மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட வேளையில் வாழைச்சேனை பகுதியில் நடாத்தப்பட்ட விசேட சந்தைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மனிதபாவனைக்குவாத பொருட்கள் சிலவற்றை பொதுச் சுகாதார பரிசோதகர்களால் இன்று வியாழக்கிழமை கைப்பற்றப்பட்டது.
வாழைச்சேனை பொது மைதானத்தில் அமைக்கப்பட்ட விசேட சந்தையில் வாழைச்சேனை பிரதேச சபையும், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரும் இணைந்து பொருட்களின் தரங்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதில் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், பிரதேச சபை செயலாளர் திருமதி.பி.லிங்கேஸ்வரன், பிரதேச சபையின் வருமான பரிசோதகர் எம்.எம்.எம்.ஜெஸ்லின், வாழைச்சேனை பொதுச்சுகாதார பரிசோதகர் என்.எம்.எம்.சிஹான், சபை உத்தியோகத்தர்கள், பொலிஸார் ஆகியோர் பரிசோதனை நடவடிக்கையில்; கலந்து கொண்டனர்.
இதன்போது பாவனைக்கு உதவாத கருவாடுகள் மற்றும் மரக்கறிகள் வியாபாரத்தில் இருந்து அகற்றப்பட்டதுடன், வியாபாரத்திற்காக ஒதுக்கப்பட்ட வாழைச்சேனை பொது மைதானத்தில் வியாபாரம் செய்யாது வீதிகளில் வியாபாரம் செய்தவர்களை அகற்றி ஒதுக்கப்பட்ட இடங்களில் வியாபாரம் செய்ய அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட வேளையில் பொது மக்கள் தரமான, சுகாதார முறையிலான பொருட்களை கொள்வனவு செய்யும் வகையில் இவ்வாறான பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றது.
-எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments:
Post a Comment