பரீட்சை முடிவு: கல்விப் பயணத்தின் முடிவல்ல! - sonakar.com

Post Top Ad

Friday 30 March 2018

பரீட்சை முடிவு: கல்விப் பயணத்தின் முடிவல்ல!


சுதந்திர இலங்கையின் இலவசக் கல்விக் கொள்கை  எழுத்தறிவு கொண்டோரின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறது. 

தற்போதைய இலங்கையின் எழுத்தறிவு வீதம் 98 வீதமாகவுள்ளது. இதனை 100 வீதமாக மாற்றுவதை இலக்காகக் கொண்டு கல்விக் கட்டளைச் சட்டத்தின் 37ஆம் பிரிவின் கீழ் 5-16 வயதில் உள்ள பிள்ளைகளை கட்டாயக் கல்வியில் ஈடுபடுத்தும் நடவடிக்கைகளை கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகிறது. எழுத்தறிவு வீத அதிகரிப்பும், கடந்த ஒரு சில வருடங்களின் தேசிய மட்டப் பரீட்சைகளில் பாடசாலை மாணவர்களின் அடைவு மட்ட அதிகரிப்பும் இலங்கையின் கல்வித்துறையின் விருத்தியைப் பறைசாட்டுகிறது என்று கூறலாம்.


கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று புதன்;;கிழமை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் அடங்களாக 2017ஆம் ஆண்டின் சாதாரணதரப் பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 688,573 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். இதில் பாடசாலைப் பரீட்சார்த்திகள் 429,493 பேரும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 259,080 பேரும் தோற்றியிருந்தனர். 

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை வரலாற்றில் கட்ந வருடமே அதிகளவிலான பரீட்சார்த்திகள் தோற்றிருந்நதனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. அத்துடன், 969 பரீட்சார்த்திகளின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின பதில் ஆணையாளர் சனத் பூஜித்த ஏற்கனவே தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வெளியாகியுள்ள பரீட்சை முடிவுகளின் பிரகாரம் சிறப்புச் சித்தி பெற்ற மாணவர்கள் அந்தந்த பாடசாலை சமூகத்தினாலும், சமூக அமைப்புக்களினாலும,; பிரதேசங்களினாலும் பாராட்டப்படுவார்கள்;. ஆனால,; இப்பாராட்டுக்கள் பரீட்சையில் சிறப்புச் சித்தி பெறாத மாணவர்களின் உளநிலையைப் பாதித்து விடக் கூடாது. இம்மாணவர்களின் உள ஆரோக்கியத்தைப் பாதிக்காத வகையில் பாராட்டு வைபவங்கள் முன்னெடுக்கப்படுப்பதில் சம்பந்தப்பட்டவர்கள் அக்கறை செலுத்துவது காலத்தின் அவசியமாகும். 

இருப்பினும,;  நமது கல்வி முறைமையிலும் பரீட்சை முறைமையிலும் மேலும் மாற்றம் செய்யப்பட வேண்டிய தேவை காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. நவீன உலகின் எதிர்கால சவால்களுக்கு  முகம் கொடுத்து வெற்றி கொள்ளும் எதிர்கால சந்தியினரை உருவாக்கும் வகையில்  கல்வி முறைமையும,; பரீட்சை முறைமைகளும் மாற்றியமைக்கப்பட வேண்டும். கல்வி முறையிலும,; பரீட்சை முறைமையிலும் காணப்படும் குறைபாடுகள் பட்டம் பெற்றும் தொழில் பெறுவதற்காக நடுவீதியில் நின்று போராடும் நிலையை உருவாக்கியிருக்கிறது. இதனால் இக்கல்வி முறைமையிலும்;, பரீட்சை முறைகளிலும் மாற்றம் அவசியம் என்பதைச் புத்திஜீவிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பரீட்சைகளும் சமகாலமும்

ஒரு மொழி, இரு மொழி மும்மொழிப் பாடசாலைகளென மொழி அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ள சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகள்  மொத்தமாக ஏறக்குறைய பத்தாயிரம்  அரச மற்றும் அரச சார்ப்புடைய பாடசாலைகள் இயங்குகின்றன. இவற்றில் அண்ணளவாக நான்கு மில்லியன் மாணவர்கள் கல்வி கற்பதுடன் கிட்டதட்ட 2,30,000 ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.  இவற்றுடன் சர்வதேச பாடசாலைகளும் அரச அங்கீகாரத்துடன் செயற்படுகின்றன.

ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய மூன்று இலட்சம் மாணவர்கள் நாடு பூராகவுமுள்ள அரச பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு அனுமதிக்கப்படுகின்ற மாணவர்கள் அவர்களின் 10 அல்லது 12 வருட கால பாடசாலைக் கல்வி நடவடிக்கையின்போது ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை ஆகிய மூன்று தேசிய பரீட்சைகளுக்குத் தோற்றும் சந்தர்ப்பம் கிடைக்கின்றன. இருப்பினும், இம்மூன்று பரீட்சையிலும் தோற்றும் வாய்ப்பு தரம் ஒன்றில் சேருகின்ற 100 வீத மாணவர்களுக்கும் கிடைப்பதில்லை. அவ்வாறு இம்மூன்று பரீட்சைக்கும் தோற்றும் மாணவர்கள் அனைவரும் இப்பரீட்சைகளில் சித்தியடைவதுமில்லை.

ஒவ்வொரு வருடமும் நடைபெறும் புலமைப் பரிசில் பரீட்சையில் தகைமை பெறும் மாணவர்களில்; 30 ஆயிரம் மாணவர்களே புலமைப் பரீசில்களுக்கு உரித்தாகுகின்றனர். அவர்களில் 15 ஆயிரம் பேருக்கு மாத்திரமே புலமைப் பரீசில் கொடுப்பனவு வழங்குவதற்கு தெரிவுசெய்யப்படுகின்றனர் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இவ்வாறு இருந்தபோதிலும,; இப்பரீட்சையில் தங்களது பிள்ளைகளைச் சித்தியடையச் செய்வதற்காக பாடசாலைகளும் பெற்றோர்களும் எடுக்கும் பிரயத்தனங்களால் மாணவர்கள் அழுத்தத்திற்கு உள்ளாகிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது.

சமகாலத்தில் இப்பரீட்சைக்காக பிள்ளைகளை விட பெற்றோர்கள் எடுக்கும் பிரத்தனங்களுக்கு அளவே இல்லை. இப்பரீட்சையில் தமது பிள்ளையை சித்தியடையச் செய்ய வேண்டும் என்ற பெற்றோர்களின் அக்கறை வேட்கையைப் பயன்படுத்தி, கல்வி வியாபாரம் செய்வோர் தங்களது வியாபாரத்தைக் கற்சிதமாகப் புரிகின்றனர்.

தரம் மூன்றிலிருந்தே இப்பரீட்சைக்குத் தயார்படுத்துமாறு பெற்றோர்கள் கல்வி வியாபாரிகளினால் ஊக்கப்படுத்தப்பட்டு,  அவற்றுக்கான பாடதிட்டம் மற்றும் பரீட்சைப் பொதிகள் தயார்படுத்தப்பட்டு பல பிரதேசங்களில் இப்பரீட்சைக்கான கல்வி வியாபாரம் கலைகட்டியிருப்பதை மூடி மறைக்க முடியாது. இந்நிலையில், இப்பரீட்சையின் வெற்றி தோல்வியினால் ஏற்படுகின்ற உள மாற்றங்கள், கவலைகள,; வேதனைகள் என்பவை பல உளவியல், சமூக, பொருளாதாரப் பிரச்சிகைளையும் தோற்றுவிக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டாமல் இருக்க இயலாது.

