ஈஸ்டர் விவகாரத்திலும் அரசியல் இலாபம் தேடும் மஹிந்த: ஹக்கீம் - sonakar.com

Post Top Ad

Tuesday 5 November 2019

ஈஸ்டர் விவகாரத்திலும் அரசியல் இலாபம் தேடும் மஹிந்த: ஹக்கீம்



ஏப்ரல் குண்டுத் தாக்குதல் பற்றி விசாரணை நடாத்திய பாராளுமன்ற தெரிவுக்குழு அங்கத்துவத்தை புறக்கணித்துவிட்டு, இப்போது புதியதொரு குழுவை நியமிக்கின்றனர். எங்களது அறிக்கையில் உண்மைக்குப் புறம்பான ஏதேனும் விடயங்கள் இருக்கின்றதா என்று முதலில் பாருங்கள். எல்லாவற்றிலும் அரசியல் இலாபம் நாடுவது எதிர்க்கட்சிக்கு பழக்கப்பட்டுவிட்டது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.



ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இன்று (05) செவ்வாய்க்கிழமை திகன பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது;

திகன என்று கூறும்போது எமக்கு நினைவுக்கு வருவது அண்மையில் இடம்பெற்ற கலவரம்தான். இந்த துரதிஷ்டமான சம்பவம் இனங்களுக்கிடையிலாள ஒற்றுமைக்கு பாரிய அடியாக விழுந்தது. முழு நாட்டுக்கும் களங்கம் எற்பட்டது. இந்த சம்பவத்தில் சிங்கள இளைஞர்கள் சிலர் கோபப்பட்டு குழப்பமடைந்தனர். இதற்காக சமூக ஊடகங்களையும் அவர்கள் பயன்படுத்தினர். அரசாங்கம் உடனடியாக செயற்பட்டு சமூக ஊடகங்களை தடைசெய்து, நிலைமைகளை கட்டுப்படுத்தியது.

இங்குள்ள பிரதேச சபை உறுப்பினர் உட்பட பலர் சிறைச்சாலைக்கு செல்ல நேரிட்டது. நாம் யார்மீதும் குற்றம் சுமத்தப்போவதில்லை. அது நீதிமன்றத்தினால் செய்யப்பட வேண்டியது. ஆனால், நீதியை சீர்குலைப்பதை அங்கீகரிக்காத அரசாங்கம் என்ற வகையில், குற்றவாளிகளை அடையாளம்கண்டு அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறோம்.

திகன சம்பவத்தின் பின்னர், நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஏற்படவிருந்த குழப்பங்களை தடுத்து நிறுத்துவதற்காக சுமார் 152 பேரை கைதுசெய்ய நேரிட்டது. ஆனால், அரசாங்கத்தின் மூலம் யாரும் எந்த விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை. நாம் நீதித் திணைக்களத்தின் மூலம் அவற்றை முறையாகச் செய்தோம்.

இவ்வாறான சம்பவங்கள் அவ்வப்போது ஏற்படுவதற்கு வழிவகுக்கும் காரணிகளைப் பார்க்கும் போது பொதுமக்களை கோபப்படுத்தும், அப்பாவி பொதுமக்களின் சொத்துக்களுக்கு அநியாயம் செய்யும், மக்களின் வாழ்க்கையை அழிக்கும் அநியாயக்கார்களுக்கு தண்டனை வழங்கும் நடவடிக்கைகள் முன்னைய அரசாங்கத்தில் இருந்ததா என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

ஏப்ரல் குண்டுத் தாக்குதல் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பார்த்ததும் மற்றும் கேட்டதுமான சாட்சியங்களை பதிவுசெய்து பரிந்துரைகளை சரியாக பெற்றுக் கொடுத்தோம். புலனாய்வு பிரிவினால் வழங்கப்பட்ட தகவல்கள் தேவையான நேரத்தில் முன்வைக்கப்படவில்லை எனில், அதன் கைசேதங்களுக்கு யார் பொறுப்புக்கூறவேண்டும் என்பதை தெளிவாக பரிந்துரை செய்துள்ளோம்.

