UDA கல்முனை காரியாலயத்தை மூடும் நடவடிக்கை நிறுத்தம் - sonakar.com

Post Top Ad

Wednesday 13 February 2019

UDA கல்முனை காரியாலயத்தை மூடும் நடவடிக்கை நிறுத்தம்


நகர அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனைப் பிராந்தியக் காரியாலயத்தை மூடிவிட்டு அதனை அம்பாறையில் அமைந்துள்ள மாவட்டக் காரியாலயத்துடன் அலுவலகத்துடன் இணைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை கைவிடப்பட்டு, அதனை கல்முனை மாநகர சபையில் இயங்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் விடுத்த வேண்டுகோளின் பேரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான சட்ட முதுமாணி ரவூப் ஹக்கீம் அவர்களும் உள்ளூராட்சி, மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸ் அவர்களும் எடுத்துக் கொண்ட அவசர நடவடிக்கையின் பயனாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர் இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளார்.

கடந்த பல வருடங்களாக கல்முனையில் தனியார் கட்டிட மொன்றில் இயங்கி வருகின்ற நகர அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனைப் பிராந்தியக் காரியாலயத்திற்கு சொந்தக் கட்டிடம் இல்லாத விடயத்தையும் வாடகைப் பணம் அதிகம் செலுத்தப்படுவதாகவும் காரணம் காட்டி கடந்த வாரம் அதனை மூடிவிடுவதற்கான உத்தாவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து நகர அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனைப் பிராந்தியக் காரியாலயத்தை தொடர்ந்தும் கல்முனையில் இயங்க வைக்கும் பொருட்டு அக்காரியாலயத்திற்கு கல்முனை மாநகர சபையில் இடமளிப்பதற்கு தீர்மானம் மேற்கொண்டதுடன் அதற்கான இணக்கத்தைத் தெரிவித்து நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைமையகத்திற்கு அவசர கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்திருந்தார்.

இதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், உள்ளூராட்சி, மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் ஆகியோரின் கவனத்திற்கும் முதல்வர் கொண்டு சென்றார்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் துரிதமாக செயற்பட்டதன் பயனாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர் நேற்று செவ்வாய்க்கிழமை இதற்கான அங்கீகாரக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளர்.

இதன் பிரகாரம் அடுத்த ஒரு சில தினங்களில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனைப் பிராந்தியக் காரியாலயத்தை கல்முனை மாநகர சபை கட்டிடமொன்றுக்கு இடமாற்றுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

-அஸ்லம் எஸ்.மெளலானா

No comments:

Post a Comment