இவ்வாறே ஒவ்வொரு வருடமும் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக ஏறக்குறைய 500,000 மாணவர்கள் தோற்றுகின்றனர். இவர்களில் அண்ணளவாக 50 வீதத்திற்கும் 60 வீதத்திற்குமிடைப்பட்டவர்களே உயர்தரம் கற்பதற்கு தகுதி பெறுகின்றனர். சித்தியடையத் தவறுவர்களில் 50 வீதமானோர் கணிதம் மற்றும் தாய் மொழிப் பாடங்களில் சித்தியடைவதில்லை. இருப்பினும,; கடந்த இரு வருட முடிவுகளின் பிரகாரம் கணிதப் பாடத்தில் சித்தியடைந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை; அதிகரித்திருப்பதாக பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டிருக்கிறது.

இதுபோல், ஒவ்வொரு வருடமும் கல்விப் பொதுத்தராதார உயர்தரப் பரீட்சைக்கு சராசரியாக 2,50,000 மாணவர்கள் தோற்றுகின்றனர். இவர்களில் ஏறக்குறைய 150,000 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகைமை பெறுகின்றபோதிலும் பல்கலைக்கழகங்களில் காணப்படும் மனித வள மற்றும் பௌதீக வளப் பற்றாக்குறையின் நிமித்தம் ஏறக்குறைய 22,000 மாணவர்களே இலங்கையிலுள்ள 17 தேசிய பல்கலைக்கழகங்களிலுமுள்ள கற்கை நெறிகளுக்காக ஒவ்வொரு வருடமும் உள்ளவாங்கப்படுகின்றனர். இருப்பினும் கடந்த 2016ஃ  2017ஆம் பல்கலைக்கழக கல்வி ஆண்டுக்காக  ஏறக்குறைய 25 ஆயிரம் மாவணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இருப்பினும், அண்ணளவாக ஒரு இலட்சம் மாணவர்கள் இப்பரீட்சையில் சித்தியடையத் தவறுவதுடன் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோர் பல்கலைக்கழக அனுமதியைப் பெறுவதற்குத் தமைமை இருந்தும் அவர்களால் தேசிய பல்கலைக்கழகங்களில் அனுமதிபெற முடியாதுள்ளது.

இத்தகையவர்கள் தங்களது எதிர்கால இலக்குகளை நிச்சயித்துக்கொள்வதற்காக தனியார் உயர் கல்வி நிறுவனங்களை நாடி கல்விப் பயணத்தை முன்னெடுப்பதும் தற்காலத்தில் பிரச்சினைக்குள்ளாகியிருக்கிறது. அதற்கோர் உதாரணமாக சைட்டம் கல்வி நிறுவனத்திற்கு எதிரான போராட்டங்களைச் சுட்டிக்காட்டலாம்.

பலரின் எதிர்பார்ப்புக்கள் வெற்றி கொள்ளப்பட்ட நிலையில், இன்னும் பலரது கனவுகள் கலைக்கப்பட்டதாக 2017 டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள்; வெளிவந்துள்ளன. இப்பரீட்சைப் பெறுபேறுகள் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் ஒரு பகுதியினரை வெற்றி மகிழ்ச்சியில் தவளச் செய்தும் மற்றுமொரு பகுதியினரை தோல்விக் கவலையில் துவளவும் செய்திருக்கக் கூடும்.

தன்னம்பிக்கiயும் தோல்வியில் வெற்றியும்

இப்பரீட்சை பெறுபேறுகள்; ஒரு தொகுதி மாணவர்களையும் அவர்களது பெற்றோர்கள், ஆசிரியர்களையும் மகிழ்ச்சிப் பெருவெள்ளத்தில் நனைக்கச் செய்திருந்தாலும், மறுகனம் மற்றுமொரு தொகுதி மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் கவலை கொள்ளச் செய்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், இப்பரீட்சையில் சித்தியடைந்தவர்களது இச்சித்தியானது அவர்களின் கல்வித்துறையின் முதற்படி வெற்றியென்றாலும், இன்னும் அவர்கள் கடக்க வேண்டிய எதிர்காலப்படிகள் ஏராளம் உள்ளன என்பதை மனதில் நிறுத்தி மேலும் வாழ்வின் வெற்றிக்கான முயற்சிகளை உச்சாகத்துடன் தொடர வேண்டும் என்பது எமது பிரார்த்தனையாகும்.

