இலங்கைத் தாக்குதல்கள்: அடிப்படைவாத-ஜனநாயகவாதப் போர்! - sonakar.com

Post Top Ad

Friday 10 May 2019

இலங்கைத் தாக்குதல்கள்: அடிப்படைவாத-ஜனநாயகவாதப் போர்!



இன்று இலங்கையில் நடப்பது முஸ்லிம் அடிப்படை வாதிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையிலான யுத்தமல்ல. முஸ்லிம் ஜனநாயக சக்திகளுக்கும் முஸ்லிம் அடிப்படை வாதிகளுக்கும் இடையிலான போராகும். இதில் மனுக்குலம் முஸ்லிம் ஜனநாயக சக்திகளுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுக்க வேண்டும். லிபியாவில் இருந்து ஈராக் வரையிலான முஸ்லிம் நாடுகளின் அழிவுக்கு அடிப்படை அங்கெல்லாம் முஸ்லிம் அடிபடை வாதிகளிடம் முஸ்லிம் ஜனநாயக சக்திகள் தோற்றுப்போனதுதான். அதன்பிறகுதான் அமரிக்காவாலும் இஸ்ரவேலாலும் அந்த நாடுகளை சீர்குலைத்து அழிக்க முடிந்தது.



இன்று தென்னாசியாவின் பெரும் கலாச்சார நெருக்கடியே ஒருசிலர் தமக்கு யார் பெளத்தன்? யார் இந்து? யார் முஸ்லிம்? என முடிவு செய்யும் அதிகாரம் இருக்கு என கருதுவதுதான். இந்த ஒருசிலர்தான் தென்னாசியாவின் மத அடிப்படை வாதச் சாக்கடைகளின் ஊற்றுக் கண்களாக இருக்கிறார்கள். இவர்கள்தான் தென்னாசிய ஜனநாயக சக்திகளின் முதல் எதிரிகளாக இருக்கிறார்கள்.

இந்ததருணத்தில் ஈழ தமிழரதும் மலையகத் தமிழரதும்  தமிழக தமிழரதும் உலகத் தமிழரதும் புலம்பெயர்ந்த தமிழரதும் சிங்கள ஜனநாயக சக்திகளதும் அரவணைப்பும்  ஆதரவும்  இலங்கை முஸ்லிம்களுக்குத் தேவை, நாம் எல்லோரும் முஸ்லிம் ஜனநாயக சக்திகளை உறுதியாக ஆதரிக்க வேண்டிய தருணம். . ஏனெனில் அவர்கள் மட்டும்தான் இலங்கைதீவின்  இன்றைய பிரச்சினைக்கான பதிலாகும்.
.
ஈழவிடுதலைப்போர் முறிந்து பத்துவருடங்களுக்குப்பிறகு கடந்த 21 ஈஸ்ட்டர் பண்டிகை காலைப்பொழுதில் திடீரென தற்கொலைக் குண்டுவெடிப்புகள் சாவு என சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகிவிட்டது. இம்முறை மீண்டும் விடுதலைப்புலிகளல்ல. இம்முறை தற்கொலைத் தாக்குதலை வழிதவறிய சில இலங்கை முஸ்லிம்  இளைஞர்கள் நடாத்தியிருக்கிறார்கள்.

ஏப்பிரல் 21 ஈஸ்ட்டர் பண்டிகைக்காக கிறிஸ்துவ தேவாலயங்களிலும் ஈஸ்ட்டர் விடுமுறையில் ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் மக்கள் குவிந்திருந்த அதிகாலையில் நடந்த தாக்குதலில் கிறிஸ்துவர்களும் 12 பணக்கார நாடுகளைச் சேர்ந்த உல்லாசப்பயணிகளும் பலியாகி உள்ளனர். உடனடியாக அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டு முப்படைகளும் காவல்துறையும் சகல அதிகாரங்களோடும் வீதிக்கு இறக்கபட்டனர். இருந்தபோதும்  உச்ச மனித விழுமியங்களை மனிதாபிமானத்தையும் கிறிஸ்துவ திருச்சபையும் தலைவர் பிசப் மல்கம் ரஞ்சித் அவர்களும்  வெளிப்படுத்தியதுதான் இரத்தக்களரியைத் தடுத்து நிலமையை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தது. கடந்த கால நெருக்கடிகளில் ஏனைய மத நிறுவனங்கள் எதுவும் இத்தகைய சமூகப்பொறுப்புடன்  செயல்படவில்லை என்பதை ஒத்துகொண்டே ஆகவேண்டியுள்ளது. தாக்குதல்களில் தமிழர்களும் குறிவைக்கபட்டபோதும் தமிழர் தலைவர் சம்பந்தனும் நிலமையை கட்டுப்படுத்துவதில்  மிக பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டார்.  

