ஜூன் முதல் பிரதேச செயலகங்களில் கடவுச்சீட்டுக்களை வழங்க ஏற்பாடு - sonakar.com

Post Top Ad

Wednesday 6 February 2019

ஜூன் முதல் பிரதேச செயலகங்களில் கடவுச்சீட்டுக்களை வழங்க ஏற்பாடு


ஆட்பதிவுத்  திணைக்களத்தினால் வழங்கப்படும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகளை,  பிரதேச செயலகங்கள் மூலமாக வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக,  ஆட்பதிவுத்  திணைக்கள ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.    நாடளாவிய ரீதியில் உள்ள 331 பிரதேச செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆட்பதிவுத்  திணைக்களக்  கிளைக் காரியாலயங்களுக்கு ஒப்படைக்கப்படும் விண்ணப்பங்கள் யாவும்,  ஒன்லைன் மூலமாக கொழும்பில் உள்ள தலைமைக் காரியாலயத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதன் மூலம்,  மீண்டும் பிரதேச செயலகங்கள் மூலம் இவ்வடையாள அட்டைகள்  விநியோகிக்கப்படும். 


தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்காக,  கொழும்புக்கு வருவதனைக்  குறைக்கும் நோக்கிலேயே,  பிரதேச மட்டத்தில் இந்நடவடிக்கை பரவலாக்கப்பட்டுள்ளதாக,  ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.    பிரதேச செயலகங்கள் மூலம் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகள்  வழங்கப்படுவதை  இலகுபடுத்தும் நோக்குடன்,  மாகாணக்  காரியாலயங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படவுள்ளது. 
   
தற்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டும் மாகாணக்  காரியாலயங்கள் இயங்குகின்றன. 

இதேவேளை, கடவுச்சீட்டுக்களை வழங்கும் நடவடிக்கைகளை, மாவட்டச் செயலகங்கள் ஊடாக வழங்கும் நடவடிக்கைகள்,  இவ்வருடம் ஜூன் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படுமெனவும்  குடிவரவு, குடியகல்வுத்  திணைக்களம் அறிவித்துள்ளது.    கடவுச்சீட்டுக்களைப்  பெறுவதற்காக,  மக்கள் கொழும்பிற்கு சமுகமளித்து அலைவதைத்  தடுக்கும் நோக்குடன்,  மாவட்ட மட்டத்தில் குடிவரவு, குடியகல்வுத்  திணைக்களக்  கிளைக் காரியாலயங்களை அமைத்து,  ஒன்லைன் மூலமாக கொழும்பில் உள்ள தலைமைக்  காரியாலயத்துக்கு அனுப்பி வைப்பதன் மூலம், மாவட்டச் செயலகங்கள் மூலம் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படவுள்ளன. 

தற்போது சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டுக்கள் மாத்திரம் குடிவரவு, குடியகல்வுத்  திணைக்களத்தால் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

-ஐ. ஏ. காதிர் கான்

No comments:

Post a Comment