குழப்பமான வேட்பாளர் தெரிவும் கூத்தாகிய பதவி துறப்புக்களும் - sonakar.com

Post Top Ad

Sunday 23 June 2019

குழப்பமான வேட்பாளர் தெரிவும் கூத்தாகிய பதவி துறப்புக்களும்


இன்று நமது நாட்டில் நிகழ்கின்ற எல்லா விடயங்களிலும் அரசியல்வாதிகள் ஒரு புறமாகவும் ஊடகங்கள் மறுபுறமாகவும் நின்று அப்பாவி மக்களை பந்தாடிக் கொண்டிருக்கின்றது என்பதைத்தான் அவதானிக்க முடிகின்றது. அரசியல்வாதிகள் சொல்கின்ற கதைகளையும் ஊடகங்கள் சொல்கின்ற செய்திகளையும் நம்பி மக்கள் தினந்தோரும் ஏமாறிக் கொண்டிருக்கின்றார்கள். இது தாகம் பிடித்த மந்தைகள் கூட்டம் பாலை நிலத்தில் கானல் நீரை நம்பிப் பயணிக்கின்ற துயரமாகத்தான் தெரிகின்றது.


ஆனால் நமது வார இதழில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்ப்பில் சில கருத்துக்களை முன்பு அடித்துச் சொல்லி இருக்கின்றோம். இப்போதும் அததைத்தான் இங்கு மீண்டும் பதிகின்றோம். வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் தற்போதய ஜனாதிபதி மைத்திரியும் வேட்பாளர் இல்லை பிரதமராக இன்று இருக்கின்ற ரணிலும் வேட்பாளர் இல்லை என்பதுதான் எமது நிலை.

இப்போது வருகின்ற தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்ப்பில் நாட்டில் புதிதாக என்ன கதைகள் நிலவுகின்றன, அரசியல்வாதிகள் அது பற்றி என்ன சொல்கின்றார்கள். ஊடகங்கள் என்ன கதைகளைப் புனைந்து கொண்டிருக்கின்றன என்று ஒரு முறை பார்ப்போம்.

நமது ஜனாதிபதி மைத்திரி வருகின்ற பொதுத் தேர்தலில் களத்தில் இறங்க இருப்பதாக அறிய முடிகின்றது. அவர் இது பற்றி சொன்ன கருத்துடன் எமக்கு உடன்பாடு இருக்கின்றது. ஏனெனில் அவருக்கு ஜனாதிபதி வாய்ப்பு அதாவது வேட்பாளர் வாய்ப்பு இல்லை என்பது அவர் உணர்ந்திருக்கின்றார் என்று எடுத்துக் கொள்ள முடியும்.

இப்படி ஒரு பொதுத் தேர்தலில் நின்று அவர் பிரதமராக ஒரு சிறிய வாய்ப்பு இருக்கின்றது என்று நாமும் நம்புகின்றோம். ஆனால் அதற்கு அவர்கள் மிகக் கடினமான முயற்சிசகளையும் தியாகங்களையும் செய்ய வேண்டி இருக்கின்றது. ஆனால் இன்று மைத்திரியுடன் இருக்கின்ற சுதந்திரக் கட்சியினர் தொடர்ந்தும் அவர் பின்னால் நிற்பார்களா அல்லது சந்தர்ப்பம் வாய்க்கின்ற போது கூண்டோடு ராஜபக்ஸ முகமுக்குப் போய் சரனாகதி அடைந்து விடுவார்களோ என்று எமக்குத் தெரியாது. அதற்கும் நிறையவே வாய்ப்புகள் இருக்கின்றன.

இப்போது சுதந்திரக் கட்சி செயலாளர் தயாசிரி என்ன சொல்லிக் கொண்டிருக்கின்றார் என்று பார்ப்போம். வருகின்ற தேர்தலில் மைத்திரிதான் வேட்பாளர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஸதான் என்பது அவர் கணக்கு. இது எந்த நியதிப்படி என்று எங்களுக்குப் புரியவில்லை. ஏன் நாம் அப்படிப் பேசுகின்றோம் என்றால். பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக ஜனாதிபதி மைத்திரி கூற தயாசிரி அவரை ஜனாதிபதி வேட்பாளர் என்று சந்தைக்கு கொண்டுவருகின்றார். எனவே அந்தக் கட்சித் தலைவர் மைத்திரி ஒரு நிலைப்பாட்டிலும் செயலாளர் மற்றுமொரு நிலைப்பாட்டிலும் இருக்கின்றார். அங்கே முரன்பாடு.

சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தை வெருமனே காலத்தைக் கடத்துகின்ற ஒரு செயல். நாங்கள் எங்களது வேலையைப் பார்ப்போம் அவர்கள் அவர்களுடைய வேலையைப் பார்க்கட்டும் என்று அதன் முக்கியஸ்தர்கள் பகிரங்கமாக பேசி வருகின்றார்கள். இது எதனைக் காட்டுக்கின்றது? எனவே தயாசிரியின் எதிர்பார்ப்புக்களும் அரசியல் கதைகளையும் நாம் எப்படி எடைபோட முடியும். 

எம்மைப் பொறுத்தவரை இது அபூ நவாஸ் அல்லது தென்னாலிராமன் அரசியலாகத்தான்   இருக்க வேண்டும். எனவே அரசியல்வாதிகள் கதைகளையும் ஊடகங்கள் சொல்கின்ற எல்லாச் செய்திகளையும் மக்கள் அப்படியே தேவ வாக்காக எடுத்துக் கொண்டு தங்களைத் தாங்களே முட்டால்களாக்கிக் கொள்ளக்கூடாது என்பது எங்கள் ஆலோசனை.

கடந்த உள்ளாட்சி தேர்தல் கணிப்புக்களை வைத்து எதிர்காலத்தில் நடக்க இருக்கின்ற தேர்தல் பற்றிய அரசியல்வாதிகள் சொல்கின்ற கருத்துக்களும் கதைகளும் அறிவுபூர்வமானதல்ல என்பது எமது நிலைப்பாடு. காட்டு மிராண்டிகளின் ஈஸ்டர் தாக்குதலுடன் நாட்டின் அரசியல் மற்றும் தேர்தல் வரை படங்கள் முற்றிலும் மாறிப்போய் விட்டது. 

பகிரங்கமாகப் பேசுவதாக இருந்தால்  பேரின வாக்குகள் மலைகள் சரிவதைப்போல் ராஜபக்ஸ பக்கம் சரிந்து கொண்டிருக்கின்றது. எனவே வருகின்ற எந்தத் தேர்தலானாலும் அவர்கள் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அரசாங்கம் அமைக்கின்ற முயற்ச்சிகளையே செய்வார்கள். இந்தியத் தேர்தல், மோடி வெற்றியைக் கூட இவர்கள் வருகின்ற தேர்தலில் நல்ல பரப்புரைகளாக  எடுத்துக் கொள்வார்கள். 

நாம் வழக்கமாக சொல்கின்ற படி உள்ளாட்சி மன்றத் தேர்தலில் மைத்திரி தரப்பு பெற்றுக் கொண்ட 15 இலட்சம் வாக்குகளை எதிர்வரும் காலங்களில் அவர்களினால் பெற்றுக் கொள்ள முடியாமல் போகும். எமது ஆய்வுகள் இப்படித்தான் சொல்கின்றன.

முன்பு மைத்திரிக்கு பிரதமராக ஒரு சிறிய வாய்ப்பு இருக்கின்றது என்று சொல்லி இருந்தோம். அது எப்படி என்றால் அவர்கள் கூறுகின்ற இந்த 15 இலட்சம் வாக்குகளினால் 20 அல்லது 22 பாராளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுத்து அதன் மூலம் பேரம் பேசி பிரதமர் பதவியை மைத்திரி அடைவது. அடுத்து வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் சஜிதை ஐ.தே.க. களமிறக்கினால் அவரை ஆதரிப்பது பற்றி மைத்திரி யோசிக்க முடியும் என்று பகிரங்கமாக பேசி இருந்ததும் இந்த நியதிகளின் படியாகத்தான் இருக்க வேண்டும் என்பதுதான் இது விடயத்தில் எமது அவதானமாக இருக்கின்றது.

