சபை அமர்வை பகிஷ்கரிக்குமா சாய்ந்தமருது சுயேட்சைக்குழு? - sonakar.com

Post Top Ad

Sunday 1 April 2018

சபை அமர்வை பகிஷ்கரிக்குமா சாய்ந்தமருது சுயேட்சைக்குழு?


கல்முனை மாநகர சபையின் முதலாவது அமர்வும், மாநகர முதல்வர் தெரிவும் எதிர்வரும் 02.04.2018 திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதில் எத்தரப்பினர் ஆட்சி அமைப்பது என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் காணப்பட்ட போதிலும் தனியான உள்ளூராட்சி மன்றத்தை முன்னிலைப்படுத்திய சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவினர் இந்த முதல் அமர்வில் கலந்துகொள்வது சாதகமானதா அல்லது பாதகமானதா என்கின்ற ஒரு கேள்வியை இங்கு எழுப்பியிருக்கின்றது. 

12 ஆசனங்களை ஐக்கிய தேசியக் கட்சி பெற்றிருக்கின்றது. இதில் வெற்றி பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மொத்தம் 10பேராவர். இவர்களை முன்னிறுத்தி முஸ்லிம்களின் ஆட்சி அமைய வேண்டிய தேவை இங்கு இருக்கின்றது. அதேநேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு -07, தமிழர் விடுதலைக்கூட்டணி -03 ஐ.தே.க சார்ந்த -02 சுயேட்சைக்குழு ஒரு உறுப்பினர் உட்பட 13 தமிழ் பிரதிநிதித்துவங்கள் இங்கு உள்ளது.



ஏற்கனவே அறிவித்ததற்கிணங்க சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் 09 பேரும் எந்தக் கட்சியையும் ஆதரிப்பதில்லை என்கின்ற அடிப்படையில் அவர்கள் முதல் அமர்வில் கலந்துகொண்டால் ஒரு சங்கடமான நிலைக்கு தள்ளப்படக்கூடும். எவ்வாறெனில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருவரை மேயராக நிறுத்துகின்ற அதேநேரம், தமிழர் தேசியக் கூட்டமைப்பும் இன்னுமொருவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தலாம். 

அந்த நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்ந்த 05 முஸ்லிம் உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளரை ஆதரித்தார்களேயானால் முஸ்லிம் முதல்வர் தெரிவாகுவது இலகுவாக அமைய முடியும். அவ்வாறில்லாமல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கும் இடையே இருக்கின்ற அரசியல் போட்டித்தன்மையின் காரணமாக சிலவேளை அவர்களும் ஒருவரை தமது கட்சி சார்பில் முதல்வராக முன்னிறுத்தலாம். 

அப்படி முன்னிறுத்துவதென்பது சாய்ந்தமருது சுயேட்சைக்குழுவின் 09 உறுப்பினர்களை கருத்தில்கொண்டே பிரேரிக்கக்கூடிய வாய்ப்பு தோன்றும். இத்தகைய இக்கட்டான நிலையை தோற்றுவிப்பதிலிருந்து விலகுவதற்கும் மு.கா.வும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து முஸ்லிம் ஆட்சியை நிலைப்படுத்துவதற்கு இருக்கின்ற சரியான ஒரு தெரிவு சாய்ந்தமருது சுயேட்சைக்குழுவினர்கள் இந்த முதல் அமர்வை பகிஷ்கரிப்பதேயாகும். 

இங்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்ந்த ஒரு உறுப்பினரை பிரதி முதல்வராகவும், வேறு ஒருவருக்கு மாநகர சபையின் நிலையியல் குழுவில் பிரதிநிதித்துவமும் மற்றும் மருதமுனை சார்ந்த சுயேட்சைக்குழு பிரதிநிதிக்கு நிலையியல் குழுக்களில் அங்கத்துவத்தை வழங்கியும் மொத்தமாக 16 முஸ்லிம் உறுப்பினர்கள் இணைந்து ஆட்சியமைக்க முடியும். 
சிலவேளை தேசிய காங்கிரஸ் , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய கட்சிகளும் தலா ஒவ்வொருவராக மூன்று பேரும் மு.கா.வின் முஸ்லிம் முதல்வர் வேட்பாளரைச்ச் ஆதரித்து தமது வாக்குகளை பிரயோகிப்பார்கள் அல்லது வாக்களிப்பில் இருந்து ஒதுங்கிக்கொள்வர். 

தேவையேற்படின் இம்மூன்று உறுப்பினர்களுக்கும் கூட மாநகர சபை நிலையியல் குழுக்களில் அங்கத்துவ அந்தஸ்த்தை வழங்கியும் இணைத்துக்கொள்ள முடியும். அரசியல் போட்டித்தன்மை காரணமாக இம்மூன்று பேரும் முஸ்லிம் தரப்பு முதல்வரை ஆதரித்துக்கொள்ளாவிட்டாலும் சமூக உணர்வின் அடிப்படையில் தமிழ் முதல்வரை தெரிந்துகொள்வதற்கு வாக்களிக்கத் துணியமாட்டாகள் என்ற நம்பிக்கையை அவர்கள் மீது நாம் வைக்கலாம். 

சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவினர்கள் சமூகமளித்து வாக்களிப்பில் கலந்துகொள்ளாது தவிர்த்துக்கொண்டாலும் அவர்களின் அந்தச் செயற்பாட்டை பிழையானது என காண்பிப்பதற்காக வேறு எத்தனங்கள் அங்கு முன்னெடுக்கப்படலாம். அந்த நேரத்தில் இவர்கள் ஒரு தடுமாற்ற நிலையை அடைந்து வாக்களிக்க வேண்டிய ஒரு நிர்பந்தம் ஏற்படுமானால், இவர்களது தேர்தல் கால கோஷங்கள் அனைத்தும் அர்த்தமற்றதாகிவிடும். 


ஏனெனில், சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபை அமைவதற்கு எத்தரப்பினர்களின் வாக்குறுதிகளையும் நம்பக்கூடிய எந்தச் சூழலும் இன்று வரை இல்லாததன் காரணமாகவும், இந்த அமர்வுக்கு முன்னர் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்துக்குரிய பிரகடனத்துக்கான எந்த முகாந்திரமும் இல்லை என்பதினாலும் இக்குழுவினர்கள் வாக்களிப்பிலிருந்து விலகியே இருக்க வேண்டியதன் கட்டாயம் இருப்பதினால் முதல் அமர்வை பகிஷ்கரிப்பதுவே தமது எண்ணத்திற்கும், நோக்கத்திற்கும் இன்றும் நாளையும் பாதுகாப்பு அரணாக அமைய முடியும். 

முதல் அமர்வுக்குச் சென்று தவறிழைத்தால் அது எந்த சூழலிலும் நிவர்த்திக்க முடியாததும் , தீராத பழியையும் சுமக்க வேண்டிய வரலாற்றுத் தவறுக்கு உட்படுத்துமென்பதை நமது அவதானத்திலிருந்து விலத்திவிட முடியாது. சாய்ந்தமருது சுயேட்சைக்குழுவினரின் பங்குபற்றுதல் சிலவேளை கோரத்தை – கூட்டநடப்பெண்ணை பூர்த்தியாக்கிவிடும். இதிலிருந்தும் நாம் ஒதுங்குவதற்கும் ஒரே வழி முதல் அமர்வை பகிஷ்கரிப்பதேயாகும்.

-எம்.எம்.எம்.நூறுல்ஹக்

No comments:

Post a Comment