ஈஸ்ட்டர் தாக்குதலில் எட்டு தற்கொலை குண்டுதாரிகள்  நாற்பது வெளிநாட்டவர் கள் உட்பட 359பேர் இறந்துள்ளதாக அரசு அறிவித்திருந்தது. . குண்டு வெடிப்புகளில் உடல் சிதறி சிதைந்துவிடுவதில் கணகெடுப்பது இலகுவல்ல. டி.என்.எ ஆய்வுக்குபின் இறந்தவர்கள் எண்ணிக்கை 253 எனெத் திருத்தபட்டுள்ளது.   

தற்கொலை தாக்குதல் முஸ்லிமடிப்படைவாதிகள் சம்பந்தபட்டது, மேற்க்கு நாடுகளில் பரவிவரும் இஸ்லாமிய எதிர்ப்பு வியாதி என்பவற்றுக்கு  அப்பால் அமரிக்கா சீனா உட்பட  12 பணக்கார நாடுகளை சேர்ந்த உயர்குடி உல்லாசபயணிகள் இறந்திருப்பதும் தாக்குதலில் வெளிநாட்டு இஸ்லாமிய அடிப்படை வாதிகள் சம்பந்தபட்டிருப்பதும்  ஈஸ்ட்டர் தாக்குதலை சர்வதேசப் பிரச்சினையாக்கி உள்ளது. இலங்கை காவல்துறை மட்டுமன்றி அமரிக்க எப்.பி.ஐ, இங்கிலாந்தின் ஸ்கொட்லண்ட்யாட், இஸ்ரேலிய மொசாட் என மேற்குலகின் உளவுத்துறையினர் வரவால் பிரச்சினை புதிய புதிய பரிமாணங்களை எடுத்துள்ளது. இதனால் இலங்கை இனத்துவ அரசியலில் 2009 மே மாத இறுதிப்போரைபோல 2019 ஏப்பிரலும் தாக்குதலும்  அடையாளக் கல் ஆகிவிட்டது. 

தொகுத்துப் பார்த்தால் 21 ஏப்பிரல் 2019 ஈஸ்ரர் அதிகாலை தற்கொலைத் தாக்குதல்களில்  கொன்றழிக்கபட்ட மக்களோடு வெடித்துச் சிதறியது இலங்கையின் நன்மதிப்பும் இன ஐக்கியமும் உல்லாசபயணிகளிலும் வெளிநாட்டு முதலீடுகளிலும்  தங்கியுள்ள இலங்கை பொருளாதாரமும் மட்டுமல்ல. ஈஸ்ட்டர் தாகுதலில் கொல்லபட்ட தமிழ் சிங்கள் மக்களுக்கு அடுத்ததாக இலங்கை முஸ்லிம் மக்களின் அமைதியான வாழ்வும்தான்.

மேலும் மட்டக்களப்பில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அனுதாபமாக இலங்கை இராணுவம் செயல்படுவதாக பொதுக்கருத்து உருவாகி உள்ளது. இது யுத்த காலத்தில் நிலவிய  பொதுக்கருத்துக்கு நேரெதிரானதாகும். சிங்களப் பகுதியிலும் தமிழ் பகுதிகளிலும் உயர்ந்துள்ள வெறுப்பும் கோபமும் வடிய ஆரம்பித்துள்ளது மகிழ்ச்சியாகும். எனினும் சிங்கள பெரும்பாண்மை மக்களுக்கும்  முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவு  ஈஸ்டருக்கு முந்திய இயல்பு நிலைக்குத் திரும்ப நெடுங்காலமாகும் என்பதுதான் காலத்தின் சோகம்.  

ஏறக்குறைய தமிழகத்தில் பாதி அளவான இலங்கையில் 75% ம் சிங்களவர், அவர்களது  குடித்தொகை ஒன்றரைக்கோடிக்கு சற்று அதிகமாம் 75% ஏனைய 25% மக்களும் தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள். இவர்களுள் பூர்வீக குடிகளான இலங்கை தமிழர்கள் புலம் பெயர்ந்தவர்கள்போக மீதி 22 லட்சத்துக்கு சற்று அதிகம் (11.15%) இந்திய வம்சாவளி மலையக தமிழர்களுள்  தமிழ்நாடு தாயகம்  திரும்பியவர்களை தவிர்த்து  8 லட்சத்துக்கும் (4.12%) சற்று அதிகமாகவும் உள்ளனர். தாய்மொழி தமிழானாலும் இலங்கையில் வாழும்  19  லட்சம் (9.20%)  முஸ்லிம்கள் தங்களை தனியான இனமாகவே கருதுகின்றனர். 