இது சுதந்திரக் கட்சி உள்ளாட்சித் தேர்தலில் தன்வசம் வைத்திருக்கின்ற செல்வாக்கை அப்படியே பாதுகாத்து வைத்திருந்தால் மட்டுமே சாத்தியம். ஆனால் நாம் அப்படி எதிர்பார்க்க வில்லை. அந்த செல்வாக்கு கணிசமாக சரிந்திருக்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தொடர்ப்பில் யாரும் வாய்திறக்கக் கூடாது என்று அதன் தலைவரும் பிரதமருமான ரணில் கண்டிப்பான கட்டளை பிறப்பித்திருந்தாலும் அதனை யாரும் வழக்கம் போல் கண்டு கொள்ளவில்லை. அமைச்சர் லக்மன் கிரியெல்ல ஐக்கிய தேசியக் கட்சி ஒருவரே வேட்பாராக இந்த முறை களமிறக்கப்படுவார் என்று கூறுகின்றார். ரணில் விசுவாசிகள் தொடர்ந்தும் ரணில்தான் எமது வேட்பாளர் என்று பேசுகின்றார்கள். 

சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க விட்டால் நாங்கள் இதன் பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வோம் என்று கிராமட்ட அரசியல்வாதிகள் எச்சரிக்கின்றார்கள். சில அமைச்சர்கள் சஜித்தால் மட்டுமே இந்தத் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று பகிரங்கமாக பொது இடங்களில் கருத்துக்களை முன்வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். 

கரு சந்தர்ப்பம் தந்தால் நானும் தயார் என்று சொல்கின்றார். ராஜிதவும் அப்படிச் சொல்லி இருக்கின்றார். காமினி திசாநாயக்காவின் மகனும் அமைச்சருமான நவின் திசாநாயக்க தனது மாமனார் கருவை எப்படியாவது ஜனாதிபதி வேட்பாளராகக் கொண்டுவர ஐக்கிய தேசியக் கட்சிக்குள் வேலை பார்த்து வருகின்றார்.

இன்னும் சில ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்கள் பொது வேட்பாளர் ஒருவரைத் தேடுகின்ற முயற்ச்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகினறார்கள் அதனை அவர்கள் பகிரங்கமாகவே பேசியும் வருகின்றார்கள்.

மஹிந்த தரப்பில் கோதா அல்ல சாமல்தன் வேட்பாளர் என்று கதைகள் அடிபடுகின்றன. அந்த அமைப்பை ஆதரிக்கும் கடும் போக்கு பௌத்தர்கள். நிச்சயமாக கோதாதான் எமது வேட்பாளர் என்று உறுதிபடக் கூறுகின்றார்கள். மஹிந்த ராஜபக்ஸதான் அவர் யார் என்ற முடிவை எடுப்பார். அவரே இது விடயத்தில் நான் சந்தர்ப்பம் வரும்போது அறிவிப்பேன் என்று அறிவித்திருக்கின்றார்.

முன்பு தாமும் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கப்போவதாக சொல்லிய ஜேவிபி இப்போது தமது கட்சிக்காரர் ஒருவரையே களமிறக்கப்போவதாக அறிவித்திருக்கின்றது.

சமகால நிலவரங்களைப் பார்க்கின்ற போது 2020 ஜனாதிபதி தேர்தல் தனிக்குதிர ஓட்டமாக அமைந்த விடுமோ என்று எண்ணத்தோன்றுகின்றது.

இதற்கிடையில் ரணில் விக்கிரமசிங்ஹவின் அரசியல் வாழ்வு இன்னும் சில மாதங்களில் முற்றுப் பொறுகின்றது. அவர் ஓய்வு பெற்ற பொலிஸ்காரன் நிலைக்கு விரைவில் ஆளாகப்போகின்றார் என்று முன்னால் கல்வி அமைச்சரும் தற்போது மஹிந்த அணியின் முக்கிய செயல்பாட்டுகாரருமான பந்துல குனவர்தன சில தினங்களுக்கு முன்னர் பேசி இருக்கின்றார்.

பதவி துறந்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தமது செயல்பாட்டு விளக்கிச் சொல்வதற்கான ஒரு விசிட்டை மேற்கொண்டிருந்தார்கள். அப்படிப்போன இடங்களில் எல்லாம் இவர்களுக்கு அச்சுறுத்தல் மற்றும் எச்சரிக்கின்ற தோணியிலேயே வரவேற்புக் கிடைத்தது. இது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்ததுடன் தெற்கை மையமாக வைத்து அரசியல் செய்பவர்கள் தமது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்வதற்கு இது முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் இந்த விசிட்டும் இடைநடுவில் நின்று போய் விட்டது என்றுதான் எமக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன. 

