எதுன்கஹகொட்டுவ மாணவன் கஸீதா போட்டியில் முதலிடம் - sonakar.com

Post Top Ad

Sunday 22 December 2019

எதுன்கஹகொட்டுவ மாணவன் கஸீதா போட்டியில் முதலிடம்



அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட  கஸீதா போட்டியில், எதுன்கஹகொட்டுவ மத்திய கல்லூரியைச் சேர்ந்த  மாணவர் முஸ்னி மும்தாஸ் முதலாம் இடத்தைச் சுவீகரித்துக் கொண்டுள்ளார். இப்போட்டி நிகழ்வு, கண்டி சித்தி லெப்பை கல்லூரியில் (14)  நடைபெற்றது. 

இந்நிகழ்வில், ஏற்கனவே கல்வி வலய, மாவட்ட மற்றும் மாகாண  ரீதியில் நடைபெற்ற போட்டிகளில் முதலாமிடம் பெற்ற ஒன்பது  மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 



அகில இலங்கை ரீதியிலான இறுதிப் போட்டியில்,  குளியாப்பிட்டிய கல்வி வலயத்திற்குட்பட்ட எதுன்கஹகொட்டுவ மத்திய கல்லூரி  மாணவரான எம். முஸ்னி மும்தாஸ் கஸீதாப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று, பல வருடங்களுக்குப் பின் இப்பாடசாலைக்கு தேசிய ரீதியில் பேரும் புகழும் ஈட்டிக்கொடுத்து பெருமை சேர்த்துள்ளார்.

மும்தாஸ் -  ஷர்மிளா தம்பதிகளின் மூத்த புதல்வரான இம்மாணவன்,  2016 ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் 158 புள்ளிகளைப் பெற்று, இக்கல்லூரியில்  சித்தியடைந்த ஒரேயொரு  மாணவன் என்பதுடன்,    தொடர்ந்தும் கல்வி, கலாசார மற்றும்  விளையாட்டு போன்ற அனைத்துத் துறைகளிலும் பாடசாலை, மாவட்ட, மாகாண ரீதியில் வெற்றி பெற்று வரும் திறமைமிக்க மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கஸீதாப் போட்டியில்  வெற்றி பெற்ற மாணவர் முஸ்னி முதலில்  இறைவனுக்கும், இப்போட்டிக்காக தனக்கு பல வழிகளிலும் பக்கபலமாக இருந்து வழிகாட்டிய பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் பாடசாலை அதிபர் உள்ளிட்ட இந்தப் போட்டியில் வெற்றி பெற மாவட்ட, மாகாண மட்டம் தொடக்கம் இன்று வரை அயராது பாடுபட்டு உழைத்த ரிஸ்லா ஆசிரியை,  மாஜித் ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்.

-ஐ. ஏ. காதிர் கான்

No comments:

Post a Comment