எனினும் சிங்களவர் தமிழர் போல ஓரிடச் செறிவில்லாமல் நாடெங்கும் தனித் தனியாகச் சிதறிய கிராமங்களில் வாழ்வதும் இனரீதியாக பலகீனமாகும். இதனால் இலங்கை எங்கும் சலுகை அரசியல் செய்ததில்  தமிழரைவிட அதிகமாக பாரம்பரிய தாயகத்தை முஸ்லிம்கள் இழந்துள்ளார்கள். எனினும்  கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் தமிழரும் முஸ்லிம்களும் அரச ஆதரவில் குடியேறிய  சிங்களவர்களைவிட அதிகமாகவும்  சமபலத்துடனும் இருக்கிறார்கள். கிழக்கு மாகாணத்தில் 1985ல் இடம்பெற்ற இனக்கலவரம் வரைக்கும் தமிழர் மத்தியில் சைவ கிறிஸ்துவ பக்தி மார்க்கமும் முஸ்லிம்கள் மத்தியில் நல்லிணக்கத்தின்  கருவூலமான சூபித்துவமும் ஓங்கியிருந்ததில் காலம் காலமாக  ஐக்கியமான அழகிய சமாதான சக வாழ்வு செளித்திருந்தது.  எனினும் 1980ல் இருந்து தமிழர் மத்தியில் அரை நூற்றாண்டு தொடர்ந்த உரிமைக்கான அறவழிப் போராட்டங்கள் சிங்கள அரசினால் கொடுமையாக நசித்தழிக்கபட்டதன் எதிர்விவிளைவாக  இந்திய தமிழக ஆதரவுடன் ஈழ விடுதலை போராளிகள் எழுற்ச்சி பெற்றனர்.

அதே சமயம்  கிழக்கு மாகாண  முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்த சூபிகளின் பலம் குன்றி சிறு  சிறு குழுக்களாக சவூதி அரேபிய ஆதரவு வகாபிய  அடிப்படை வாதிகள் செல்வாக்குப் பெற்றனர். தனித் தனி இனமாக பிரிந்தியங்கிய தமிழர்களையும் முஸ்லிம்களையும் மொழிவாரியாக தமிழ் பேசும் மக்களாக அரவணைத்த செல்வநாயகத்தின்  சகவாழ்வு கொள்கையின் அவசியத்தை தமிழ் இயக்கங்கள் புரிந்து கொள்ளவில்லை. புற நடையாக தமிழ் தரப்பில் ஒருசிலர் தமிழரும் தமிழ் பேசும் முஸ்லிம்களும் இணைந்து செயல்படவேண்டுமென குரல்கொடுத்தார்கள். புறநடையாக  ஒருசில முஸ்லிம் இளைஞர்கள் தமிழ் பேசும் இன ஐக்கிய அடிபடையில் இயக்கங்களில் இணைந்தார்கள் எனினும் இந்த இருபுறத்தும் சிறுபாண்மையான ஆரோக்கியமான சூழல் தொகைரீதியாக அடிபட்டுப்போனது. 

இந்தச்சுழலில் வரலாற்று பிளவாக  கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் 1985ம் ஆண்டு தமிழ் முஸ்லிம் இனக்கலவரம் வெடித்தது.  இந்தபின்னணியில் சிங்கள அரசு இராணுவ நிறுவனங்களின் பிரித்தாளும் கொள்கை பலப்படது. வளர்ச்சிபெறும்  போராளிகள் ஒருபுறமும் வளர்ச்சி பெறும் வகாபி அடிப்படை வாதிகள் மறுபுறமும் என்கிற சூழல் பிரித்தாளுவோருக்கு மட்டுமே சாதகமாக அமைந்தது. இந்த பகைமைச் சூழல் கிழக்குமாகாண நிலவரமாகும்.  தமிழர் பெரும்பாண்மையாக வாழ்ந்த வடமாகாணத்திலும் சிங்களவர் பெரும்பாண்மையாக வாழ்ந்த தென்மாகாணங்களிலும் தமிழ் முஸ்லிம் பகமை ஏற்படவுல்லை. எனினும் 1990களின் ஆரம்பத்தில்  இராணுவத்தின் பிரித்தாளும் தந்திரமும் தமிழ் இயகங்களின் தமிழ் அடிப்படை வாதமும் அம்பாறைமாவட்டத்தில் பலம்பெற்றிருந்த முஸ்லிம் அடிபடை வாதமும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் இன நெருக்கடிகளை உச்சபடுதியது.  தொடற்ச்சியாக தமிழர் விடுதலை வரலாற்றின் பெரும் ட்தவறான வடபகுதி அப்பாவி முஸ்லிம்கள் பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட கொடுமை நிகழ்ந்தது.  இது 2009ம் ஆண்டுவரை நீடித்த சூழலாகும். 

