அலவத்துகொட: குப்பைக் குவிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்! - sonakar.com

Post Top Ad

Thursday 10 January 2019

அலவத்துகொட: குப்பைக் குவிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்!


அலவத்துகொட, இயல்காமம் பகுதியில் அக்குறணை பிரதேச சபையினால் குப்பை குவிக்கப்படுவதை எதிர்த்து பிரதேச மக்கள் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


குறித்த பகுதியில் குப்பைகள் குவிக்கப்படும் போது அவை கம்போஸ்ட் (உரமாக்க) செய்யப்படுவதற்காகவே அங்கு கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அங்கு கொண்டு வரப்படும் குப்பைகளில் சிறு பகுதியே இவ்வாறு கம்போஸ்ட் செய்யப்படுவதாகவும் பெரும்பாலான குப்பைகள் அங்கேயே கைவிடப்பட்டு குவிந்துள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.




இதன் பின்னணியில் மக்கள் சுகாதார சீர்கேடுகளை சந்திப்பதுடன் துர்நாற்றம் வீசுவதனால் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் இதனால் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏலவே பாலர் பாடசாலையொன்று மூடப்பட்டுள்ளதுடன் பல கிணறுகளும் மூடப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.


அங்கு குப்பை குவிப்பதை நிறுத்தும் வரை தொடர்ந்தும் போராடப் போவதாக மக்கள் தெரிவிக்கின்ற அதேவேளை நேற்றைய தினம் அக்குறணை பிரதேச சபைத் தலைவர் இஸ்திஹார் உட்பட்ட குழுவினர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்த முனைந்திருந்த போதும் இணக்கப்பாடு எதுவுமற்ற நிலையில் போராட்டம் தொடர்கிறது.

அரசாங்கம் பெருந்தொகை பணச் செலவில் குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதாக பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

-மொஹொமட் ஆஸிக்

No comments:

Post a Comment