இலங்கையின் முதலாவது SMART FISHERY HARBOUR: ராஜாங்க அமைச்சர் தகவல் - sonakar.com

Post Top Ad

Tuesday 19 February 2019

இலங்கையின் முதலாவது SMART FISHERY HARBOUR: ராஜாங்க அமைச்சர் தகவல்


இலங்கையின் முதலாவது SMART FISHERY HARBOUR ஆக ஹம்பாந்தோட்டை - கலமடிய மீன்பிடி துறைமுகத்தினை அபிவிருத்தி செய்ய அவசியமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை இராஜாங்க அமைச்சர் திலீப் வெத ஆரச்சி தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் கொரிய நாட்டை சேர்ந்தவர்களுடன் கலமடிய மீன்பிடி துறைமுக வளாகத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"நில் ஆர்த்திக" வேலைத்திட்டத்தின் கீழ் இந்த SMART FISHERY HARBOUR திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதுடன், மீன்பிடி துறைமுகத்தின் நீர் தேவைகளுக்காக கடலுக்குள் கீழே இருந்து நீரைப் பெற்றுக்கொள்வது, ஆய்வில் நிச்சயமாகி உள்ளதுடன், அவ்வாறு எடுக்கப்படும் நீரானது கடலுக்கு கீழே 150 மீட்டர் ஆழத்தில் இருந்து எடுக்கப்படவுள்ளதுடன், அது துறைமுகத்திற்கு மட்டுமல்லாது சுற்றியுள்ள கிராமங்கள் பலவற்றிட்கும் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று அங்கு வந்திருந்த கொரிய குழுவினர் தெரிவித்தனர்.


கலமடிய பிரதேசத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கும் இது தீர்வாக இருக்கும் என்று இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆரச்சி தெரிவித்தார். 

இத்திட்டத்திற்கு சூரிய சக்தி மூலம் மின்சாரம் வழங்க நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதுடன், அதில் உதிரியாகுபவற்றை தேசிய திட்டத்திற்கு வழங்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. அத்துடன் கண்காணிப்புக் கமராக்களை பொருத்துவது சம்பந்தமாகவும் உரையாடப்பட்டது.

கொரிய நாட்டின் நிதியுதவியில் ஆரம்பிக்கப்படவுள்ள இத்திட்டத்திற்கு தினசரி, பெருமளவிலான நீரும் மின்சாரமும் தேவைப்படுவதாகவும் அதற்கான நிதி இதில் உள்ளடங்குவதால் பாரிய தொகை எமக்கு மீதமாவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

மீன்பிடி துறைமுகங்களில் நடக்கும் சட்டவிரோத செயல்கள் SMART FISHERY HARBOUR மூலம் தடுக்கப்படும் என்றும், கலமடியவில் இது வெற்றியடையுமானால், நாடெங்கிலும் இருக்கும் 22 மீன்பிடி துறைமுகங்களிலும் இதனை செயற்படுத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆரச்சி மேலும் தெரிவித்தார்.

-Rihmy Mohamed

No comments:

Post a Comment