் தங்களது மகளை தேடிக் கொண்டுதான் இருக்கின்றோம் என்று கூறுகின்றனர். ஆனால் இன்னும் எந்த பதிலும் இல்லை. எனவே காணாமல் போன எனது மகளை கண்டறிந்தால் எனது 0758304796 என்ற தொலைபேசி இலத்திற்கு அறியத்தருமாறு அனைவரையும் வேண்டுகின்றேன் என்று தாயார் வெள்ளத்தம்பி கசீனாஉம்மா (வயது 55) தெரிவித்தார். 


- எஸ்.எம்.எம்.முர்ஷித் 

No comments:

Post a Comment