அதேசமயம், பரீட்சையில் சித்தியடையத் தவறியவர்கள் வெற்றியும் தோல்வியும் முழு வாழ்க்கையின் வெற்றியுமல்ல தோல்வியுமல்ல. வாழ்வதற்கும் வாழ்வில் வெற்றிபெறுவதற்கும் பல வழிகள் இவ்வையகத்தில் உண்டு என்ற தன்னம்பிக்கை மனதில் நிறுத்திக் கொள்வது அவசியமாகும். எத்தகைய சவால்களை சந்திக்க நேர்ந்தாலும், தோல்விகளை எதிர்கொண்டாலும் தன்னபிக்கை இருந்தால் அச்சவால்களை, அத்தோல்விகளை வெற்றி கொள்ள முடியும்.  

வகுத்துக்கொண்ட இலக்கில் ஒரு முறை தோல்வி கண்டவர்கள் அத்தோல்விகளிலிருந்து வெற்றியடைந்த வரலாறுகளும் வரலாற்று ஏடுகளில் பதியப் பட்டிருப்பதை நம்மால் காணமுடிகிறது. அவ்வாறே இப்பரீட்சைகளில் ஒரு முறை சித்தியடையத் தவறியவர்கள் வாழ்க்கையில் தோல்வியடைந்தாக அர்த்தம் கொள்ளக் கூடாது. பாடசாலைக் காலங்களில் தோற்றுகின்ற பரீட்சைகளில் சித்தியடைவது, சித்தியடைத்தவறுவது  அல்லது போட்டி நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு அவற்றில் வெற்றியடைவது அல்லது தோல்வி காண்பதெல்லாம் சகஜமானது. வெற்றியும் தோல்வியும் நிரந்தரமில்லாதவை. ஒரு முறை வெற்றிபெற்றவர் மறுமுறை தோல்வி காண்பார். வெற்றியையும் தோல்வியையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகக் கருத வேண்டும்.

வெற்றியைக் கண்டு மமதைகொள்வதோ அல்லது தோல்வியைக் கணடு துவண்டு போவதோ கூடாது. நாம் தோற்றும் பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என்று ஆசைகொள்வது இயல்பு. இருப்பினும், அதில் வெற்றியும் தோல்வியும் ஏற்படுவது இயற்கையானதுதான். வாழ்க்கையில் ஒரு முறையேனும் தோல்வி ஏற்பட்டால் தான் வெற்றியின் அருமை புரியும். சாதாரணமாக ஒருவன் வெற்றியடைந்தால் அவனுக்கு அது பெரிய விடயமாகத் தெரியாது. ஆனால் பல முறை  தோல்வி கண்டு வெற்றியை தழுவும் ஒருவனால்தான் அதை உண்மையில் உணர முடியும். அவன் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது. இது நிதர்சனமாகும்.

இவ்வாறுதான். இப்பரீட்சைப் பெறுபேறானது தோல்வியைத் தந்திருந்தாலும் மற்றுமொருமுறை முயற்சி செய்து வெற்றியடையும்போதூன் உரியவர்களுக்கு அதன் பெறுமதி விளங்கும். வாழ்க்கையில் சாதணை படைத்தவர்கள், வெற்றிபெற்றவர்கள் எல்லோரும் முயற்சி செய்யாமல் சாதாணை படைக்கவோ வெற்றி பெறவோ இல்லை.

