கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் வருவதில் இழுபறி - sonakar.com

Post Top Ad

Wednesday 17 July 2019

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் வருவதில் இழுபறி


சமீபகாலமாக இலங்கையில் பேசுபொருளாக மாறியிருக்கும் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு என நியமிக்கப்பட்டுள்ள கணக்காளர் இன்று (புதன்கிழமை) தனது கடமைகளை பொறுப்பேற்பார் என கடந்த தினங்களில் தெரிவிக்கப்பட்டிருந்த போதும் இன்றும் அவர் தனது பதவியை ஏற்கவில்லை.


கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த கோரிக்கை விடுத்து சமயத்தலைவர்கள், மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் பல சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளால் ஒருவார காலம் உண்ணாவிரத போராட்டமும் நடத்தப்பட்டது.

 இதன் முதற்கட்டமாக சகல அதிகாரமும் கொண்ட நிதிப்பிரிவு உருவாக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மாத்திரமே நாங்கள் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க ஆதரவளிப்போம் எனும் பேச்சுவார்த்தைக்கு இணங்க கணக்காளர் நியமனத்திற்கு திறைசேரி செயலாளர் அனுமதியளித்தார்.என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் பலரும் கூறிவந்த இந்நிலையில்  கணக்காளர் நியமனத்திற்கான அனைத்து உத்தியோகபூர்வ பணிகளும் நிறைவடைந்ததாக ஆதாரங்களும் வெளியிடப்பட்டன.

உகண பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் தமிழ் உத்தியோகத்தர் ஒருவரே கல்முனைக்கு கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கான இடமாற்ற கடிதம் வழங்கப்பட்டபோதும் பதில் கணக்காளர் இதுவரை நியமிக்கப்படாததால் அவர் தனது புதிய பொறுப்பை இதுவரை ஏற்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று கணக்காளர் கல்முனைக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டு அவரை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நேற்றைய  பத்திரிக்கை, ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் உகண பிரதேச செயலகத்திற்கு பதில் கணக்காளர் நியமிக்கப்படாததால் இன்றும் கல்முனை பதவியேற்பு நடக்கவில்லை. விரைவில் அவர் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தில் பதவியேற்பார் என நம்பப்படுகிறது. 

-நூருல் ஹுதா உமர் 

No comments:

Post a Comment