போர்க்காலத்தில் முஸ்லிம்களோடு உறவாடிய அரசும் பாதுகாப்புப் படைகளும் சிங்கள பெளத்த பேர் இனவாத அமைப்புகளும் நிறுவனங்களும் அரசும் போருக்கு பிந்திய காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக திரும்பியது. முஸ்லிம்களுக்கு எதிரான தக்குதல்கள் அன்றாட நினைவுகளாயின. இந்த புதிய நெருக்கடி முஸ்லிம் இளைஞர்களை அரசியல்ரீதியாக விரக்திக்குள்ளாகியது. இச்சூழல் அடிபடை வாத செல்வாகுள்ள இளைஞர்கள் சிலர் மத்தியில் இருந்து ஐ.எஸ்.எஸ் போன்ற பயங்கவாத இயக்கங்களின் ஈர்ப்பு ஏற்பட்டது.    

ஈழ விடுதலைப் போரின் முறிவு பேரழிவுக்கு பின்னர் சிங்கள பேரின வாதிகளும் அரசும் தமிழ் மக்களின் நிபந்தனையற்ற அரசியல் சரணாகதியை எதிர்பார்த்தனர். ஆனால் சிங்கள அரசினதும் பேரின வாதிகளிளதும் எதிர்பார்ப்புகளை கானல்நீராக்கிவிட்டு ஈழ தமிழர்கள் அரசியல் ரீதியாகச் சரணடைவதற்க்குப் பதிலாக அரசியல் நீதியாக  உரிமைப்போரை அறப்போராட்டமாக மற்றி தொடர்ந்ததனர்.  உலக மயமாதலின் பின்னணியில் தமிழ்நாடு மற்றும் புலம்பெயர் தமிழர் ஆதரவுடன்   சர்வதேச மட்டத்திலும் இந்து சமுத்திர அரசியலிலும் பலம்பெற்ற ஈழதமிழர் தலைமை இலங்கை அரசுக்கு பலமான அழுத்தத்தை ஏற்படுத்தியது. இதனால் தமிழருடன் ஏதோ ஒருவகையில் சமரசம் செய்யவேண்டிய நிர்பந்தம் சிங்கள அரசுக்கு ஏற்பட்டது. சிங்கள பெளத்த பேரினவாதத்துக்கு எப்பவும் ஒரு எதிரிதேவை. மலையக தமிழர் மிக சிறுபாண்மையினரானபோதும் தொழிற்சங்கமையமான அமைப்புரீதியான பலத்தாலும் ஏனைய தென்னிலங்கை தமிழர்கள் வடகிழக்கு இலங்கை தமிழருடனான மொழிவாரி இணைப்பு பலமடைந்து வருவதாலும் பலப்படும் இந்திய ஆதரவாலும் அரசியல் தலைமைகளின் எளிற்ச்சியாலும் பலமான ஒரு சிறுபாண்மையினமாக வலுப்பெற்றுள்ளது. அதனால் சிங்கள இனவாத அரசினதும் சிங்கள பெள்த்த இனவாத நிறுவனங்களதும் கவனம் முஸ்லிம்களின் பக்கம் திரும்பியது.

முஸ்லிம் அடிப்படை வாதிகளின் தாக்குதலை தூண்டி அதன்பின் அவர்களை அழிப்பதன்மூலம் சிங்கள மாவீரர்களாக இலங்கை அரசு தரப்பு முயன்வேடிக்கையும் றது. சிங்கள மாவீரர் பதக்கத்தை யார் அணிவது என்கிற ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்கட்ச்சித் தலைவர் மகிந்த இராசபக்ச இடையிலான பனி யுத்தம்தான் ஈஸ்ட்டர் தாக்குதல் பற்றிய தகவல் கசிந்திருந்தபோதும் தடுக்கபடாமையின் காரணமாகும். தக்குதல் பற்றிய உளவுத் தகவலை அமரிக்காவும் இந்தியாவும் ஏற்கனவே வளங்கியிருந்தபோதும் யார் சிங்கள வீரராவது என்கிற போட்டிதான்  உளவுத் தகவல் மறைக்கபட்ட வேடிக்கையாகும்.  தனக்குத் தராமல்  தராமல் ஜனாதிபதி மறைத்தார் என்று பிரதமரும் எனக்கே தகவல் தரப்படாமல் மறைக்கபட்டது என ஜநாதிபதியும் சொல்கிற வேடிக்கை. இது உலகில் எந்த நாட்டிலும் நடக்காத வேடிக்கை. எனினும் அமரிக்கா அவசரபட்டால் பலர் தலைமறைவாகிவிடலாம் ஆனபடியால் பெரிய தாக்குதல் வரைக்கும் பொறுமையாக பின்தொடருங்கள் அதன்பின் இராணுவ ரீதிஒயாக அழியுங்கள் என ஆலோசனை வளங்கியிருக்கவேண்டும் என ஊகிக்க முடிகிறது.

