2020 ஜனாதிபதி தேர்தல்: 1.59 கோடிப் பேர் வாக்களிக்கத் தகுதி - sonakar.com

Post Top Ad

Friday 20 September 2019

2020 ஜனாதிபதி தேர்தல்: 1.59 கோடிப் பேர் வாக்களிக்கத் தகுதி

blf1sdX

எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி  நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவென,   இலங்கை சோசலிஷக் கட்சியின் வேட்பாளர் ஒருவரும்,  சுயேச்சைக் குழுவின் இரண்டு  வேட்பாளர்களுமாக மூன்று வேட்பாளர்கள் இதுவரையில்  தமது  கட்டுப்பணங்களைச்  செலுத்தியுள்ள நிலையில்,  இதுவரை சுமார் 20 வேட்பாளர்கள் போட்டியிட தங்களது விருப்பங்களைத்  தெரிவித்துள்ளார்கள் என,  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.


ஏற்கனவே, வேட்பாளர்களைத் தெரிவு செய்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவோ, மக்கள் விடுதலை முன்னணியோ இன்னமும் கட்டுப் பணங்களைச்  செலுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சுயேச்சைக் குழு  வேட்பாளர்கள் 75 ஆயிரம் ரூபாவும் அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் 50 ஆயிரம் ரூபாவும் கட்டுப் பணமாகச் செலுத்த வேண்டும்.

கட்டுப்பணங்களைச்  செலுத்துவதற்கு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி நண்பகல் பன்னிரண்டு மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர,  ஒக்டோபர் 7 ஆம் திகதி காலை 9 மணிமுதல் முற்பகல் 11 மணி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என,  தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் 70 உள்ள போதிலும், அநேகமான கட்சிகள் செயற்பாட்டு அரசியலில் இல்லை என்றும்,  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, இம்முறை ஜனாதிபதித் தேர்தல் 2018 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலுக்கேற்பவே நடத்தப்படும்.

இதன்படி, ஒரு கோடியே 59 இலட்சத்து 92 ஆயிரத்து 96 பேர் (15,992,096) இம்முறை  வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக,  தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.​

அத்துடன், 13 ஆயிரத்திற்குக் குறையாத வாக்களிப்பு நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதுபற்றி மாவட்ட மட்டத்திலான  ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தற்சமயம், வாக்காளர்கள் அட்டைகளை அச்சிடுவதற்கான பணிகளை ஆணைக்குழு  முன்னெடுத்துள்ளதாகவும், 

வேட்பு மனுக்கள் தாக்கல் செய்து நிறைவு செய்யப்பட்டதும் குறித்த வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்படும் என்றும், தேர்தல்கள்  ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. 

-ஐ. ஏ. காதிர் கான்

No comments:

Post a Comment