சமூக ஊடகங்களுக்கு உதவ தனவந்தர்கள் முன் வரவேண்டும்! - sonakar.com

Post Top Ad

Thursday 5 April 2018

சமூக ஊடகங்களுக்கு உதவ தனவந்தர்கள் முன் வரவேண்டும்!



முஸ்லிம் சமூகம் இனியும் தங்களால் நடத்தப்படும் சிங்கள மற்றும் ஆங்கில மொழி ஊடகங்களை ஆரம்பிக்க முன்வராவிடின் இந்த சமூகத்தைப் பற்றிய தப்பபிப்பிராயங்கள் நாளுக்கு நாள் வளர்வது தவிர்க்க முடியாத ஒன்றாக அமையும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் தெரிவித்தார்.

கல் - எளிய முஸ்லிம் மகளிர் அறபுக் கல்லூரியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நடத்திய ‘21ஆம் நூற்றாண்டில் ஊடகம்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் சான்றிதழ் வழங்கும் வைபவத்துக்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவத்தார்.

இந்த நிகழ்வில், மேலும் பேசிய அமீன் கூறியதாவது:

உங்களுடைய தலைவர் இந்த நாட்டிலே இலங்கை மின்சார சபையின் தலைவராக இருந்திருக்கிறார். 3வருட காலம் சந்திரிகா, ரணிலுடைய தலைவராக இருந்தார். இந்த நாட்டில் முஸ்லிம்கள் மத்தியிலே இவ்வாறான பதவிகளை வகிக்கக் கூடியவர்கள் இருக்கின்றார்கள். சாதாரண அரசியல் நியமனம் அல்ல. அது அவர் ஒரு பொறியியலாளர், நாட்டினுடைய இலங்கை மின்சார சபை என்பது முழு நாட்டுக்கும் ஒளியூட்டுகின்ற ஒரு நிறுவனம். அந்த நிறுவனத்தை சிறப்பாக செய்த பெருமை அன்னாருக்கு இருக்கின்றது.

வேற்றுமதத்தவருக்கு என்னவென்றால் முஸ்லிம் சமூகம் என்றால் படித்தோர்கள் இல்லை. வியாபாரிகள் நாட்டுப் பற்று இல்லாதவர்கள் அக்கறை இல்லாதவர்கள் என்று சொல்லும் பொழுது நாட்டினுடைய மின்சார சபையை சீர் செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இலங்கை மின்சார சபை தலைவராக ஒரு முஸ்லிமை தெரிவு செய்தார் என்கின்ற பொழுது முஸ்லிம் சமூகம் கண்திறந்து பார்த்தது.

இங்கு படிக்கும் மாணவிகள் இந்த கல்லூரியோடு படித்து முடிப்பது அல்ல. அதை விட உங்கள் இலக்கு தூரமாக இருக்க வேண்டும். இன்று உலகத்திலே முஸ்லிம் நாடுகளிளிலே எமக்கு கதவுகள் திறக்கப்பட்டு இருக்கின்றன. உயர் கல்வி வாய்ப்புக்கள். இன்னும் 10 வருடங்களிலோ 5 வருடங்களிலோ உங்களை சந்திக்கும் பொழுது கல் எளியவிலே நாங்கள் வந்து போதித்த இந்த மாணவிகள் உலகில் இந்த நிலையில் இருக்கின்றார்கள், கலாநிதிகளாக இருக்கிறார்கள், நல்ல உயர் பதவிகளிலே இருக்கிறார்கள், விரிவுரையாளர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லக் கூடிய, பெருமைப்படக் கூடிய நிலைக்கு நீங்கள் மாற வேண்டும்.

அதுதான் எங்களுடைய பிரார்த்தனை அதற்காக நீங்கள் மனம் வைத்தால் அந்த இடத்தை நீங்கள் அடையலாம். அதற்கான சூழல் இங்கே இருக்கிறது. ஆகவே நீங்கள் இங்கே இருக்கின்ற கால கட்டத்தில் உங்களுடைய பெறுமதியான இந்த கால கட்டத்தை அந்த அர்ப்பணத்தோடு முயற்சிக்க வேண்டும் என்பதை கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

நாங்கள் இந்த நாட்டிலே முஸ்லிம்களுக்காக ஊடகம் இல்லை என்ற இந்த பின்னணியின் மத்தியில் தான் உங்களுக்கு இந்த கருத்தரங்கை நடத்துகின்றோம். எங்களுக்கு மத்தியிலே நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் உருவாகி இருக்கிறார்கள். என்றாலும் கூட சமுதாயம் முஸ்லிம் ஊடகங்களுக்கு கைகொடுப்பதாக இல்லை.

அதுதான் மௌலவி நௌபர் உரையிலே சொன்னார்,  நூற்றுக்கணக்காண பள்ளிகளை கட்டுகிறார்கள். அதாவது வேறு தேவையற்ற செலவுகளுக்கு சேர்க்கிறார்கள். சமூகத்தினுடைய இருப்பை பாதுகாக்கக் கூடிய ஊடகத்துக்கு பங்களிப்பு செய்வதற்கு இந்த நாட்டினுடைய தனவந்தர்கள் தயக்கம் காட்டுகிறார்கள், அல்லது ஆர்வம் காட்டவில்லை. திகனையில் நடந்தது  நாளை இன்னுமொரு இடத்தில நடக்கலாம். நடக்கக் கூடாது என்பதே எங்களுடைய பிரார்த்தனை.

