மீனவர்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தல் - sonakar.com

Post Top Ad

Friday 2 August 2019

மீனவர்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தல்


வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் உருவாகியிருக்கும் அமுக்கத்தின் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கியுள்ள மீனவ சமூகத்திற்கு அவற்றை கட்டுப்படுத்தும் முகமாக மீனவர்களுக்கு ஏற்படக்கூடிய விளைவுகளை குறைப்பதற்காக அவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக அமுல்படுத்துமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி  தெரிவித்தார். 


இராஜாங்க அமைச்சர் சகல மீனவர்களிடமும் கேட்டுக் கொண்ட விடயம் இந்த காலநிலை சம்பந்தமாக கடற்றொழில் திணைக்களம் வழங்கும் ஆலோசனையின் படி செயற்படுமாறும் உயிராபத்துக்கள் ஏற்படாத வண்ணம் மிகவும் கரிசனையாக இருக்க வேண்டும் என்பதுமாகும். 

எதிர்வரும் நாட்களில் உச்ச அவதானத்துடன் இருக்குமாறு சகல மீனவர்களுக்கும் கடற்றொழில் திணைக்களத்தின் தேடல் செயற்பாடுகள் பிரிவின் மூலம் அபாய சமிக்ஞை வழங்கப்பட்டுள்ளது. 

குறித்த அபாய சமிக்ஞை வளிமண்டளவியல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட காலநிலை முன்னறிக்கையின் படி கடற்றொழில் திணைக்களத்தின் தேடல் செயற்பாடுகள் பிரிவினால் வழங்கப்பட்டதாகும். 

அத்துடன் சர்வதேச கடற்பரப்பில், இருக்கும் கப்பல்களுக்கும் அபாய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக முல்லைதீவு வரை கடல் பிரதேசங்களில் மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரை கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு கி.மீ. 55 - 65 வரை அதிகரிக்கலாம். கடல் பிரதேசம் அவ்வப்போது கரடு முரடாகலாம். இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யலாம். எனவே மீனவர்களும், கடற்படையினரும் அவதானமாக இருக்கவும் என்று காலநிலை முன்னறிவிப்பு கூறுகிறது.

மேலும், எதிர்வரும் நாட்களில் வங்காள விரிகுடாவின் வடக்கு மற்றும் மத்திய கடல் பகுதியில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 70 - 80 கி.மீ. வேகத்தில் வீசும் என்று  காலநிலை முன்னறிவிப்பில் இன்னும் கூறப்பட்டுள்ளது.

-ரிஹ்மி ஹக்கீம்

No comments:

Post a Comment