துஷ்பிரயோகம் செய்தால் ஆயுட்காலம் அனுமதிப் பத்திரம் இல்லை: க.தொ.அமைச்சு - sonakar.com

Post Top Ad

Thursday 21 February 2019

துஷ்பிரயோகம் செய்தால் ஆயுட்காலம் அனுமதிப் பத்திரம் இல்லை: க.தொ.அமைச்சு


மீன்பிடி படகுகளுக்கான அனுமதிப் பத்திரம் பெற்று, அதனை சட்ட விரோத செயல்களுக்காக பயன்படுத்துபவர்களுக்கு ஆயுட்காலம் முழுவதும் அனுமதிப் பத்திரம் பெறத் தடை விதிக்கும் தீர்மானம் நேற்று (20) எடுக்கப்பட்டது. 

இந்தத் தீர்மானத்தை செயற்படுத்த அவசியமான சட்ட திட்டங்களை உடனடியாக செயற்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆரச்சி கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு  வேண்டுகோள் விடுத்தார். 

நேற்றைய தினம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மீன்பிடி படகு உரிமையாளர்களுடனான சந்திப்பின் போதே இவ்வாறு ஆலோசனை வழங்கினார். இதில் இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி சாந்த நாயக்க, கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பிரசன்ன கீகனகே உள்ளிட்ட உயரதிகாரிகள், மீன்பிடி படகு உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்டோர் தெரிவித்தது, படகு ஓட்டுனர்கள் செய்யும் குற்றங்களுக்கு உரிமையாளர்கள் தண்டிக்கப்படும் அவல நிலை இடம்பெறுகிறது என்பதாகும். இதன் போது இராஜாங்க அமைச்சர், குற்றம் செய்தவரை தப்பிக்க விட்டு விட்டு, நிரபராதியை தண்டிக்கும் இம்முறையை ஏற்றுக் கொள்ள முடியாது. குற்றவாளிக்கு உயர்ந்த தண்டனையை வழங்குவதற்காக புதிய சட்டமொன்றை கொண்டு வருவதற்காக நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

இராஜாங்க அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது,
"இந்த ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க மேற்கொண்ட இராஜ தந்திர செயற்பாடுகள் தற்போது வெற்றியை தந்துள்ளன. 


அதனால் தான் சட்டவிரோதமாக மீன்பிடி படகுகளின் மூலம் பிரான்ஸ் இற்கு போன குழுவில் 64 பேர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகும்.

எமது அடுத்த முயற்சி இவ்வாறான கடத்தல் காரர்களை இனங்காண மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை உடனடியாக தலையீடு செய்து தடுப்பதற்கு வசதியாக APP ஒன்றை அறிமுகம் செய்வதாகும். இவ்வாறு செய்வதன் மூலம் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்த முடியும். அத்துடன் சட்டவிரோத செயல்களை குறைப்பது மற்றுமொரு நோக்கமாகும். இத்திட்டம் மிகவும் வெற்றியைக் கொடுக்கும் என்று நம்புகிறோம்.

மற்றையது, படகு ஓட்டுனருக்கு (ஸ்கிப்பர்) எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது தொடர்பானது. படகு உரிமையாளருக்கும், ஓட்டுனருக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் இருப்பது போன்று ஓட்டுனருக்கும் கடற்றொழில் திணைக்களத்திற்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது அடுத்த திட்டமாகும்.

இதன் கீழ் படகு ஓட்டுனர்களுக்கு அடையாள அட்டை வழங்கவுள்ளோம். ஆட்கடத்தல் அல்லது சட்டவிரோத செயல்களில் அவர்கள் ஈடுபட்டால் வாழ்நாள் முழுவதும் படகு ஓட்ட முடியாதவாறு அவர்களது அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்படும்" என்று மேலும் தெரிவித்தார்.

-கஹட்டோவிட்ட ரிஹ்மி 

No comments:

Post a Comment