அரச தலைவர்களும் தங்கள் கடமைகளிலிருந்து ஓரளவுக்கு தவறியிருந்தாலும் அதுபற்றியும் தெரிவுக்குழு அறிக்கையில் குறிப்பிட்டோம். பொறுப்புடன் நடந்துகொள்ளும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல் நாட்டின் பாதுகாப்புக்காக அனைவரும் ஒன்றிணைவது வழக்கம். ஆனால், எதிர்க்கட்சிலுள்ள மொட்டு அணியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தெரிவுக்குழு அங்கத்துவத்தை பகிஷ்கரிப்புச் செய்தன.

நாட்டின் பாதுகாப்புக்கு பாரிய நெருக்கடி ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில், கட்சிபேதம் பாராமல் அனைவரும் ஒன்றிணைவது தேசிய மட்டத்தில் சாதாரணமாக நடக்கின்ற நிகழ்வாகும். ஆனால், எமது நாட்டில் அவ்வாறு நடைபெறவில்லை. எல்லாவற்றிலும் அரசியல் செய்கின்றனர். எதிரிகள் மீது எப்படி குற்றம் சுமத்தாலாம் என்று மாத்திரமே பார்க்கின்றனர். அரசாங்கத்தின் மீது எல்லாவற்றையும் சுமத்திவிட்டு தப்பிக்கவே பார்க்கின்றனர்.

நாம் உண்மையை கண்டறிவதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்தபோது சுதந்திரமாக எமக்கு வேண்டிய எந்த கேள்வியையும் கேட்கமுடியும். அதற்குத்தான் தெரிவுக்குழுக்கள் நியமிக்கப்படுகின்றன. பாராளுமன்றத்தில் எல்லாக் கட்சிகளுக்கும் தெரிவுக்குழுவில் பிரதிநிதித்துவம் வழங்கப்படுகிறது. ஆனால், எதிர்க்கட்சியினர் அதனை நிராகரித்து குறுகிய அரசியல் இலாபம் பெற்றுக்கொண்டனர்.

இப்போது புதிதாக இன்னொரு குழுவை நியமிக்கின்றனர். எங்களது பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கையை என்னவென்று முதலில் பாருங்கள். நாம் முன்வைத்த சாட்சியங்களுக்கு புறம்பாக, ஏதேனும் சொல்லப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆளும் கட்சி என்றாலும் சரி, எதிர்க்கட்சி என்றாலும் சரி, முதலில் நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும். எல்லாவற்றிலும் கீழ்த்தரமான அரசியல் இலாபத்தை நாடுவது எதிர்க்கட்சிக்கு பழக்கப்பட்டுவிட்டது.

தேர்தலுக்கு முன்னர் பல்வேறு வேலைநிறுத்த போராட்டங்களைப் பார்த்தோம். ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்யும்போது, சம்பள உயர்வு விவகாரத்தில் 2005 இலிருந்து 2015 வரை நடைபெற்றது என்ன. 2010இல் அரச ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தில் 2,500 ரூபாவை அதிகரிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கூறியது. ஆனால், அந்த 5 வருடங்களில் ஒரு சதமேனும் அதிகரிக்கப்படவில்லை. இப்போது நாங்கள் அரச ஊழியர்களை கவனிக்கவில்லை என்று விரல் நீட்டுகின்றனர்.

எங்களது அரசாங்கத்தில் அரச ஊழியர்கள், தாதிமார்கள், அதிபர்கள், முகாமைத்துவ சேவையில் இருப்பவர்கள் என எல்லா துறைகளுக்கும் 107% சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது. அடிப்படை சம்பளத்தில் இவ்வாறான பாரிய அதிகரிப்பு செய்த அரசாங்கம் எங்களைத் தவிர வேறு எதுவுமில்லை. பல்கலைக்கழக பேராசிரியர்களின் சம்பளம் 1 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவாகும். அதனை நாங்கள் இப்போது 3 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளோம்.

தென்கிழக்கை பொறுத்தமட்டில் பெரும்பாலான சிங்கள மக்கள் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனர். அது எதிரணிக்கு பாரிய சவாலாக அமைந்துள்ளது. அதேபோல் சஜித் பிரேமதாசவுக்கு நாடெங்கிலும் நாளுக்கு நாள் ஆதரவாளர்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றனர். யுகமாற்றம் கருதி நாமும் எங்களது வாக்குகளை சஜித் பிரேமதாசவுக்கு வழங்குவோம் என்றார்.

-SLMC

No comments:

Post a Comment