இப்பரீட்சையில் சித்தியடையத் தவறியவர்கள் அவர்களின் முயற்சி குறித்து சுயவிசாரைண செய்வதன் மூலம் புரிந்துகொள்வார்கள். முயற்சி உடையார் இகழ்ச்;சியடையார் என்பதற்கு ஏற்ப எந்த விடயத்திலும் முயற்சி செய்தால் வெற்றியடையலாம். இலக்கை வெற்றிகொள்ள வேண்டுமானால் அதற்கான தொடர் முயற்சிகள் உறுதியுடன் மேற்கொள்ளப்படுவது அவசியம். எந்தவொரு தோல்வியும் நிலையானதல்ல. நமது தன்னம்பிக்கையினாலும் முயற்சியினாலும் அத்தோல்வியை வெற்றிகொள்ள முடியும்.  சித்தியடையத் தவறிய ஒவ்வொரு மாணவரும்  தன்னம்பிக்கையுடன் செயற்படுகின்றபோது அவர்களும் சித்தியடைய முடியும்.

இக்காலத்தில் பெற்றோர்களாலும், பாடசாலைகளாலும், சமூக அமைப்புக்களினாலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்படுவார்கள். அவர்களுக்காக பாராட்டு விழாக்கள் எடுக்கப்படும் அது தவறில்லை ஆனால் ;. இப்பாராட்டு வைபவங்கள், விளம்பரங்கள்; பரீட்சையில் தேவையான பெறுபேறுகளைப் பெறத் தவறிய மாணவர்களை உளரீதியாக பாதிக்கும் வகையில் இடம்பெறுவது தவிர்க்கப்படுவது அவசியமாகும். அத்தோடு, சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளதாவர்களை அவர்களும் சிறந்த பெறுபேறுகளை எதிர்காலப் பரீட்சைகளில் பெற்றுக்கொள்வதற்கு ஊக்கப்படுத்தப்படுவதும் அதற்கான வழிகாட்டல்களை வழங்குவதும் இக்காலத்தின் அவசியச் செயற்பாடாக பாடசாலைச் சமூகம் உணர்ந்து செயற்படுவது பெறுபேறுகளைப் பெறத் தவறிய மாணவர்களின் கல்வி வாழ்வில் ஒளியேற்றும் என்பதில் ஐயமில்லை.

வினைத்திறன்மிக்க வழிகாட்டல்

எந்த விடயத்தை மேற்கொள்கின்ற போதிலும் அதற்கான சிறந்த வழிகாட்டலையும் ஆலோசனையையும் பெற்றுக்கொள்வது சிறந்த பலனை ஏற்படுத்தும். அந்தவகையில், வெளிவந்த க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளின்; பிரகாரம். சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டல் ஆலோசனைகள் சமூக மட்டத்திலும் பாடசாலை மட்டத்திலும் வழங்கப்படுவது அவசியமாகவுள்ளது. இந்த வழிகாட்டல் ஆலோசனையானது உண்மையில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு முன்னரும், பரீட்சைப் பெறுபேறுகள்; வெளியிடப்படப்போகிறது என்ற அறிவித்தல் வழங்கப்பட்ட பின்னரும் அல்லது வழங்கப்படுவதற்கு முpன்னரும் மற்றும் பரீட்சை பெறுபேறுகள் வெளிவந்த பின்னரும் வழங்கப்படுவதன் மூலம் மாணவர்களும், பெற்றோர்களும் மன அழுத்தத்திற்கு உள்ளாகுவதைத் தவிர்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். வெற்றி தோல்விகளை உணர்ந்து கொள்வதற்கு வழிவகுக்கும். 

முறையான வழிகாட்டல் ஆலோசனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாத காரணத்தினால்;, ஒவ்வொரு பரீட்சை முடிவுகளும் வெளியிடப்பட்ட பின்னர்;  மனதை நெகிழ வைக்கக் கூடிய பல ஆபத்தான சம்பவங்கள்   கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளன. இச்சம்பங்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கு இவ்வழிகாட்;டல் ஆலோசனைகள் மூன்று கட்டமாக மேற்கொள்ளப்படுவதானது மாணவர்கள,; பெற்றோர்கள் மத்தியில் மன அழுத்தம் போன்ற உள்ளத்துடன் தொடர்புபட்ட பல கோளாறுகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் என்பது யதார்த்தமாகும்.

ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும், பாடசாலைகளிலும் வழிகாட்டல் மற்றும்; உள ஆற்றுப்படுத்தல் செயற்பாட்டுக்காக சிலர்; நியமிக்கப்பட்டடிருக்கிறார்கள். இவர்களினால் சந்தர்ப்பத்திற்கு ஏற்ற வகையில் வழிகாட்டல் மற்றும் உளவளத்துணை செயற்பாடுகள் வெற்றிகரமான முறையில் நடாத்தப்படுகின்றனவா என்ற கேள்வியும் சமகாலத்தில் எழுப்பப்படுகின்றன. பாடசாலைகளிலும,; பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உளவளத்துணை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளபோதிலும் அவற்றின் செயற்பாடுகள் வினைத்திறன்மிக்கதாக அமையவில்லை என்ற குற்றச் சாற்றுகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றன. 

குறிப்பாக, பாடசாலைகளில் வழிகாட்டல் மற்றும் உளவளத்துணை செயற்பாடானது தொழில்வாண்மை உளவளத்துணையாளர்களினால் முன்னெடுக்கப்படுவதில்லை. மாறாக ஓரிரு மாதகால உளவளத்துணைக்கான பயிற்சிகளை நிறைவு செய்தவர்களினால் இத்தகையை சேவை முன்னெடுக்கப்படுவதானது அச்செயற்பாடுகளில் வினைத்திறனற்ற நிலையயை ஏற்படுத்துவதுடன் எதிர்பார்க்கின்ற அடைவுகளை அளிப்பதாக அமையவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. இதன்நிமித்தம், பாடசாலைகளில் உளவளத்துணையாளர்களாக நியமிக்கப்படுகின்றவர்கள் தொழில்வாண்மை தகைமை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகின்றமையையும் சுட்டிக்காட்டுவது பொறுத்தமாகும்.

வழிகாட்டல் மற்றும் உளவளத்துணை செயற்பாடுகள் உரிய முறையில் வினைத்திறனுடன் முன்னெடுக்கப்படுகின்றபோது, பரீட்சைப் பெறுபேறுகள்; மாணவர்கள் மத்தியில் பாதிப்புக்களை ஏற்படுத்தாது. அத்துடன்  அவர்களிடத்தில் தன்னம்பிக்கையை வளர்க்கக் கூடியதாகவும் அமையும். 

அதனால், கல்வி வாழ்;க்கையில்  எதிர்நோக்குகின்ற வெற்றி தோல்விகள் அவர்களது எதிர்காலத்தை சூனியமாக்காது வளமுள்ளதாக்குவதற்கான வினைத்திறன்மிக்க வழிகாட்டல் ஆலோசனைகள் அவசியமாகிறது. இவை அவர்களின் கல்வி வாழ்க்கைக்கு மாத்திரமின்றி, முழு வாழ்க்கை பயணத்திலும் சவால்களை எதிர்கொண்டு வெற்றியாளர்களாக  மிளிர்வதற்கு வழிவகுக்கும். 


அத்துடன்து இப்பரீட்சை முடிவுகள் வெற்றியளித்திருந்தாலும் அல்லது எதிர்பார்ப்பை தோல்வியடைச் செய்திருந்தாலும். இப்பரீட்சை முடிவு என்பது வாழ்வுப் பயணத்தின் முடிவல்ல. இதுவே கல்வி வாழ்க்கையின் ஆரம்பமென உணர்ந்து எதிர்கால கல்வி நடவடிக்யை முறையான வழிகாட்டலின் மூலம் முன்னெடுக்க ஒவ்வொரு மாணவரும் முயற்சிக்க வேண்டுமென்பதை இக்கட்டுரை வலியுறுத்த விரும்புகிறது.

-எம்.எம்.ஏ.ஸமட்

No comments:

Post a Comment