அப்படியென்றால் உங்களுடைய தலைவர் கூறியது போன்று 10 சதவீதம் வாழ்கின்ற நாங்கள் எங்களுடைய நல்ல விடயங்களை நாட்டின் பெரும்பான்மை சமூகத்திற்குச் சொல்ல வேண்டும். அதை சொல்வதற்கு எங்களுடைய சமூகத்திலே சிங்களத்திலே ஊடகம் வர வேண்டும். ஆங்கிலத்திலே ஊடகம் வர வேண்டும். ஒவ்வொரு ஊருக்கு பள்ளிவாசல்களை போட்டிக்குப் போட்டியாக கட்டுவதை விட இன்று இதற்கே முன்னுரிமையளிக்க வேண்டும்.

எங்களுடைய இருப்பை இஸ்லாமிய அடிப்படையில் வாழ முடியாத சூழல் ஏற்பட்டால் எங்களுடைய சகோதரிகளுக்கு தங்களுடைய ஆடைகளை உடுத்துக் கொண்டு வீதியில் போக முடியாத நிலை ஏற்பட்டால் இந்த பள்ளிவாசலில் இருந்து என்ன பலன்.

இந்த நாட்டிலே நான் சொன்னேன் 49 தொலைக்காட்சிகள் இருக்கின்றன. ஒரு தொலைக்காட்சி அலைவரிசை கூட இதுவரை முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை. இப்போது தான் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றது. அதுவும் இன்னும் முழுமையான ஒரு ஊடகமாக மாறவில்லை.
தர்க்க கருத்துக்களை விதைக்கின்ற நாட்டினுடைய ஊடகங்களை பாருங்கள். எத்தனை சிங்கள ஊடகங்கள் ஒரு நொடிப் பொழுதிலே எங்களை பற்றிய நல்லெண்ணத்தை சீர்குலைக்கக் கூடிய வகையில் தங்களுடைய ஊடகங்களை பயன்படுத்துகிறார்கள். இரவு 9.00 மணி அல்லது 9.30 மணி செய்தியிலே எங்களை பற்றிய நஞ்சை விட்டுத் தான் அடுத்த நாள் காலை எங்களுக்கு என்ன நடக்குமோ? என்று தெரியாது. அதற்கு பதில் சொல்வதற்கு எங்களுடைய கையிலே ஊடகம் இல்லை. அதற்கு எப்படி பதில் சொல்வது? எங்களுடைய நிலைமையை எப்படி சொல்வது? இந்த நாட்டுக்காக அர்ப்பணம் செய்திருக்கின்ற நிலைமைகளை எப்படி சொல்வது? இந்த நாட்டை முஸ்லிம் சமூகம் கட்டிக் காத்திருக்கிறது. இந்த நாட்டை உலகத்துக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. என்றெல்லாம் சொல்வதற்கு எங்களுடைய கையில் ஊடகம் இல்லை.

முஸ்லிம் சமூகம் இனியும் தங்களுக்கான ஊடகங்களை சிங்களத்தில் ஆங்கிலத்தில் தமிழில் உருவாக்கத் தவறினால் இந்த சமூகத்தை பற்றிய தப்பபிப்பிராயம் நாளுக்கு நாள் வளர்க்கப்பட்டு இந்த சமூகத்துக்கு நாட்டுப் பற்று இல்லை, இந்த சமூகம் தங்களை பற்றி மட்டுமே சிந்திக்கின்றது, இந்த சமூகத்திற்கு தேசிய நோக்கம் இல்லை என்றெல்லாம் நாளாந்தம் எழுப்பப்படுகின்ற குற்றச்சாட்டுக் கெல்லாம் பதிலளிக்க முடியாத ஒரு பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது.

இந்த சமூகத்தினுடைய ஊடகத்தை வழிநடாத்துகின்ற வகையில் நாம் படுகின்ற பாடு, படுகின்ற கஷ்டம் குறைந்த பட்சம் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் இந்த பத்திரிகைகளை வாங்குகின்றார்களா? என்றால் இல்லை நீங்கள் இந்த விடுமுறைக்கு வீடுகளுக்குச் சென்றால் பெற்றார்களிடம் சொல்லி குறைந்த பட்சம் இந்த சமூகத்துக்காக வெளியிடப்படுகின்ற பத்திரிகைகளை அது விடிவெள்ளியாக இருக்கலாம். நவமணியாக இருக்கலாம் மீள்பார்வையாக இருக்கலாம். எங்கள் தேசம் ஆக இருக்கலாம். ஏனைய பத்திரிகைகளாக இருக்கலாம். அவற்றை வாங்குவதற்கு சொல்லுங்கள். வாங்கினால் மட்டும் தான் அவற்றை இயக்குனர்களால் தொடர்ந்து செய்ய முடியும். என்றார்.

-

No comments:

Post a Comment