இந்த பின்னணியில் அடுத்தது தமிழ்நாடா என பற்ற வைக்கிறார்கள். எனினும் எச்சரிக்கை அவசியம்தான். ஏனெனில் இஸ்லாமிய அடிபடைவாதம் வாழ்புல எல்லைக்குள் நடக்கிற உரிமைப் போராட்டமல்ல. இது எல்லையும் இலக்குமில்லாத சித்தாந்த பயங்கரவாதமாகும். ஏற்கனவே கேரளாவில் இருந்து இப் பயங்கர வாதம் கோயம்புத்தூருக்கும் பெங்களூருக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. இலங்கையில்  பயங்கரவாதத்தின் கொடூரம் அரங்கேறியுள்ளது. அதனால் கேரளாவுக்கும் இலங்கைக்கும் நடுவில் இருக்கும் தமிழ்நாடு பற்றிய அச்சம் இயல்பானதுதான். கடந்த 10 வருடங்களாக இலங்கையில் அரசுக்குத் தெரிந்தே இஸ்லாமிய  அடிப்படை வாதம் வளர்க்கப்படுகிறது பெற்றோர்களே பள்ளிவாசல்களே எல்லைமீறமுன் உங்கள் பிள்ளைகளைக் கண்காணியுங்கள் தலையிட்டு அவர்களைக் காப்பாற்றுங்கள் எனக் குரல் கொடுத்து வந்தேன். இதற்க்கு  முஸ்லிம் மக்கள் மத்தியில் இருந்து சில ஆதரவுக்குரல்கள் எழுந்தன. சிலரால் காபீர் முனபிக் என்கிற பட்டங்களும் வழங்கப்பட்டது.  இன்று தமிழ்நாட்டு முஸ்லிம்களைப் பார்த்தும் பள்ளிவாசல்களைப் பார்த்தும் உங்கள் இளைஞர்களை கண்காணியுங்கள், காலம் கடக்குமுன் காப்பாற்றுங்கள் என்று சொல்வேன். காலம் அப்படிக் கெட்டுக்கிடக்கிறது , தீவிரமடைந்துள்ளது.

தற்போது நிலமை வழமைக்கு திரும்ப ஆரம்பித்துவிட்டது மகிழ்ச்சியான சேதியாகும். இலங்கையில் முஸ்லிம் மக்கள் மத்தியில் தர்காக்களை உடைக்கும் விருப்பபடி முனாபிக் பட்டம் வழங்கும், பெண்களை மத்திய காலத்துக்கு விரட்டும், இந்த உலகம் முஸ்லிம்களுகானது காபீர்களை கொல்லலாம் என்கிற  ஜனநாயக மறுப்பாளர்களுக்கு பலமான எதிர்ப்பும் எதிர் விவாதங்களும் ஆரம்பித்துள்ளது. தடைபோட்ட அமைப்புகளே இன்று பெண்கள் வெளியில் செல்லும்போது  முகத்தை மூட வேண்டாம் என அறிக்கை விடுகின்றன. புதிய பலம்பெறும் முஸ்லிம் ஜனநாயக சக்திகள் தமிழ் முஸ்லிம் உறவுக்காக குரல் கொடுக்கின்றன. இலங்கை தமிழர் மலையக தமிழர் மட்டுமன்றி அகில உலகத் தமிழர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் சிங்கள ஜனநாயக சக்திகளும்  எல்லா வகையிலும் முஸ்லிம்களின் ஜனநாயக சக்திகள் பலம்பெற உதவ வேண்டும்.

இலங்கையில் தமிழர் முஸ்லிம்கள் மலையகதமிழர் சிங்கள ஜனநாயக சக்திகளின் ஐக்கியம் ஓங்கட்டும்!


-ஜெயபாலன்

No comments:

Post a Comment