இப்போது நாம் முஸ்லிம் அரசியல்வாதிகள் மீண்டும் பதவி ஏற்றிருப்பது பற்றிப் பார்ப்போம். அதற்கு முன்னர் நமது வார இதழில் 02. 06. 2019 இது பற்றிச் சொல்லி இருந்த கருத்தை அப்படியே மீண்டும் ஒரு முறை தூக்கி இங்கு போட்டிருக்கின்றோம். அதனை நமது வாசகர்கள் ஒரு முறை பார்த்துக் கொள்ளுங்கள். 

'இணையதளங்கள் பேஸ்புக் பக்கங்கள் எல்லாம் முஸ்லிம் அரசியல்வாதிகளை தமது பக்கங்களில் பாராட்டு மழையில் நீராட்டிக் கொண்டிருக்கின்றன. இது எத்தனை நாளைக்கு நிலைக்கப்போகின்றது என்பது அந்த இறைவனுக்குத்தான் தெரியும்.

நாம் ஏன் இதனை ஒரு சந்தேகக் கண்ணோட்டத்தில் பேசுகின்றோம்-பார்க்கின்றோம் என்றால். இன்று நாட்டில் இருக்கின்ற கடும்போக்கு இனவாதிகளுடன் எந்த வகையிலும் தாக்கப்பிடிக்கின்ற பலம் முஸ்லிம் அரசில்வாதிகளுக்குக் கிடையாது. அதிகாரம் படைத்தவர்களும் தம்மைக் கைவிட்டு விட்டனர் என்பது அவர்களுக்குத் தெரியும்.'

இப்போது பதவியேற்றதற்கான காரணங்களை அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யப்போகின்றார்களாம். ஹஜ் பயணங்களைக் கவணிகக் வேண்டி இருக்கின்றதாம் என்றெல்லாம் கதை.  இந்த வார்த்தைகளில் இருந்து முஸ்லிம் அரசியல் என்றால் என்ன என்பதனை முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் புரிந்து கொள்ள முடியும். 

முஸ்லிம் அரசியல் என்பது காலம் காலமாக அறிவுபூர்வமகவோ சிந்தனை ரீதியிலோ வளர்க்கப்பட்தல்ல அது முற்றிலும் உணர்வுபூர்வமாக போய்க் கொண்டிருக்கின்ற ஒரு செயல்பாடு. அவர்களது வாக்களிப்பு முறைகளும் அப்படித்தான் இருந்து வருகின்றது. அதன் விளைவுகள்தான் இன்று அறுவடையாகிக் கொண்டிருக்கின்றது. 

முஸ்லிம் அரசியல்வாதிகள் எப்போதும் சமூகத்தை சிந்தனை ரீதியில் நெறிப்படுத்தவோ வளர்க்வோ இல்லை. அப்படி வளத்தால் தமது அரசியல் வியாபாரம் பட்டுப்போகும் என்பதனை அவர்கள் எந்தக் கட்சிக்காரர்களாக இருந்தாலும் நன்கு தெரிந்து வைத்திருந்தார்கள் அதனால்தான் அவர்கள் அப்படி நடந்து கொண்டார்கள்.

எதிர்காலத்தில் இந்த நிலை மாறி ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் தற்போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது என்பதனை அந்த சமூகத்தின் புத்திஜீவிகள் புரிந்து கொள்ள வேண்டும். இன்று முஸ்லிம் சமூகம் அனுபவித்து வந்த அனைத்து உரிமைகளும் சலுகைகளும் வாயிலுள்ள அனைத்துப் பற்களையும் பிடுங்கி எடுக்கின்ற நிலைக்கு அவர்கள் தங்களை ஆளாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

கபீரும், ஹலீமும், அமைச்சுப் பதவிகளை ஏற்றிருக்கின்றார்கள் இதற்குப் பிரதான காரணம் அவர்கள் தெற்கில் அரசியல் செய்கின்றவர்கள். சிங்கள மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டியவர்கள். அதனால் ஹக்கீம், ரிஷாட் எடுக்கின்ற அரசியல் தீர்மானங்களுடன் அவர்கள் பயணிக்க முடியாதவர்கள்.

சிலர் இவர்கள் சிங்கள வாக்குகளை நம்பி அரசியல் செய்கின்றவர்கள்  என்று இதற்கு ஒரு நியாயம் சொல்கின்றார்கள். இந்த கருத்துடன் கட்டுரையாளனுக்கு எந்த உடன்பாடும் கிடையாது அது வெறும் மாயை என்பது எமது நிலைப்பாடு. கேகாலை மாவட்டத்தில் கபீர் வெற்றியில் 10 முதல் 15 சதவீதம் மட்டுமே சிங்கள வாக்குகள். 

கண்டி மாவட்டத்தில் ஹலீமுக்கு வெறும்  8 முதல் 5 சதவீத சிங்கள வாக்குகளே கிடைத்து வருகின்றது. எனவே இவர்களின் வெற்றிக்கு சிங்கள வாக்குகள் ஒரு போதும் தீர்மானிக்கின்ற சக்கியாக இல்லை. கபீர் விடயத்தில் ஓரளவு இதில் உண்மை இருக்கின்றது என வாதிட முடியும். ஹலீம் விடயத்தில் அப்படி இல்லை. ஹலீமைப் பொறுத்தவரை அவருக்கு ஒரு முஸ்லிம் தலைவர் என்ற அங்கிகாரம் கிடையாது. முஸ்லிம் அமைச்சு அவருக்குக் கிடைத்ததால் அப்படி ஒருவர் இருப்பது மக்களுக்குத் தெரிய வந்திருக்கின்றது.  

எனவே இவர்கள் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டதற்காக முஸ்லிகளுடைய பிரச்சினை ஒருபோதும் தீரப்போவதில்லை. அவர்கள் சமூக ரீதிதியில் எதனையும் சாதிக்கவும் மாட்டார்கள். சமூகம் பற்றிப் பேசப்போய் அங்கு நெருக்கடிகளுக்கே ஆளாவார்கள் என்று எதிர்பார்க்க முடியும். 

ஹக்கீமும் ரிஷாடும் நேரடியாக இன ரீதியாக அரசியல் செய்வதால் அமைச்சுக்களை பொறுப்பேற்பதில் தனிப்படட் அரசியல் நெருக்கடிகள் இருக்கின்றன. எப்படியும் தற்போது ரிஷாடுக்கு அந்த வாய்ப்பு கிடையாது என்பதால் ஹக்கீம் அமைச்சைப் பொறுப்பேற்று தனியாக சமூகப் பொறுப்பை இந்த நேரத்தில் சுமக்க அஞ்சுவதால்தான் அதனைத் தவிர்க்கின்றார் என்று நாம் கருதுகின்றோம்.

முஸ்லிம்கள் விடயத்தில் அண்மைக் காலங்களாக பல கட்டுக்கதைகள் சொல்லப்பட்டு வந்தன. ஆனால் இந்தக் கதைகள் ஏதுவுமே தனது இலக்கை எட்டவில்லை அல்லது வெற்றி பெறவில்லை. ஆனால் இப்போது அஸ்கிரிய பீடாதிபதியே நேரடியாக முஸ்லிம் கடைகளில் உண்ண வேண்டாம் பொருட்களை வாங்க வேண்டாம் என்று சொல்லி விட்டார். முஸ்லிம்களைக் கல்லடித்துக் கொல்வது பற்றியும் அவர் பேசி இருக்கின்றார். 

ஜனாதிபதியும் ஒரு இடத்தில் பௌத்த பீடதிபதிகளின் பேச்சைக்கேட்டு நடந்தால் நாட்டுக்கு நல்லது என்று சொல்லி இருக்கின்றார். இவ்வளவு காலமும் முஸ்லிம்களுக்கு இருந்த ஆபத்தை விட இப்போதுதான் மிகப் பெரிய ஆபத்து வரப்போகின்றது என்று இதிலிருந்து முஸ்லிம் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம் சமூகம் தன்னை மறுசீர் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று ஹக்கீம் போன்றவர்கள் பேசினாலும் அதற்கான எந்த ஒரு உருப்படியான முயற்சிகளையும் அவர்கள் இதுவரை செய்யவில்லை.  எனவே இந்தத் தாமதமும் அடுத்து வரும் இழப்புகளுக்கு ஒரு காரணமாக அமைந்த விடக்கூடும். முஸ்லிம் சமூகமும் புத்திஜீவிகளும் இது விடயத்தில் திறந்து மனதுடன் அரங்கிற்கு வர வேண்டி இருக்கின்றது.

-நஜீப் பின் கபூர்

No comments:

Post a Comment